தினமணி 11.05.2017
மாநகராட்சி, நகராட்சிகளில் பகுதிகளை சேர்ப்பது, நீக்குவது அரசின் கொள்கை முடிவு: உயர்நீதிமன்றம்
மாநகராட்சி, நகராட்சிகளில் புதிய
பகுதிகளைச் சேர்ப்பது, நீக்குவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு, அதில்
நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு
பகுதிகளை (1,2) சென்னை மாநகராட்சியின் ஏழாவது மண்டலத்தில் சேர்க்க
உத்தரவிடக் கோரி, அயப்பாக்கம் சர்வ இந்து திருக்கோவில் அறக்கட்டளை
பொருளாளர் இளம்வழுதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனுவை
தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர்
ஆகியோர் அடங்கிய அமர்வானது, சென்னை மாநகராட்சிக்குள் எந்த பகுதிகள்
சேர்க்கப்பட வேண்டும், அம்பத்தூர் நகராட்சியில் எந்த பகுதியைச் சேர்க்க
வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. அதில், நீதிமன்றம் தலையிட முடியாது
எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.