Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

கோவையை குப்பையில்லாத நகரமாக மாற்றும் திட்டம் தொடக்கம் சணல்பைகளை வீடு,வீடாக வழங்கி குப்பைகளை சேகரிக்க முடிவு

Print PDF

தினத்தந்தி           03.10.2013

கோவையை குப்பையில்லாத நகரமாக மாற்றும் திட்டம் தொடக்கம் சணல்பைகளை வீடு,வீடாக வழங்கி குப்பைகளை சேகரிக்க முடிவு

கோவையை குப்பையில்லாத நகரமாக மாற்றும் திட்டத்தை மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்தார். இத்துடன் வீடுவீடாக சணல் பைகளை வழங்கி மக்கும், குப்பை மக்காத குப்பையை தரம்பிரித்து வாங்கும் பணியும் தொடங்கப்பட்டது.

தினமும் 750 டன் குப்பை

கோவை மாநகராட்சி பகுதிகளில் தினமும் 750 டன் குப்பைகள் சேருகிறது. இதில் 3 முதல் 4 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகும். மேலும் பொது இடங்களில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் ஆபத்துகளை தடுத்திடவும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், கோவை மாநகராட்சி தனியார் நிறுவனத்துடன் இணைந்து, காந்தி பிறந்தநாளான நேற்று ‘சூன்யா’ என்ற இந்த திட்டம்(பூஜ்ய கழிவு மேலாண்மை) தொடங்கப்பட்டது. கோவையில் முதல்கட்டமாக 23–வது வார்டு முன் மாதிரியாக தேர்வு செய்யப்பட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தையொட்டி வீடு, வீடாக குப்பைகளை சேகரிக்கும் பணியை ஆர்.எஸ்.புரம் பாஷியாரலு வீதியில் மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்து புதிய திட்டம் குறித்து கூறியதாவது:–

ஊக்கத்தொகை

கோவை மாநகராட்சியில் முதல்கட்டமாக 23–வது வார்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டில் உள்ள 500 வீடுகளுக்கு சணல் பைகள் வழங்கப்பட்டு அவர்களது வீட்டு குப்பைகளை வெளியில் கொட்டாமல் முழுமையாக சேகரித்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தனித்தனியாக வாங்கப்படும். சாலையில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் உடனடியாக துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும். இங்கு சேகரிக்கப்படும் அனைத்து மக்காத பொருட்களும் தனியார் நிறுவனம் மூலம் குறிப்பிட்ட விலைக்கு வாங்கப்பட்டு, அந்த தொகையிலிருந்து துப்புரவு பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். முதல்கட்டமாக 23–வது வார்டில் தொடங்கப்பட்டாலும் இத்திட்டம் படிப்படியாக அனைத்து வார்டுகளுக்கும் விரிவு படுத்தப்பட்டு, கோவை மாநகராட்சியை குப்பையில்லா முதன்மை நகரமாக்கிட முதல்–அமைச்சரின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு மேயர் செ.ம.வேலுசாமி கூறினார்.

குப்பைகள் தரம் பிரிப்பு இந்ததிட்டத்தின் படி சமைத்த உணவுகள், உணவுக்கழிவுகள், பழங்கள், மற்றும் பூ, உதிர்ந்த இலைகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகள் தனியாகவும், காகிதங்கள், பிளாஸ்டிக், மரவகைகள், உலோகங்கள், துணிகள், கண்ணாடி, கம்பிகள், தோல்பொருட்கள், அட்டைபெட்டி, பாலித்தின் பைகள், தண்ணீர் பாட்டில்கள், பால் கவர்கள் போன்றவை வீடு,வீடாக சேகரிக்கப்பட்டு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம்பிரிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டத்தின்படி, கடந்த மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரிக்க பச்சை மற்றும் வெள்ளை நிற பிளாஸ்டிக் கூடைகள் வீடு,வீடாக இலவசமாக வழங்கப்பட்டது. அந்த திட்டம் முழுமை அடையவில்லை. தற்போது சணல் பைகள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்ட தொடக்க விழாவில் துணை மேயர் திருமதி லீலாவதி உண்ணி, துணை கமிஷனர் சு.சிவராசு, மண்டலத் தலைவர்கள் சாவித்திரி, ஆதிநாராயணன், கே.ஆர்.ஜெயராமன், பெருமாள்சாமி, மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர்கள் செந்தில்குமார், தாமரைச்செல்வி, பிரபாகரன், சாந்தாமணி, அர்ச்சுணன், கணேசன், நியமனக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் மணிமேகலை, ரங்கராஜ், மயில்சாமி, வெண்தாமரை பாலு மற்றும் பி.கே.சீனிவாஸ், நகர் நல அதிகாரி பி.அருணா, ஐடிசி நிறுவன மேலாளர் பெரோஸ் முன்ஸீ, உதவி கமிஷனர் பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

