தினமணி 07.02.2014
732 மாணவர்களுக்கு ரூ. 84 லட்சம் ஊக்கத்தொகை: மேயர் சைதை துரைசாமி வழங்கினார்
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து, தற்போது உயர்கல்வி பயிலும் 732 மாணவ, மாணவியருக்கு ரூ. 83.91 லட்சம் மதிப்பிலான ஊக்கத்தொகையை மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி: சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் படித்து 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.
இதன்படி சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் 732 மாணவர்களுக்கு ரூ. 83.91 லட்சம் அளவிலான ஊக்கத் தொகையை மேயர் சைதை துரைசாமி வியாழக்கிழமை வழங்கினார்.
இதில் முதலாமாண்டு பயிலும் 275 பேருக்கு ரூ. 42 லட்சமும், இரண்டாமாண்டு பயிலும் 225 பேருக்கு ரூ. 18.25 லட்சமும், மூன்றாமாண்டு பயிலும் 205 பேருக்கு ரூ. 17.51 லட்சமும், நான்காமாண்டு பயிலும் 27 பேருக்கு ரூ. 6.15 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், தியாகராய நகர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. கலைராஜன், துணை ஆணையர் (கல்வி) ரா. லலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.