தினகரன் 26.10.2010
மானிய வட்டியில் வீட்டு கடன் விண்ணப்பம் வினியோகம்
திருவொற்றியூர், அக்.26: நகர்புற ஏழை மக்கள் மானிய வட்டியில் கடன் பெற்று வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. வீட்டு வசதி வாரியம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் திருவொற்றியூர், எண்ணூர், மணலி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் வீட்டு கடன் பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூர் விம்கோ நகரில் நேற்று நடந்தது.
வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தை வழங்கினார். இத்திட்டத்தின் விவரம், கடன் பெறுவது எப்படி, சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் விதிமுறைகள் பற்றி அதிகாரிகள் விளக்கமளித்தனர். நகராட்சி துணை தலைவர் ராமநாதன், கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், தெபோரா, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் ஆதிகுருசாமி உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.