Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

Print PDF
தினத்தந்தி         12.05.2013

உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு


உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

கட்டிட திறப்பு விழா

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.20 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் எஸ்.ஜெகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மலையமான் திருமுடிகாரி வரவேற்று பேசினார்.

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு, புதிய கட்டிடத்தை ரிப்பன்வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ஆரம்ப சுகாதார நிலையம்

உதயேந்திரம் பேரூராட்சி பகுதி, கொல்லகுப்பம் பகுதியை கடந்த தி.மு.க. ஆட்சியில் ஆம்பூர் தாலுகாவில் இணைத்து விட்டனர். இந்த பகுதியை வாணியம்பாடி தாலுகாவில் சேர்க்க வேண்டும் என கோரியுள்ளீர்கள். இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் தொடர்ந்து சட்டமன்றத்தில் இதுகுறித்து கேட்டு வருகிறார். தமிழக முதல்வர் இதற்கான தீர்வை விரைவில் ஏற்படுத்துவார்.

மேலும் இந்த பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என பேரூராட்சி தலைவர் கோரியுள்ளார். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செயல்படுத்தி இந்த பகுதியில் அதற்கான ஆயத்த பணிகள் மேற்கொண்டு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கோவி.சம்பத்குமார், கே.ஜி.ரமேஷ், கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், பேரூராட்சி செயலாளர் பிச்சாண்டி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாலசக்திதான், பேரூராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் செயல் அலுவலர் முகமது ரிஸ்வான் நன்றி கூறினார்.
 

குளுகுளு' பயணி நிழற்குடை சென்னைக்கு வருமா ?

Print PDF
தினமலர்                08.05.2013

குளுகுளு' பயணி நிழற்குடை சென்னைக்கு வருமா ?


இந்தியாவிலேயே முதன்முறையாக, குளிர் சாதன வசதி செய்யப்பட்ட பயணிகள் நிழற்குடை, கும்பகோணத்தில் திறக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் நகரில், 20க்கும் மேற்பட்ட இடங்களில், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடைகள் நகராட்சியால் பாராமரிக்கப்படுகிறது. கும்பகோணம் மொட்டைகோபுரம், ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலம், நால்ரோடு உள்ளிட்ட, பத்து இடங்களில் உள்ள நிழற்குடைகளை, குளிரூட்டப்பட்ட நிழற்குடையாக மாற்ற கடந்த நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதில், முதற்கட்டமாக, கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில், நால்ரோடு அருகே, அதிக அளவில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்து பயணம் செய்வதால், அந்த இடத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கி சார்பில், 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிழற்குடையில், கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுளளது. நகராட்சி அலுவலகத்தில் இருந்தபடி, இந்த நிழற்குடையை கண்காணிக்க முடியும்.மேலும், பொது தொலைபேசியில் காசு போட்டு பேசும் வசதி, கணினி மூலம், பிறப்பு, இறப்பு சான்றிதழை டவுன்லோடு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் நிழற்குடையின் ஒரு பகுதியில், சிட்டி யூனியன் வங்கியின், ஏ.டி.எம்., பொருத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு வருமா "ஏசி' நிழற்குடை?

பயணிகளை கவரும் வகையில், கும்பகோணத்தில், "ஏசி' வசதியுள்ள நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில், சாதாரண நிழற்குடைகளை கூட, தேவைக்கேற்ப அமைக்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது.சென்னை மாநகராட்சி பகுதியில், மெட்ரோ ரயில் பணி, சாலை விரிவாக்கம் உள்ளிட்ட, பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக, பெரும்பாலான நிழற்குடைகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, சென்னை முழுவதும், 1,035 நவீன நிழற்குடைகள் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டது.இதற்காக, கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் முறையில், நவீன நிழற்குடைகள் அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது.

கோடையை கருத்தில் கொண்டு, பொது நிதியில் இருந்து, 200 நிழற்குடைகளை அமைக்க, மாநகராட்சி முடிவு செய்து, அந்த பணியும் பெரிதாக துவங்கவில்லை.இதனால், பெரும்பாலான பயணிகள், "வானமே நிழற்குடை' என, சுட்டெரிக்கும் வெயிலில் தவிக்கின்றனர். சாதாரண நிழற்குடைகளை விரைவில் அமைப்பதோடு, மற்ற மாவட்டங்களுக்கு உதாரணமாக, சென்னையிலும் கும்பகோணத்தில் இருப்பது போன்ற, "குளு குளு' வசதி கொண்ட, நிழற்குடைகளை அமைத்து தர வேண்டும் என, பயணிகள் தரப்பில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
 

மாநகராட்சி வளாகத்தில் வானிலை ஆய்வகம்

Print PDF
தினமணி                 08.05.2013

மாநகராட்சி வளாகத்தில் வானிலை ஆய்வகம்


சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் அளவீடு கருவி அமைக்கப்படவுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இந்த கருவி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள சுதந்திர தின பொன்விழா கட்டடத்தில் ஓரிரு நாள்களில் பொருத்தப்படவுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னையில் வானிலையை முன்கூட்டியே அறியவும், வெயில் மற்றும் மழை அளவுகளை அறியவும் ரிப்பன் கட்டட வளாகத்தில் வானிலை முன்னறிவிப்பு கருவியை பொருத்த இந்திய வானிலை ஆய்வு மையம் முடிவு செய்தது.

இது குறித்து சென்னை மாநகராட்சியிடம் அந்த மையம் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே அனுமதி கேட்டது. இந்த நிலையில் மாநகராட்சி அனுமதி அளித்ததையடுத்து கருவியை பொருத்தவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி வளாகத்தில் பொருத்தமான இடத்தை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தேடினர். இதில் பொன்விழா கட்டடம் இந்தக் கருவியை பொருத்த ஏற்றதாக இருந்தது.

இந்த கட்டடத்தில் மாநகராட்சி புகார் மையம் செயல்படுவதற்கு ஒரு பிரிவு தயார் செய்யப்பட்டு வந்தது. அந்தப் பிரிவிலேயே முன்னறிவிப்பு கருவியை பொருத்தலாம் என்று ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வானிலை முன்னறிவிப்பு கருவியை பொருத்த அதற்கான கருவியுடன் ஆய்வு மைய அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை வந்தனர். அப்போது அக்கருவியை பொருத்துவதற்கு தேவையான வயரிங் அமைப்புகள் சரிவர இல்லை என்று கூறி, கருவியை திரும்ப கொண்டு சென்றனர்.

மேலும் இந்த கருவிக்கான வயரிங் (மின் இணைப்பு) அமைப்புகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து வானிலை ஆய்வு அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளனர். இதனையடுத்து வயரிங் அமைப்புகளை மாற்றியமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாள்களில் முடிக்கப்பட்டு விடும். அதன் பின்னர் வானிலை ஆய்வு அதிகாரிகள் நேரில் வந்து கருவியை பொருத்துவார்கள். இந்த கருவியை பராமரிக்கும் பொறுப்பு வானிலை ஆய்வு மையத்திடமே இருக்கும். இதன் மூலம் சென்னையின் வானிலையை துள்ளியமாக கணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையம் மற்றும் மீனம்பாக்கம் விமான நிலையம் ஆகியவற்றில் வானிலை ஆய்வகங்கள் உள்ளன.
 


Page 12 of 96