ரூ.10.70 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

Monday, 03 February 2014 11:55 administrator நாளிதழ்௧ள் - ந௧ர்ப்புற மேம்பாடு
Print

தினமணி             03.02.2014

ரூ.10.70 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

ஈரோடு மாநகராட்சி மற்றும் பெருந்துறை தொகுதியில் ரூ.10.70 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார். ஈரோடு மாநகராட்சியில், ஈரோடு சென்னிமலை சாலை முதல் பெரியசடையம்பாளையம் சாலையை இணைக்கும் வகையில் ரூ.10.09 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி, பெருந்துறை தொகுதியில் கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி ஸ்ரீராம் நகர் பகுதியில் ரூ.5.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி, பெருந்துறை பேரூராட்சி ஜீவா நகர் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சலை அமைக்கும் பணி, பெரியவிளாமலை ஊராட்சியில் கண்ணவேலம்பாளையம் பகுதியில் கீழ்பவானி திட்ட பிரதான கால்வாயின் குறுக்கே ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி என மொத்தம் ரூ.10.70 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டப் பணிகளை பூமி பூஜை நடத்தி அவர் தொடங்கிவைத்தார்.

அமைச்சர் வெங்கடாசலம் பேசும்போது, ஈரோடு மாநகராட்சியில் ஈரோடு சென்னிமலை சாலையையும், பெரியசடையம்பாளையம் சாலையையும் இணைப்பதற்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்று ரூ.10.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். இப்பாலம் 18 மாதத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் என்றார்.இந்நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் கே.வி.இராமலிங்கம், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. ஆர்.என்.கிட்டுசாமி, ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாநகர் மாவட்ட அதிமுக வழக்குரைஞர் பிரிவு செயலர் துரை.சக்திவேல், மண்டலக் குழு தலைவர்கள்  இரா.மனோகரன், பி.கேசவமூர்த்தி, மாவட்ட சிந்தாமணி தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாமன்ற உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.