தினமணி 21.09.2010
குடிநீர் விரிவாக்கத் திட்டப் பணிகள்: ஜப்பான் வங்கிப் பிரதிநிதிகள் ஆய்வு
திருச்சி, செப். 20: திருச்சி மாநகராட்சிப் பகுதியில் ரூ. 143 கோடியில் செயல்படுத்தப்படும் குடிநீர் விரிவாக்கத் திட்டப் பணிகளை உலக ஒற்றுமைக்கான ஜப்பான் வங்கியின் பிரதிநிதிகள் ஒய். சேனா, டி. இட்டோ உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருச்சி மாநகராட்சியிலுள்ள அனைத்துப் பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ரூ. 143 கோடியில் குடிநீர் விரிவாக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, கொள்ளிடம் ஆற்றில் 3 கிணறுகள், 2 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், 35 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் என பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், உலக ஒற்றுமைக்கான ஜப்பான் வங்கிப் பிரதிநிதிகள் ஒய். சேனா, டி. இட்டோ ஆகியோரைக் கொண்ட குழு திங்கள்கிழமை திருச்சி வந்தது. அவர்கள் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக, மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திலும் இவர்கள் பங்கேற்று விரிவாக ஆய்வு மேற்கொண்டனர். இக்குழுவினருடன் மாநகராட்சி ஆணையர் த.தி. பால்சாமி, ஜப்பான் வங்கியின் இந்தியப் பிரதிநிதி மற்றும் முதுநிலை மேம்பாட்டு வல்லுநர் மிகிர் சோர்டி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி வசதி சேவைக் கழக உதவித் துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.