செட்டிச்சாவடிக்கு பெங்களூரு மேயர், அமைச்சர் விசிட்

Print PDF

தினமலர்              26.09.2013

செட்டிச்சாவடிக்கு பெங்களூரு மேயர், அமைச்சர் விசிட்

சேலம்: சேலம் மாநகராட்சி சார்பில், செட்டிச்சாவடியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, நேற்று பெங்களூரு மேயர், அமைச்சர், கவுன்சிலர் ஆகியோர் பார்வையிட்டு சென்றனர்.

செட்டிச்சாவடியில், சுகாதார சீர்கேடு, மின்தடை பிரச்னை ஆகியவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்காத தனியார் நிறுவனம், தங்கள் கிளையை மட்டும் விரிவுப்படுத்துவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவது, பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், செட்டிச்சாவடியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, குஜராத்தை சேர்ந்த என்விரோ புரெக்சன் இன்ப்ராஸ்டரக்சர் லிமிடெட், சூரத் என்ற நிறுவனத்துக்கு, 20 ஆண்டு கட்டி இயக்கி உரிமம் மாற்றுதல் முறையில், செயல்படுத்த, 2008ம் ஆண்டு உத்தரவு வழங்கப்பட்டது.

கடந்த, ஐந்து ஆண்டாக, இதுவரை சோதனை ஓட்ட முயற்சியில், வெறும், 100 மெட்ரிக் டன் முதல், 150 மெட்ரிக் டன் வரையிலான குப்பைகள் மட்டுமே சேகரிக்கப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

செட்டிச்சாவடி பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதால், நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் தொடர்ந்து, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். குப்பை கொட்ட செல்லும் டிராக்டர்களை சிறைப்பிடித்து, தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

மேலும், மின்தடை பிரச்னை, இயந்திரங்களில் அடிக்கடி ஏற்படும் குளறுபடி ஆகியவற்றால், பல நாள் குப்பைகளை தரம் பிரித்தும் உரமாக்கும் பணியிலும் தொய்வு நிலை ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது, இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாகவும் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. செட்டிச்சாவடியில் நிலவி வரும் பிரச்னையால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த பிரச்னைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தனியார் நிறுவனம், தங்கள் கிளைகளை மட்டும் நாடு முழுவதும் பரப்புவதில் ஆர்வமாக இருக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம், பெங்களூரில் எட்டு இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதனால், கடந்த இரண்டு ஆண்டாக அடிக்கடி பெங்களூருவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் ஆகியோரை அழைத்து வந்து, திட்டத்துக்கான ஒப்புதல் பெறுவதற்கு, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது.

தனியார் நிறுவனத்துக்கு, சேலம் மாநகராட்சி அதிகாரிகளும், "ஜால்ரா' போட்டு வருகின்றனர். தனியார் நிறுவனத்தின் அழைப்பை ஏற்று, சேலம் செட்டிச்சாவடிக்கு வரும் பெங்களூரு, "விருந்தினர்களை' கவனிக்கும் மாநகராட்சி அதிகாரிகள், தங்கள் அன்றாட பணிகளை விடுத்து, தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு, "சான்றிதழ்' வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை பெங்களூரு மாநகராட்சி மேயர் சத்தியநாராயணா, போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, எதிர்கட்சி தலைவர் மஞ்சுநாத், பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் லட்சுமி நாராயணன் மற்றும் கவுன்சிலர்கள் பலர், செட்டிச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டனர். வழக்கம்போல, தனியார் நிறுவனமும், மாநகராட்சி அதிகாரிகளும், திட்டத்தை பற்றி பெருமையாக சொற்பொழிவாற்றினர்.

