Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கோவை மாநகராட்சி பகுதிகளில் ரூ.80 கோடியில் மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம்

Print PDF

தி இந்து     23.03.2017

கோவை மாநகராட்சி பகுதிகளில் ரூ.80 கோடியில் மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம்

கோவையில் ரூ.80 கோடி மதிப்பில் மல்டிலெவல் கார் பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பட்ஜெட்டை தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் நேற்று வெளியிட்டார். பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காந்திபுரம் கிராஸ்கட் சாலை, ஆர்.எஸ்.புரம், திவான் பகதூர் சாலை, டவுன்ஹால் பகுதிகளில் அதிக வாகனங்களை நிறுத்தும் வகையில் ரூ.80 கோடி மதிப்பில் மல்டிலெவல் கார் பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய, மாநில அரசுகள் ரூ.200 கோடி நிதி ஒதுக்க உள்ளன. குளங்களைச் சீரமைத்தல் உள் ளிட்ட பல்வேறு பணிகள் இதில் மேற்கொள்ளப்படும். குப்பையை அள்ளுவதற்காக சென்சார் அடிப் படையில் செயல்படும் குப்பைத் தொட்டிகள் அமைக்கப்படும்.

குடிநீர் விநியோகம்

குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தில் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் 97 சதவீதம் முடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிவடையும்.

மேலும், அரசு ஒதுக்கியுள்ள சிறப்பு நிதி ரூ.5.48 கோடி மூலம் குடிநீர் விநியோகப் பணிகள் மேற் கொள்ளப்படும். இதுதவிர, பில்லூர் 3-ம் திட்டத்தை செயல்படுத்துவதற் காக புதிய திட்ட வரைவைத் தருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திட்ட வரைவுக்கு அரசு ஒப்புதல் அளித்தவுடன், பணிகள் தொடங் கும். மாநகராட்சிப் பகுதிகளில் சுமார் 170 முதல் 180 எம்.எல்.டி. வரை தண்ணீர் விநியோகிக்கிறோம். தற்போது 10 முதல் 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய் யப்படுகிறது. இதைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.

கட்டிடக் கழிவுகள் மறுசுழற்சி

உக்கடத்தில் கட்டிடக் கழிவு களை மறுசுழற்சி செய்வதற்காக மறுசுழற்சிக் கூடம் அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்திலேயே கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக அமைக்கப்படும் முதல் கூடமாக இது இருக்கும். இதனால், கோவையில் உள்ள நீர்நிலைகளில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவது பெருமளவு குறையும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாநகராட்சிக்குச் சொந்தமான 8 குளங்களைச் சீரமைப்பது, மாதிரி சாலைகள் அமைத்தல், வை-ஃபை வசதி, மின் விளக்குகள், அம்ரூத் திட்டத்தின்கீழ் பூங்காக்களை மேம்படுத்துவது, 22 மாநகராட்சிப் பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும்.

வாடகை சைக்கிள் திட்டம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சைக்கிள்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக, குறிப்பிட்ட இடங்களில் வாடகை சைக்கிள் நிலையங்கள் அமைக்கப்படும். சைக்கிள் தேவைப்படுவோர் வாடகை செலுத்தி சைக்கிளைப் பெற்றுச் செல்லலாம். அவர்கள் செல்லும் இடத்துக்கு அருகில் உள்ள இடத்தில் அந்த சைக்கிளை விட்டுவிடலாம். ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் மூலம் சைக்கிள்கள் கண்காணிக்கப்படும். இந்த திட்டத்தை ரூ.38 கோடி மதிப்பில் செயல்படுத்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார்.

 

போர்க்கால அடிப்படையில் வறட்சி நிவாரணப் பணிகள்: குடிநீர் பற்றாக்குறையை அரசு திறமையாக கையாள்கிறது- உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

Print PDF

 தி இந்து        23.03.2017

போர்க்கால அடிப்படையில் வறட்சி நிவாரணப் பணிகள்: குடிநீர் பற்றாக்குறையை அரசு திறமையாக கையாள்கிறது- உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்


அமைச்சர் வேலுமணி | கோப்புப் படம்.
அமைச்சர் வேலுமணி | கோப்புப் படம்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமை யான குடிநீர் பற்றாக்குறையைப் போக்க போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கைகளை எடுத்து அரசு திறமையாக கையாண்டு வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் ரூ.100 கோடி யில் வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் கு.பிச்சாண்டி (கீழ்பெண்ணாத்தூர்) கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:

தமிழகத்தில் பருவமழை 62 சதவீதம் குறைவாக பெய்ததால் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முதல்வர் தலைமையிலும், எனது தலைமையிலும் பல்வேறு ஆய் வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நகரங்கள், ஊரகப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.976 கோடியே 76 லட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பழைய ஆழ்துளை கிணறுகளை புனரமைத்தல், சிறு மின்விசை, கைப்பம்புகள் அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், பிளாஸ்டிக் தொட்டிகள் நிறுவுதல், பழுதடைந்த மோட்டார்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீர் இருப்பு மோசம்

