போக்குவரத்து நெரிசல் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்க புதிய திட்டம்: கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர் தகவல்

Tuesday, 03 November 2009 06:42 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினமணி 3.11.2009

போக்குவரத்து நெரிசல் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்க புதிய திட்டம்: கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர் தகவல்

சென்னை, நவ. 2: சென்னையில் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அது குறித்து எஸ்.எம்.எஸ். சேவை மூலம் வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்க புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மாநகரப் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் எம். ஷகீல் அக்தர் தெரிவித்தார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களை பண்பலை வானொலி அலைவரிசைகள் மூலம் உடனுக்குடன் அறிவிக்க வகை செய்யும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்து நிருபர்களிடம் அவர் கூறியது:

சென்னையில் பல்வேறு காரணங்களால் ஊர்வலம், பொதுக்கூட்டம், தொடர் ஓட்டம், சாலை மறியல், சீரமைப்புப் பணிகள் உள்ளிட்டவை காரணமாக பிரதான சாலையில் போக்குவத்து நெரிசல் ஏற்படுகின்றன.

இது போன்ற சமயங்களில் வாகனப் போக்குவரத்து முடங்கிவிடாமல் இருக்க போக்குவரத்து வேறு பாதைகளுக்கு திருப்பி விடப்படுகின்றன.

இத்தகைய நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதுடன் திட்டமிட்டபடி தங்கள் பணிகளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் குறித்த முன்னறிவிப்பு இருந்தால் சாலைகளில் வாகனங்கள் முடங்குவது தவிர்க்கப்படுவதுடன் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமமும் குறையும்.

எனவே, போக்குவரத்து நெரிசல் குறித்த முன்னறிவிப்பை உடனுக்கு உடன் வெகுஜன ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக போக்குவரத்து நெரிசல் குறித்து வரும் தகவல்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைத்து பண்பலை வானொலி நிலையங்களுக்கும் செல்போன் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு வரும் தகவல்களை தங்களது நிகழ்ச்சிகளுக்கு நடுவில் உடனுக்குடன் அறிவிக்க பண்பலை வானொலி நிலைய நிர்வாகிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

செல்பேசி மூலம்: இதனையடுத்து போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்கள் செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் உதவியுடன் எஸ்.எம்.எஸ்.களாக பொது மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

இதற்கான புதிய திட்டம் இன்னும் 15 நாள்களில் அறிமுகப்படுத்தப்படும்.

எண் பலகைகள்: வாகனங்களின் எண் பலகை விதி மீறல்கள் தொடர்பாக கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக இதுவரை 40 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக தலா ரூ. 50 வசூலிக்கப்பட்டுள்ளது.

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக ஆட்டோ ஓட்டுநர்கள் மீது 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார் ஷகீல் அக்தர்.

Last Updated on Tuesday, 03 November 2009 06:43