தினமணி
தில்லி மார்க்கெட்டுகளை மேம்படுத்த பெருநிறுவனங்களை நாடும் மாநகராட்சிகள்
வரலாற்றுச் சிறப்புமிக்க சாந்தினி செüக் உள்பட பிரபல மார்க்கெட் பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு பெருநிறுவனங்களிடம் தில்லி மாநகராட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பழைய தில்லி, கரோல் பக், கம்லா மார்க்கெட், பஹர்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பொதுச் சேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களிடம் மாநகராட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன.
தங்களின் கீழ் வரும் பள்ளிகள், மருத்துவமனைகள், சமுதாய மையங்கள் ஆகியவற்றை பராமரிப்பதிலும் பெருநிறுவனங்களை பங்குகொள்ளச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டம் போன்ற சமூகப் பணிகளில் பெருநிறுவனங்கள் தங்களின் லாபத்தின் ஒரு பகுதியை பங்களிப்பு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.