தினமணி 12.02.2014
மதுரை மாநகராட்சியில் தேர்தல் பணிக்காக புதிதாக துணை வட்டாட்சியர் நிலையில் இருஅதிகாரிகளை நியமிக்க அரசுக்கு பரிந்துரை
மக்களவைத் தேர்தலையொட்டி, மதுரை மாநகராட்சியில் தேர்தல் பணியில் ஈடுபடுத்த புதிதாக 2 துணை வட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகளை உதவி ஆணையர் பணியில் அமர்த்த அரசுக்கு ஆணையாளர் கிரண்குராலா பரிந்துரை செய்துள்ளதாக, மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாநகராட்சியில், தற்போது துணை வட்டாட்சியர் நிலையில் மேற்கு மண்டல உதவி ஆணையாó ரெகோபெயாம், கிழக்கு மண்டல உதவி ஆணையாó சின்னம்மாள் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இது தவிர தெற்கு மண்டலத்தில் உதவி ஆணையாளரான அ.தேவதாஸ், வடக்கு மண்டல உதவி ஆணையாளராக கூடுதல் பொறுப்பும் வகித்து வருகிறார். உதவி ஆணையாளர் கணக்கு தவிர்த்து துணை வட்டாட்சியர் நிலையில் மேலும் 2 பணியிடங்கள் மாநகராட்சியில் காலியாக இருக்கின்றன. இந்தப் பணியிடங்களுக்கு பொறுப்பு நிலையிலான அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் பணியில் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் (4 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி) மாவட்ட தேர்தல் அலுவலரான, ஆட்சியருக்கு அடுத்த நிலையில் பணியாற்ற மாநகராட்சியிலிருந்து துணை வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்கள் பணியமர்த்தப் பட வேண்டும். இந்தப் பணியில் மண்டல உதவி ஆணையர்கள் ஈடுபடுத்தப்படுவது வாடிக்கை. அந்த வகையில், ரெகோபெயாம், சின்னம்மாள் மட்டுமே துணை வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்களாக இருப்பதால், மேலும் 2 துணை வட்டாட்சியர் நிலையிலான அலுவலர்களை நியமிக்க அரசுக்கு ஆணையாளர் கிரண்குராலா பரிந்துரை செய்துள்ளார்.
அரசு தரப்பில் 2 துணை வட்டாட்சியர்கள் ஒதுக்கீடு செய்யப்படாத பட்சத்தில், மாநகராட்சியில் அந்த நிலையிலான அலுவலர்களை ஆணையாளர் நியமித்துக் கொள்ள அனுமதி கொடுக்கப்படும். இதற்கான முன்னேற்பாடாக, பொறியியல் பிரிவிலிருந்து துணை வட்டாட்சியர் நிலையிலான 2 அலுவலர்களை மண்டல உதவி ஆணையர்களாகவும், தேர்தல் அலுவலர்களாகவும் நியமிக்க ஆணையாளர் மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளதாக மாநகராட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.