புதிய 100 வால்வோ ஏசி பஸ்கள்! மாநகர போக்குவரத்து கழகம் ஏற்பாடு

Wednesday, 19 August 2009 06:15 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற போக்குவரத்து
Print

தினமணி 19.08.2009

புதிய 100 வால்வோ ஏசி பஸ்கள்! மாநகர போக்குவரத்து கழகம் ஏற்பாடு


சென்னை, ஆக. 18: சென்னையில் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு இயக்குவதற்காக மேலும் 100 வால்வோ ஏசி பஸ்கள் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பால்ராஜ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

சென்னையில் பயணிகளிடையே மாநகர வால்வோ ஏசி பஸ்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து மேலும் 100 வால்வோ ஏசி பஸ்கள் வாங்கப்பட உள்ளன. ஐடி நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் நிறைந்துள்ள ராஜீவ் காந்தி எக்ஸ்பிரஸ் சாலை உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் தேவைக்கேற்ப இந்த ஏசி பஸ்கள் இயக்கப்படும்.

மேம்பால ரயில் நிலையங்களுக்கு பஸ் வசதி: சென்னையில் மேம்பால ரயில் நிலையங்களுக்கு மேலும் பஸ் வசதியை அதிகரிப்பது குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

தற்போது பூங்கா, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட 11 மேம்பால ரயில் நிலையங்களுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதேபோல சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், கலங்கரை விளக்கம் ஆகிய மேம்பால ரயில் நிலையங்களுக்கு மாநகர பஸ் சேவைகள் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படுகின்றன. பயணிகள் வரத்துக்கு ஏற்ப இந்த பஸ் சேவைகள் அதிகரிக்கப்படும்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முக்கிய இடங்களுடன் மேம்பால ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மாநகர பஸ் சேவைகளை போதிய அளவில் இயக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் பால்ராஜ்.