Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

மாசில்லா மதுரை! மாநகராட்சி மக்கள் வியாபாரிகள் இனைந்து செயல்படவேண்டும்

Print PDF
தினமலர்              27.08.2013

மாசில்லா மதுரை! மாநகராட்சி மக்கள் வியாபாரிகள் இனைந்து செயல்படவேண்டும்


ஜூலி மார்க்கோ, பைபாஸ் ரோடு: மதுரை மாநகர் முழுவதும் பார்க்கும் இடமெல்லாம் குப்பை. மாநகராட்சி, மக்கள், வியாபாரிகள் இம் மூன்று கரங்கள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே முழுமையாக குப்பைகளை அகற்றுவது சாத்தியம்.

மாநகராட்சி: மக்கும்,மக்காத குப்பைகளை பிரித்தெடுப்தோடு, உலோக கழிவு, பிளாஸ்டிக், கண்ணாடி, இரும்பு பொருட்களையும் பிரித்தெடுக்க வேண்டும். சுத்தம் செய்யும் ஊழியர்களும் மனிதர்கள் தான். நோய் தொற்று ஏற்படாமலிருக்க கை,கால் உறைகள் வழங்கி அவற்றை பயன்படுத்த சொல்ல வேண்டும். பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு உடனடியாக அபராதம் விதித்தால், மக்களும் பொறுப்புணர்வுடன் இருப்பார்கள். பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்து கழிவுநீர் தேங்காமல் தடையின்றி செல்லவும் பராமரிப்பு பணிகளை அவ்வப்போது செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

பொது மக்கள்: உணவு,உடை என வெளிநாட்டு பழக்கங்களை கடைபிடிக்கும் நாம், சுகாதாரமாக இருக்க ஏன் வெளிநாட்டை பின்பற்றுவதில்லை. அரசையும், மாநகராட்சியையும் குறை சொல்லாமல், நம் வீட்டில் சேகரிக்கும் குப்பைகளை பயனுள்ளதாக மாற்ற கற்றுக்கொள்ள வேண்டும். சுத்தம் சோறு போடும் என்று தெரியாமலா சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

வியாபாரிகள்: குப்பைகளை, கடையின் முன் அப்படியே போடுவதை முதலில் நிறத்த வேண்டும். கடைக்காரர்களே இப்படி செய்தால், வாடிக்கையாளர்களுக்கு எப்படி விழிப்புணர்வு ஏற்படும். மார்க்கெட் பகுதிகளில் தினமும் விட்டு செல்லும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. தினமும் காய்கறிகள் குப்பைகளை ஓர் இடத்தில் மொத்தமாக சேர்த்து வைத்து, குப்பை வண்டிகள் வரும் போது கொடுக்க வேண்டும்.

தலைமுடியும் உரம் தான்

தலைமுடியில் அமினோ அமிலம் இருக்கிறது. தலைசீவும் போது, உதிரும் முடிகளை அப்படியே கண்ட இடங்களில் போடாமல், சேகரித்து வைக்க வேண்டும். முடிகளை கத்தரியால் சிறுசிறு துண்டாக வெட்டி, இதனுடன் தேங்காய் நார், மண், சாணம், நுண்ணுயிரி கலந்து வைக்க வேண்டும். இந்த உரத்தில் ரோஜாச் செடிகள் நன்கு பூக்கும். இதைவிட முக்கிய விஷயம். நரைத்த தலைமுடியில் கறுப்பை விட, அமினோ அமிலம் அதிகமாக உள்ளது. சீனாவில், நெல்லுக்கே அடியுரமாக தலைமுடியைத் தான் பயன்படுத்துகின்றனர்.

மக்கும் குப்பை எது?

இலை, தழை, காய்கறி கழிவுகள், பசுஞ்சாணம், ஆட்டுப்புழுக்கை, அனைத்தும் உரமாய் மட்கிவிடும். இதனால் பூமிக்கு கெடுதல் இல்லை. நன்மை தான். காகித இலை மண்ணில் அதிகம் சேர்ந்தால் மண் நச்சுத்தன்மையுடையதாக மாறிவிடும். பாலிதீன் தேங் கினால், நிலத்துக்குள்ளே தண்ணீர் செல்ல வழியில்லாமல் போய்விடும்.

தூய்மை பணியின் நிலவரம்

ஜான்விக்டர், பிஸியோதெரபிஸ்ட்: குப்பைகளை மாநகராட்சிதான் அகற்ற வேண்டுமா? நாமும் முன்வந்து ஒன்றாக சேர்ந்து சுத்தம் செய்யலாம். அமெரிக்கா போன்ற நாடுகளில், நாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளை ரோட்டில் "வாக்கிங்' அழைத்து செல்லும் போது, அவற்றின் கழிவுகளை கூட நாமே தான் எடுத்து தொட்டிகளில் போட வேண்டும். அதற்காகவே சாலையோரங்களில் குப்பை தொட்டியும், கை உறையும் வைக்கப்பட்டிருக்கும். இதை போல குப்பைகளை தாங்களே முன்வந்து சுத்தம் செய்யும் விழிப்புணர்வு, பொதுமக்களிடம் ஏற்பட வேண்டும். நம் வீட்டை சுத்தமாக வைத்து கொண்டால் தான் தெரு, ஊர், நகரம் என படிப்படியாக சுத்தமாகும்.

