Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

வேலூர் மாநகரில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.4 கோடியில் புதிய திட்டம் மேயர் தகவல்

Print PDF
தினத்தந்தி         01.05.2013

வேலூர் மாநகரில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.4 கோடியில் புதிய திட்டம் மேயர் தகவல்


வேலூர் மாநகரில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.4 கோடியில் புதிதாக திட்டமிடப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்தார்.

குடிநீர் மேம்பாட்டு பணிகள்

வேலூர் மேயர் கார்த்தியாயினி மாநகராட்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

வேலூர் மாநகரில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக போக்கும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக அந்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது வேலூர் மாநகராட்சியின் குடிநீர் பிரச்சினை பெருமளவு தீர்ந்து விடும் என நம்பப்படுகிறது.

இதற்கிடையே தற்போது லாரிகள் மற்றும் டிராக்டர் மூலம் 4 மண்டலங்களிலும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வினியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,

மேலும் 2013–14–ம் ஆண்டில் இறைவன்காடு தலைமை நீரேற்று நிலையத்தில் புதிதாக 2 ஆழ்துளைக்கிணறு அமைத்தல் மற்றும் பிரதான குழாய் அமைத்தல், கழிஞ்சூர் ஏரிப்பகுதியில் 4 ஆழ்துளைக்கிணறு அமைத்தல் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் அபிவிருத்தி செய்தல், திருமணி நீரேற்று நிலையம் முதல் தலையாரம்பட்டு தலைமை நீரேற்று நிலையம் வரை நீரேற்று குழாய் அமைத்தல் போன்ற குடிநீர்மேம்பாட்டு பணிகளை ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்பில் மேற்கொள்ள உத்தேசங்கள் அரசிற்கு அனுப்பப்பட்டு அரசின் அனுமதியை எதிர்ப்பார்த்து இருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார். முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:–

அனுமதி

துணை மேயர்:– வேலூரில் புதிதாக கட்டிடம் கட்ட வரைபடத்துடன், மாநகராட்சியில் அனுமதி கோருபவர்கள் அந்த வரைபடத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் இருக்கிறதா? என பார்த்த பிறகுதான் கட்டிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும்.

அத்துடன் இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

கோதண்டபாணி:– வேலூரில் கட்டிடம் கட்டுபவர்கள் மாநகராட்சியில் அனுமதி பெற்றுள்ளார்களா? ஒரு மாடி கட்ட அனுமதிபெற்றுவிட்டு பல மாடிகளை கொண்ட கட்டிடங்கள் கட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?

அதிகாரி:– அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டுபவர்களுக்கு நோட்டீசுகள் வழங்கப்படுகின்றன.

கோதண்டபாணி:– பல கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியே வரி விதிக்கப்பட்டிருந்தாலும் குறைவாக விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே? சரியான வரிவிதித்தால் தானே மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும்.

கமிஷனர்:– வரி விதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட உள்ளது.

நடவடிக்கை

துரை அரசன்:– குடிநீர் பிரச்சினைக்காக தினமும் ஆங்காங்கே சாலை மறியல், போராட்டம் போன்றவைகள் நடத்தப்படுகிறது. அது பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கிறது. எனவே போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிச்சமுத்து:– வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள குடிநீர் மோட்டார்கள் பழுதடைந்து 25 நாட்கள் ஆகிறது. அதுபோல தண்ணீர் தொட்டி 3 மாதங்களாக பழுதடைந்து உள்ளது. எனவே மேற்கண்டவைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
 

விதிமுறை மீறல் தெற்குமாசி வீதியில் 2 மாடி கட்டுமான பணிக்கு சீல் மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன்              29.04.2013

விதிமுறை மீறல் தெற்குமாசி வீதியில் 2 மாடி கட்டுமான பணிக்கு சீல் மாநகராட்சி நடவடிக்கை

மதுரை: தெற்குமாசி வீதியில் தரை தளத்துடன் 2 மாடி கட்டிடத்திற்கு அனுமதி வாங்கிக் கொண்டு கூடுதலாக அண்டர் கிரவுண்டில் 15 அடி ஆழத்துக்கு தோண்டி நடைபெற்று வந்த கட்டுமான பணியை நிறுத்தி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மதுரையில் நெருக்கடியான வீதிகளில் ஒன்று தெற்கு மாசி வீதி. இங்குள்ள தேவாங்கர் சத்திர வளாகத்தில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இதற்காக உள்ளூர் திட்டக்குழுமம், மாநகராட்சி அனுமதி பெறப்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 1 கி.மீ. சுற்றளவில் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்ட தடை உள்ளது. இந்த விதிமுறைகளின்படி தரை தளத்துடன் கூடிய 2 மாடி வணிக வளாகம், ஒவ்வொரு தளமும் 4 ஆயிரத்து 50 சதுரஅடி வீதம் மொத்தம் 12 ஆயிரத்து 150 சதுரஅடி பரப்பில் கட்டிடம் கட்ட மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. கட்டிடம் விதிமுறைகளின்படி கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய மாநகராட்சி ஆணையர் நந்தகோபால் உத்தரவிட்டார்.

அதன்படி நகரமைப்பு அதிகாரி ராக்கப்பன், உதவி ஆணையர் தேவதாஸ் மற்றும் அதிகாரிகள் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இதில் தரை தளத்துடன் 2 மாடி வணிக வளாகம் கட்டுதற்கு மாநகராட்சி அளித்த அனுமதி மீறப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதலாக அண்டர் கிரவுண்ட் கட்ட 15 அடி ஆழம் தோண்டப்பட்டு கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டது தெரியவந்தது. இதனால் கட்டுமான பணிக்கு தடை விதித்து, ஆணையர் முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அண்டர் கிரவுண்டுக்கு அனுமதியின்றி 15 ஆழத்துக்கு தோண்டியதால் மண் சரிந்து அதில் வேலை செய்யும் தொழிலாளருக்கு பாதுகாப்பற்ற நிலையும், சுற்றிலுமுள்ள பழமையான கட்டிடத்தின் ஸ்திர தன்மைக்கும், அதில் குடியிருப்போர் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையும் நிலவியது. எனவே சீல் வைக்கப்பட்டது என்றனர்.

 

கோவையில் 15 வணிக வளாகங்களுக்கு சீல்

Print PDF

தினமலர்               29.04.2013 

கோவையில் 15 வணிக வளாகங்களுக்கு சீல்

கோவை: கோவையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 15 வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 பேர் பலியானார்கள். இதனையடுத்து அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர். முதல் கட்ட சோதனையில் கோவையில் 55 வணிக வளாகங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை 12 வணிக வளாகங்களுக்கு சீல்வைக்கப்பட்டது. இன்றும் வணிக வளாகங்கள் சீல் வைக்கும் பணி தொடர்ந்தது. அவினாசி ரோடு, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம் பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட 15 வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து சீல் வைக்கும் பணி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எஞ்சியுள்ள வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கும் பணி அடுத்த வாரத்திற்குள் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

 


Page 14 of 96