24,000 பள்ளி மாணவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸில் சீருடை: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Thursday, 24 May 2018 07:25 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

 தி இந்து        24.05.2018

24,000 பள்ளி மாணவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸில் சீருடை: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 24,000 பேருக்கு இலவசமாக 2 செட் சீருடைகளை வழங்குவதற்காக ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் துணிகளை கொள்முதல் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அவர்களின் சொந்த செலவிலேயே சீருடைகளை வாங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2 செட் சீருடைகளை இலவசமாக வழங்கி வருகிறது.

2018-19 நிதியாண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 24,195 என மாநகராட்சி நிர்வாகம் கணக்கிட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு 2 செட் சீருடைகளை இலவசமாக வழங்க உள்ளது. அதற்கான துணிகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் வாங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்படும்போது, அவர்களுக்கு சீருடைகளை வழங்கும் விதமாக பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.