தென்னிந்தியாவில் கால் பதிக்க ஆர்வம்

குஜராத்தை சேர்ந்த தனியார் நிறுவனம், மேற்கு இந்திய பகுதிகளில், ராஜ்கோட், சூரத், ஜுனாகத், வதேரா, பவனாகர், ஜம்நகர், மிரா பயந்தர், புனே, விரர், ஜலகான், தானே, நாக்பூர் ஆகிய பகுதிகளிலும், வடக்கு இந்தியாவில் குவாலியர், பரிதாபாத், ஆக்ரா, பரேலி, கசியாபாத், அமிர்தசர், கிழக்கு இந்தியாவில் சங்கர், மங்கள் பூர், அசன்சோல் ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தென்னிந்தியாவில், சேலத்தில் மட்டுமே செயல்படுத்தி வருகிறது. அதனால், பெங்களூருவில் எப்படியாவது கால் ஊன்ற வேண்டும் என்பதில் குறியாக செயல்படுகிறது. அதனால், திட்டத்தின் பின்னடைவு குறித்து, பெங்களூரு அரசியல் கட்சியினரிடம் அவர்கள் தெரிவிப்பதில்லை.

 

பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்து மறுசுழற்சி

Print PDF

தினமணி            26.09.2013 

பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்து மறுசுழற்சி

கோவை மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்ய மாநகராட்சி நிர்வாகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

  கோவை மாநகராட்சிக்கென சொந்தமாக துடியலூர் பகுதியில் பிளாஸ்டிக் அரவை இயந்திரத் தொழிற்சாலை அமைக்கப்பட்டிருந்தது. மகளிர் சுய உதவிக் குழுவினர் இந்த ஆலையை இயக்கி வந்தனர். பல்வேறு காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக மகளிர் சுய உதவிக் குழுவினரால் இதைத் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இயந்திரத்தை இயக்கி வந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் இப்போது வேறு தொழிலில் கவனம் செலுத்துகின்றனர்.

  இச் சூழ்நிலையில் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக கோவை மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சிப் பகுதியில் தினமும் சேரும் சுமார் 850 டன் குப்பையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு பிளாஸ்டிக் பொருள்களும் உள்ளன.

 இக் குப்பையைத் தரம் பிரித்து அதில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியினர் முடிவு செய்தனர். அதன்படி, கோவை மாநகராட்சிப் பகுதியில் மொத்தமுள்ள 5 மண்டலங்களிலும் தலா ஒரு வார்டு வீதம் சோதனை முயற்சியாக அந்தந்த வார்டுகளில் சேரும் குப்பையில் பிளாஸ்டிக்கைத் தரம் பிரிக்கும் பணியில் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  அந்தந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரிக்கும் பணியிலும் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கெனத் தனியாக பைகள் தரப்பட்டுள்ளன. இப் பிளாஸ்டிக் பொருள்கள் அனைத்தும் அந்தந்த மண்டல அலுவலகங்களில் வைக்கப்பட்டு துடியலூரில் உள்ள பிளாஸ்டிக் அரவை இயந்திரத்தில் அரைக்கப்பட உள்ளன.

 ஒவ்வொரு வார்டிலும் தினமும் சுமார் 75 முதல் 100 கிலோ வரை பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிக்கப்படுகின்றன. இவை துடியலூருக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள இயந்திரத்தில் அரைக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

பிளாஸ்டிக் மறுசுழற்சி அரவை இயந்திரம் இடையில் சில ஆண்டுகள் இயக்கப்படவில்லை. இதனால், இப்போது மீண்டும் அந்த இயந்திரம் சரி செய்யப்பட உள்ளது. சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களை எடை போடுவதற்காக 6 புதிய இயந்திரங்களும் வாங்கப்பட உள்ளன.

  வீடு வீடாக பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டு அது மறுசுழற்சி செய்யப்படும். மறு சுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும். மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் சாலை அமைப்பதற்கும் இந்த பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட உள்ளது.

  இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் க.லதா கூறியது:

 துடியலூரில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி அரவை இயந்திரத்தை மீண்டும் செயல்பாடுக்கு கொண்டு வருவதன் மூலமாக பலருக்குக் கூடுதலாக வேலைவாய்ப்புக் கிடைக்கும். மாநகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டையும் குறைக்க முடியும். துவக்கத்தில் மாநகராட்சியின் வடக்கு மண்டலப் பகுதியில் மட்டும் செயல்படுத்தப்படும் இத் திட்டம், விரைவில் மாநகராட்சிப் பகுதி முழுவதும் செயல்படுத்தப்படும் என்றார்.

 


Page 15 of 66