சென்னை மாநகராட்சிப் பகுதி களில் நாள்தோறும் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்தது, கிருஷ்ணா நதிநீர் வரத்து குறைவு ஆகியவற்றால் நீராதாரங்களில் இருப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

ஏரிகள், கிருஷ்ணா நதிநீர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள், வீரா ணம் திட்டம், புதிதாக இணைக் கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீராதாரங்கள், பூண்டி, தாமரைப் பாக்கம் கிணற்றுத்தளங்கள் மூல மாக நாளொன்றுக்கு சராசரியாக 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வரும் மே மாதத்தில் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர் வற்றிப் போகும் சூழ்நிலையை எதிர் பார்த்து ரூ.100 கோடியில் வறட்சி நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை தவிர மற்ற பகுதி களில் 553 குடிநீர்த் திட்டங்கள் மூலம் 4 கோடியே 21 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் நாள்தோறும் 1,565 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.98 கோடியே 57 லட்சத்தில் புதிய ஆழ் துளை கிணறுகள், புதிய நீர்உறிஞ்சு கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட 1,898 நீராதார புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. 10 மாநகராட்சிகள், 68 நகராட்சிகளில் 189 நகராட்சி லாரிகள், 167 தனியார் வாடகை லாரி கள் மூலம் தினமும் 15 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மாநகராட்சிகள், நகராட்சிகளில் ரூ.65 கோடியே 35 லட்சத்தில் 1,337 புதிய ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.46.41 கோடி, ஊரகப் பகுதி களில் ரூ.703.43 கோடியில் குடிநீர் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து 14-வது நிதிக்குழு செயலாக்க மானியம் ரூ.818.25 கோடி, ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் ரூ.114.58 கோடி, மார்ச்சில் ரூ.131.26 கோடி நிதிக் குழு மானியமாக விடுவிக்கப் பட்டுள்ளது. இத்தொகையை குடிநீர் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.15 கோடி, தாய்த் திட்டம் 2-ன் கீழ் ரூ.300 கோடியில் குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய பொது நிதி, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிகளை முன்னுரிமை அடிப்படையில் குடிநீ்ர் பணிகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை தமிழக அரசு திறமையாக கையாண்டு வருகிறது. குடிமராமத்து திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று (மார்ச் 22) உலக தண்ணீர் நாள். இந்நாளில் தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்த வேண்டியது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எம்எல்ஏக்கள் ஏற்படுத்த வேண் டும்.

இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Last Updated on Friday, 24 March 2017 15:48
 

சென்னை குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய புறநகர் ஏரிகளின் நீரை பயன்படுத்த ஆய்வு: செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல திட்டம்

Print PDF
தி  இந்து
 
சென்னை குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய புறநகர் ஏரிகளின் நீரை பயன்படுத்த ஆய்வு: செம்பரம்பாக்கத்துக்கு கொண்டு செல்ல திட்டம்
 
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக மணிமங்கலம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் சர்வே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக மணிமங்கலம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் சர்வே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
 
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக மணிமங்கலம் பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் மூலம் சர்வே எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி தண்ணீரை பயன்படுத்துவது குறித்து சென்னை குடிநீர் வாரியம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் புழல், பூண்டி, சோழவரம், செம் பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வறண்டு கிடக்கின்றன. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள் ளளவு 11,057 மில்லியன் கனஅடி. நேற்றைய நிலவரப்படி மொத் தம்1,709 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டு இதேநாளில் 4 ஏரிகளின் நீர்இருப்பு 7,991 மில்லியன் கனஅடியாக இருந்தது.

ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால் சென்னையில் இப்போதே பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கோடைக்காலத்தில் சென்னை நகரின் தண்ணீர் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக் கைகளை குடிநீர் வாரியம் மேற் கொண்டு வருகிறது.

சென்னையில் புறநகர்ப் பகுதி களில் உள்ள கல்குவாரிகளில் இருக்கும் தண்ணீர் மக்கள் குடிப் பதற்கு உகந்ததா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை புறநகரில் உள்ள தாம்பரம், பல்லாவரம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, திருப்போரூர் போன்ற பகுதியில் உள்ள ஏரிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாசனத்துக்கு பயனற்றதாக உள்ள ஏரிகளின் தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட புறநகர் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லவும் சர்வே நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னையில் கோடை காலத்தை சமாளிக்க குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கல்குவாரி நீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதேபோல சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஏரிகளின் நீர் இருப்பு, அதன் தரம், எவ்வளவு தண்ணீரை எடுத்து பயன்படுத்த லாம், உள்ளூர் தேவைக்கு போக மீதி குழாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்லலாமா என பல வழிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டிய பாதைகள் குறித்த சர்வேயும் நடைபெறுகிறது. அனைத்து ஆய்வுகளையும் மேற் கொண்டு அரசுக்கு ஓரிரு வாரங் களில் அறிக்கை தாக்கல் செய்யப் படும் அரசின் முடிவுக்கு இணங்க திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Page 21 of 3988