தினமணி 23.07.2009
மாதாந்திர ஊர்திப் படி தொகை உயர்வு
புதுச்சேரி, ஜூலை 22: புதுச்சேரி நகரமன்றம் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து மன்றங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளின் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு மாதாந்திர ஊர்திப் படித் தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து புதுச்சேரி அரசு பொது சுகாதாரத் துறை அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் உள்ள நகரமன்றங்கள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து மன்றங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளின் தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஊர்திப் படித் தொகையினையும், மாதாந்திர பயணப்படித் தொகையினையும் உயர்த்தி வழங்குமாறு கேட்டு நீண்டகாலமாக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளின் கோரிக்கையினை அரசு பரிசீலித்து அவர்களுக்கு வழங்கி வரும் தொகைகளை உயர்த்தி கடந்த 17-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.
இதன்படி நகராட்சி தலைவர்களுக்கு ரூ.6000-மும், துணைத்தலைவர்களுக்கு ரூ.4000-மும், மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.3000-மும் பயணப்படித் தொகை வழங்கப்பட உள்ளது.
கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு தலைவர்களுக்கு ரூ.5000-மும், துணைத்தலைவர்களுக்கு ரூ.4000-மும், மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.3000-மும், கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு ரூ.3000-மும், துணைத்தலைவர்களுக்கு ரூ.2000-மும், மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.1000-மும் பயணப்படித் தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது