தினமலர் 07.08.2013
வீட்டுவசதி வாரியத்தின் 1,224 வாடகை வீடுகள் விரைவில் இடிப்பு புதிய ஒதுக்கீடுகளுக்கு தடை
சென்னை :சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர், ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனி, லாயிட்ஸ் காலனி ஆகிய இடங்களில் உள்ள, 1,224 வாடகை குடியிருப்புகளை விரைவில் இடிக்க வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது.
வீட்டுவசதி வாரியத்தின் 1,224 வாடகை வீடுகள் விரைவில் இடிப்பு புதிய ஒதுக்கீடுகளுக்கு தடை
சென்னை :சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர், ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனி, லாயிட்ஸ் காலனி ஆகிய இடங்களில் உள்ள, 1,224 வாடகை குடியிருப்புகளை விரைவில் இடிக்க வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது.
சென்னையில் பட்டினப்பாக்கம், பீட்டர்ஸ் சாலை, லாயிட்ஸ் காலனி, அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்களுக்கான வீட்டுவசதி வாரிய வாடகை குடியிருப்புகள் உள்ளன.
அறிவிப்பு
அவற்றில், பட்டினப்பாக்கத்தில் இருந்த, 1,112 வீடுகளை இடித்து விட்டு, 2,385 வீடுகளுடன் அதிக தளங்கள் கொண்ட புதிய குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டது. அந்த திட்டம் இறுதி செய்யப்பட்டு விட்டபோதிலும் கட்டுமான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.
இதற்கு அடுத்தபடியாக, 2012 -– 13 நிதி ஆண்டில், சென்னையில் தாடண்டர் நகர், பீட்டர்ஸ் காலனி, லாயிட்ஸ் காலனி ஆகிய இடங்களில் உள்ள, 2,522 வாடகை குடியிருப்புகள், 1,770 சுயநிதி குடியிருப்புகள் என, மொத்தம், 4,292 வீடுகள் இடிக்கப்பட்டு புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என, அரசு அறிவித்தது.
நடவடிக்கை
அந்த அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இது தொடர்பான பணிகள் துவங்கப்படாமல் உள்ளன. இதனால், அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து வீட்டுவசதி வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த, 2012- –13 நிதி ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் முதல்கட்டமாக, 1,224 வீடுகளை இடிக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. அவற்றில், தாடண்டர் நகரில், 638 வீடுகளும், பீட்டர்ஸ் காலனியில், 346 வீடுகளும், லாயிட்ல் காலனியில், 240 வீடுகளும் இடிக்கப்பட உள்ளன.
அந்த வீடுகள் உள்ள குடியிருப்புகளில் புதிதாக ஒதுக்கீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த கட்டடங்களை இடிக்க மாநகராட்சியிடம் அனுமதி கோரும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.