ரூ.250 கோடியை பெறுவதில் மதுரை மாநகராட்சி தாமதம்!

Friday, 10 August 2012 05:43 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற ௨ள்ளாட்சி நிதி
Print

தினமலர்    09.08.2012

ரூ.250 கோடியை பெறுவதில் மதுரை மாநகராட்சி தாமதம்!

மதுரை:மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சமர்ப்பிக்கும் வளர்ச்சி திட்ட மதிப்பீடு ஆவணங்கள் திருப்தியளிக்காததால், அரசால் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதனால், அரசின் ரூ.250 கோடி நிதியை பெறுவதில் தாமதம் நிலவுகிறது. முந்தைய தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்மூலம், பாதாளச் சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் திட்டங்கள் துவங்கின. மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 20 சதவீதம், மாநகராட்சி 30 சதவீதம் நிதி பங்களிப்பு வழங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் நிதியில் தொடங்கிய திட்டம், மாநகராட்சி யின் பங்களிப்பு இல்லாமல், பாதியில் முடங்கியது. மத்திய, மாநில அரசுகள் வழங்கிய நிதி, பல வகையில் சூறையாடப்பட்டதால், திட்டம் 50 சதவீதம் கூட நிறைவேறவில்லை. இதனால், முக்கிய மூன்று திட்டங்களை இழந்து, மாநகராட்சி மக்கள் தவிக்கின்றனர்.

ஆட்சி மாற்றத்திற்கு பின், மாநகராட்சியில் முடங்கிய திட்டங்கள் நிறைவு பெற, முதல்வர் ஜெயலலிதா ரூ.250 கோடி ஒதுக்கினார். அதற்குரிய திட்ட மதிப்பீடு ஆவணங்களை சமர்ப்பிக்க, மாநகராட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அடுத்த நொடியில், அவசரமாக ஆவணங்கள் தயாராகின.

சென்னைக்கு கிளம்பிய அதிகாரிகளுக்கு, அதன் பின் நடந்தவை அனைத்தும் சோகம். மாநகராட்சி சமர்ப்பித்த ஆவணங்களில் திருப்தி இல்லாமல், அரசு திருப்பி அனுப்பியது. சென்னை-மதுரைக்கு அலைந்து, அதிகாரிகளே வெறுத்து போகும் அளவுக்கு, ஆவணங்களில் குறைகள் இருந்தன. "நாள் கணக்கில் இருந்து, வாரக்கணக்கில் மாறி, தற்போது, மாதக்கணக்கில்' என்ற நிலைக்கு வந்து விட்டது. தற்போது தான், நகராட்சி நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று, நிதி தொடர்பான ஆவணங்கள், நிதித்துறையின் பரிசீலனைக்கு சென்றுள்ளதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"மாநகராட்சியில்    நிதி   இல்லை; கிடைகும் நிதியை பெறுவதிலும் அக்கறை காட்டவில்லை,' என்பதற்கு,    இது    ஒரு    உதாரணம்.   இனி     ஒருமுறை    ஆவணம்    திரும்பி    வராதபடி, பார்த்துக்கொண்டால், மாநகராட்சிக்கு நல்லது.