மாலைநேர வகுப்பில் மாணவிகளுக்கு சுண்டல்: ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ

Tuesday, 21 January 2014 00:00 administrator நாளிதழ்௧ள் - ௧ல்வி
Print

தினமணி             21.01.2014 

மாலைநேர வகுப்பில் மாணவிகளுக்கு சுண்டல்: ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ

திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மாலை நேர வகுப்பின்போது சுண்டல் வழங்க கலசப்பாக்கம் எம்எல்ஏ அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், இப்பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு சிற்றுண்டி (சுண்டல்) வழங்கும் விழா திங்கள்கிழமை தொடங்கியது.

விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் தலைமை வகித்தார். எம்எல்ஏவும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று சுண்டல் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாணவிகளுக்கு சுண்டல் வழங்க தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்தை பள்ளித் தலைமை ஆசிரியையிடம் நன்கொடையாக வழங்கினார்.

துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இரா.முத்துக்குமாரசாமி, பொருளாளர் ஏ.ஜி.பஞ்சாட்சரம், தலைமை ஆசிரியர் ப.ஜோதிலட்சுமி, உதவித் தலைமை ஆசிரியர் த.தனசேகரன், மருத்துவர் முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.