சுற்றுபுறம் சுத்தமாக செலவு செய்யுங்கள்

கண்ணன், விற்பனை பிரதிநிதி, ஆத்திக்குளம்: குப்பைகளை பெற தினமும் துப்புரவு தொழிலாளர்கள் வந்தாலும், தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில், துப்புரவு தொழிலாளர்கள் பணம் கேட்பார்கள் என குப்பைகள் கொடுப்பதை தவிர்த்து விடுகின்றனர். எவ்வளவோ செலவு செய்கிறோம், நம் வீட்டையும், சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள ஆண்டிற்கு சிறிதளவு பணம் செலவு செய்யலாமே. எந்த ஒரு பொருளையும் பயன்படுத்திவிட்டு, கண்ட இடத்தில் தூக்கி வீசிவதும் தவறு. குப்பை தொட்டிகள் இல்லையென்றால், அவை இருக்கும் இடத்தை சிரமப்படாமல் தேடி சென்று போடலாம். ஈர தன்மையுள்ள கழிவுகளை மொத்தமாக தொட்டியில் போடுவதால், அது மேலும் மக்கி துர்நாற்றத்தை ஏற்படுத்திவிடும். அதனால் வீடு தேடி வரும் குப்பை வண்டிகளில் குப்பைகளை கொடுப்பதே சிறந்த வழி.

மண் வளத்தை பாழாக்கும் பாலிதீன்

மக்கும் குப்பைகளை உரமாக மாற்றலாம். ஆனால், மக்காத பாலிதீன் குப்பைகளை அழிப்பது கடினம். ரெடியூஸ், ரீயூஸ், ரீசைக்கிள் என்ற மூன்று முறைகளில் பாலிதீன் பயன்பாட்டை குறைக்கலாம் என்கிறார், தியாகராஜர் கல்லூரி, விலங்கியல் துறை உதவி பேராசிரியர் அருள் நாகேந்திரன். அவர் கூறியது: ஒரு முறை பயன்படுத்திய பாலிதீன் பைகளை வீசி எறியாமல், மீண்டும் பயன்படுத்தலாம. நாகரிகம் கருதி, பாலிதீன் பைகளை பயன்படுத்துபவர்கள், மண்வளம் கருதி துணி பைகளை பயன்படுத்தினால் மட்டுமே, இதற்கு தீர்வு காண முடியும். பிளாஸ்டிக் கப்புகளின் பயன்பாடு குறைந்து, தற்போது பேப்பர் கப்புகளை பயன்படுத்தி வருகிறோம். உள்ளே மெழுகு கோட்டிங் பூசியுள்ளதால், உடலுக்கும், சுற்றுப்புறத்திற்கும் பேப்பர் கப்புகளும் எதிரி தான்.
 
மும்பை, புனே, சண்டிகாரில் அடுக்குமாடி வீடுகள், மருத்துவமனைகளில் கழிவுநீர், குப்பை சுத்திகரிப்பு வசதிகள் உள்ளதை போல, மதுரையிலும் கட்டடங்கள் கட்டும் போதே இவ்வசதியும் சேர்க்க வேண்டும். குப்பைகளை மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
 

1–ந்தேதி முதல் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொடுத்தால் தங்க நாணயம் பரிசு: சென்னை மாநகராட்சி

Print PDF

மாலை மலர்         21.08.2013 

1–ந்தேதி முதல் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொடுத்தால் தங்க நாணயம் பரிசு: சென்னை மாநகராட்சி
 
1–ந்தேதி முதல் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொடுத்தால் தங்க நாணயம் பரிசு: சென்னை மாநகராட்சி
பிளாஸ்டிக் கழிவுகளை சேரிகத்து மாநகராட்சியிடம் ஒப்படைத்தால் தங்க நாணயம் பரிசளிக்கும் திட்டம் வருகிற 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

திடக்கழிவுகளிலிருந்து மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு வருகிற 1–ந்தேதி முதல் பரீட்சார்த்த அடிப்படையில் மூன்று மாத காலத்திற்கு அனைத்து வார்டுகளிலும் பிளாஸ்டிக்கழிவுகளை பிரித்தெடுத்து வழங்க ஆர்வம் காட்டும் பொதுமக்களுக்கு குலுக்கல்முறையில் பரிசு வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மெல்லிய பிளாஸ்டிக்கழிவுகளை பிரித்து ஒவ்வொரு வார்டு அலுவலகங்களிலும் புதன் மற்றும் சனி கிழமைகளில் காலை 9.00மணி முதல் 5.00 மணி வரை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி ஊழியரிடம் வழங்கவேண்டும்.

