தினமணி 01.07.2013
ரூ.45 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்திப் பணி
திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.45 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி தீர்மானித்துள்ளது.
உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்புதல் நிதியின்கீழ், குடிநீர் அபிவிருத்திப் பணிகளை ரூ.10.85 கோடி மதிப்பில் மேற்கொள்ள திருப்பூர் மாநகரட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிதியுடன் மாநகராட்சி நிதியையும் சேர்த்து மொத்தம் ரூ.12.21 கோடி மதிப்பில் முதலாவது மண்டலத்தில் குடிநீர் அபிவிருத்திப் பணி மேற்கொள்ள திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
இதில், மூகாம்பிகை காலனியில் ரூ.1.47 கோடி மதிப்பீட்டில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி, அதே பகுதியில் ரூ.69 லட்சம் செலவில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்டத் தொட்டி, ரூ.74 லட்சம் செலவில் பகிர்மானக் குழாய்கள் உள்பட பல்வேறு குடிநீர் அபிவிருத்திப் பணிகளுக்காக மொத்தம் ரூ.12.21 கோடி ஒதுக்கீடு செய்து, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 2,3, 4-வது மண்டலங்களில் மொத்தம் ரூ.32.78 கோடி மதிப்பில் குடிநீர் அபிவிருத்திப் பணிகளுக்காக திட்ட மதிப்பீட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான கருத்துரு நகராட்சி ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்புவதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.