கடையநல்லூரில் முரண்பட்ட வீட்டுவரியை ஆணையரே மாற்றியமைக்க அரசு அனுமதி

Monday, 24 August 2009 06:03 administrator நாளிதழ்௧ள் - வரி விதிப்பு
Print

தினமணி 23.08.2009

கடையநல்லூரில் முரண்பட்ட வீட்டுவரியை ஆணையரே மாற்றியமைக்க அரசு அனுமதி

கடையநல்லூர், ஆக. 22: கடையநல்லூர் நகராட்சியில் வீடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முரண்பட்ட வரி விதிப்பினை நகராட்சி ஆணையரே மாற்றியமைத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடையநல்லூர் நகராட்சியில் சில மாதங்களுக்கு முன் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு முந்தைய வரிவிதிப்பினை விட பல மடங்கு வரி உயர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து கடையநல்லூர் எம்.எல்.. பீட்டர்அல்போன்ஸ் இப்பிரச்னை குறித்து சட்டப் பேரவையில் பேசினார். இதையடுத்து கடையநல்லூர் நகராட்சியில் வரி உயர்வு குறித்து சிறப்புக் குழுவினர் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையை அளித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து பீட்டர்அல்போன்ஸ் கூறியதாவது; கடையநல்லூர் நகராட்சியில் 600 வீடுகளுக்கு நியாயமற்ற வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து, இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

இந்நிலையில் இதில் 106 வீடுகளுக்கான வரிவிதிப்பினை நகராட்சி ஆணையரே மாற்றியமைத்துக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

எஞ்சியுள்ள வீடுகளின் வரி விதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.