பொதுமக்கள் வழங்கும் ஒவ்வொரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளுக்கும் உதவிசெயற்பொறியாளர் கையெழுத்திட்ட எண் இலக்கத்துடன் ஒரு டோக்கன் வழங்கப்படும்.

ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு மாதமும் பொது மக்களால் வழங்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் மொத்தஅளவு 500 கிலோவிற்கு அதிகமாகும் பட்சத்தில் மட்டுமே அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் புதன்கிழமையன்று முன் மாதத்தில் வழங்கப்பட்ட டோக்கன்களை கொண்டு குலுக்கல் நடத்தி பொது மக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

குலுக்கலில் தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக 1/2 கிராம் தங்க நாணயமும், அடுத்த 5 நபர்களுக்கு கைகெடி காரம் பரிசாக வழங்கப்படுகிறது.

எனவே, சுற்றுசூழல் மாசு ஏற்படுவதை கட்டுபடுத்தவும், சென்னை மாநகராட்சியின் பிளாஸ்டிக் கலந்த தார்சாலை அமைக்கும் பணிக்கு உதவும் வகையிலும் பொதுமக்கள் பயன்படுத்திய மெல்லிய பிளாஸ்டிக் கழிவுகளை சென்னை மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் ஒப்படைத்து பரிசுபெறும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம்கபூர் கேட்டு கொண்டுள்ளார்.

 

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சுறுசுறுப்பு

Print PDF

தினகரன்            21.08.2013

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சுறுசுறுப்பு

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 26 பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. திறந்தவெளியில் குப்பை வீசினால் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எண்ணற்ற வளங்களை மனித குலத்துக்கு அள்ளிக்கொடுத்த பூமியானது தன்னிடம் சேரும் குப்பைகளால் பெரும் ஆபத்தை சந்தித்துக்கொண்டு உள்ளது. மக்காத குப்பைகளால் மண் மலடாவது மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து அதிகரித்து வருகிறது. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து வருகின்றன. குப்பைகளால் உருவாகும் ஆபத்தை உணர்ந்த அரசு, திடக்கழிவு, திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் தினந்தோறும் சராசரியாக 50 டன் அளவுக்கும் அதிகமாக குப்பைகள் சேருகிறது. இந்த 16 பேரூராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் தக்கோலம், பனப்பாக்கம் பேரூராட்சிகளிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்டவலம் பேரூராட்சியிலும் அனைத்து வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.உதயேந்திரம், அம்மூர், திமிரி, காவேரிப்பாக்கம், திருவலம், விளாப்பாக்கம், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, நாட்ரம்பள்ளி, ஒடுகத்தூர், கலவை, ஆலங்காயம், செங்கம், கீழ்பென்னாத்தூர், கண்ணமங்கலம், போளூர், களம்பூர், சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் 6 முதல் 10 வார்டுகள் வரை திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அனைத்து பேரூராட்சிகளிலும் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முழுமையாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வீடுகள், கடைகளுக்கு நேரில் சென்று, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியே சேகரிக்கின்றனர்.குப்பைகளை சேகரிக்க பெரிய உணவு விடுதிக்கு மாதம் ஆயிரம் ரூபாயும், ஓட்டல்கள், திரையரங்குகளுக்கு ரூ.500, டீக்கடை, இறைச்சிக்கடை, காய்கறி மொத்த விற்பனை கடை ஆகியவற்றுக்கு மாதம் ரூ.250, தள்ளுவண்டி கடைகள், இரவு கடைகளுக்கு மாதம் ரூ.100, திருமண மண்டபங்களுக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு ரூ.250, பெரிய மரங்கள், உபயோகமற்ற கீற்று மற்றும் இதர கழிவுகளுக்கு லாரி ஒன்றுக்கு ரூ.250 வீதம் வசூலிக்கப்படுகிறது.சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தரம் பிரிக்கப்படுகிறது. பாட்டில்கள், அட்டைகள், பிளாஸ்டிக், இரும்பு என 28 விதமான குப்பைகள் தனித்தனியே பிரித்து எடுக்கப்படுகிறது.

இவ்வாறு பிரிக்கப்படுவதில் 90 சதவீத குப்பைகள் மறுசுழற்சி மற்றும் உரம் தயாரிக்க தகுந்தவையாக உள்ளன. 10 சதவீதம் குப்பைகள் மட்டுமே எதற்கும் உதவாத குப்பையாக எஞ்சியிருக்கிறது. குப்பையில் இருந்து தரம்பிரித்து எடுக்கப்பட்ட பொருட்களை தனியார் பலர் நேரில் வந்து விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். குப்பைகளை திறந்தவெளியில் வீசாமல் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களிடம் அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதை மீறினால் அபராதம் விதிக்கவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி தெரிவித்தார்.

ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன் பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் வீசப்படுகிறது. கடலில் நிலவும் குளிர், வெப்பம், உப்பு காரணமாக பிளாஸ்டிக் சிதைகிறது. இதனால் நச்சுப்பொருட்கள் கடல்நீரில் கலந்து எல்லா உயிரினங்களையும் தாக்குகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

 


Page 17 of 66