Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

குப்பையில்லாத திட்டத்துக்கு உதவிய 30 குடும்பத்தினருக்கு பாராட்டு சான்றிதழ் மேயர் செ.ம.வேலுசாமி வழங்கினார்

Print PDF

தினத்தந்தி           20.11.2013

குப்பையில்லாத திட்டத்துக்கு உதவிய 30 குடும்பத்தினருக்கு பாராட்டு சான்றிதழ் மேயர் செ.ம.வேலுசாமி வழங்கினார்

கோவை மாநகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் ‘சூன்யா’ திட்டத்தை 23–வது வார்டில் கடந்த மாதம் 2–ந் தேதி மேயர் செ.ம.வேலுசாமி தொடங்கி வைத்தார். அந்த வார்டு முழுவதும், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிரிக்க தனித்தனி பைகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக பாஷ்யகாரலு மேற்கு, பொன்னுரங்கம் மேற்கு, வெங்கடசாமி மேற்கு, பெரியசாமி மேற்கு, திருவேங்கடசாமி மேற்கு ஆகிய 5 வீதிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

அப்போது முதல் குப்பைகள் தரம்பிரிக்கும் பணி பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் 4 டன் மறுசுழற்சி குப்பைகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இதற்காக கோவை மாநகராட்சி திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வரும் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மேயர் செ.ம.வேலுசாமி மற்றும் மாநகராட்சி கமிஷனர் லதா ஆகியோர் சான்றிதழ் மற்றும் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.

மற்ற பகுதிகளிலும் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்களின் புகைப்படத்துடன் கூடிய தகவல் பலகை அந்தந்த தெருக்களில் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஆதிநாராயணன், சாவித்திரி பார்த்திபன், கே.ஆர்.ஜெயராமன், வார்டு கவுன்சிலர் மணிமேகலை மற்றும் கவுன்சிலர்கள் ரங்கராஜ், நியமனக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கோவையை "குப்பை இல்லா' நகராக மாற்ற சிறப்பு திட்டம் பாலித்தீனை தரம் பிரித்த 30 பேருக்கு சான்றிதழ்

Print PDF

தினமலர்        13.11.2013

கோவையை "குப்பை இல்லா' நகராக மாற்ற சிறப்பு திட்டம் பாலித்தீனை தரம் பிரித்த 30 பேருக்கு சான்றிதழ்
 
கோவை:கோவையை குப்பை இல்லா நகராக மாற்றும் சிறப்பு திட்டத்தின் கீழ், பாலித்தீன் குப்பையை தரம் பிரித்து, ஒப்படைத்த பொதுமக்களுக்கு, மாநகராட்சி சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
 
சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில், குப்பையில்லா நகரங்களை உருவாக்கும் "சூன்யா' திட்டத்துக்கு, கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது.
 
இதற்காக, கோவை மாநகராட்சிக்கு 85 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.புரம் பகுதி உள்ளடக்கிய 23வது வார்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த அக்., 2ம் தேதி "சூன்யா' திட்டத்தில், மக்கள் ஒத்துழைப்போடு குப்பை சேகரிக்கும் பணி துவங்கியது. ஆர்.எஸ்.புரம் மேற்கு பகுதியில் டி.வி.சாமி ரோடு, பொன்னுரங்கம் ரோடு, வெங்கடசாமி ரோடு, பெரியசாமி ரோடு, பாஷ்யகாரலு வீதி ஆகிய ஐந்து வீதிகளில் உள்ள 500 வீடுகளில், குப்பை தரம் பிரிக்கப்பட்டன.

வீட்டு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டாமல், சணல் பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனியாக சேகரிக்க, ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு சணல் பைகளும், ஒரு பிளாஸ்டிக் தொட்டியும் வழங்கப்பட்டது.

துப்புரவு தொழிலாளர்கள் வரும்போது, தரம் பிரித்து சேகரித்து வைத்திருக்கும் குப்பையை ஒப்படைக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, அக்., 2 முதல் நவ., 12 வரை, 3.6 டன் பாலித்தீன் கழிவுகளை சேகரித்தனர். மக்காத குப்பையை ஐ.டி.சி நிறுவனம், கிலோ மூன்று ரூபாய் வீதம் விலைக்கு எடுத்துக் கொண்டது.

அந்த தொகை துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

குப்பையை தரம் பிரித்து ஒப்படைத்ததற்காக மொத்தம் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சி சார்பில் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவை மாநகராட்சி மேயர் சான்றிதழ்களை வழங்கினார். 

 

மாநகராட்சியின் "மறுசுழற்சி திட்டம்' பலன் தருமா?

Print PDF

தினமலர்            08.11.2013

மாநகராட்சியின் "மறுசுழற்சி திட்டம்' பலன் தருமா?

கோவை : கோவை மாநகராட்சியில் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலித்தீன் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில், மாநகராட்சி துவங்கியுள்ள பாலித்தீன் மறுசுழற்சி செய்யும் திட்டம் வெற்றியடைவது கேள்விக்குறியாக உள்ளது.

கோவை மாநகராட்சி எல்லைக்குள் 40 மைக்கரான் தடிமனுக்கு குறைவான பாலித்தீன் பொருட்கள் பயன் படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. "தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநகராட்சி நிர்வாகம் அவ்வப்போது அறிவிப்பு வெளியிடுகிறது.

கடைகள், குடோன்களில் கண்துடைப்புக்காக பாலித்தீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஆனால், பாலித்தீன் பயன்பாட்டுக்கு "கடிவாளம்' போடாததால், பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், பார்க்கும் இடமெல்லாம் பாலித்தீன் கழிவு நிறைந்துள்ளது. காற்றில் பறக்கும் பாலித்தீன் கவர்கள் சாக்கடைகளில் அடைப்பையும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

கோவை மாநகரத்தில் தினமும் 850 சேகரமாகும் திடக்கழிவில், 30 டன் அளவுக்கு பாலித்தீன் கழிவு ஏற்படுகிறது. குப்பையில் இருந்து பாலித்தீன் கழிவுகளை தனியாக சேகரித்து அழிக்க முடியாததால், பாலித்தீன் கழிவுகளை தனியாக சேகரித்து மறுசுழற்சி செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

"சூன்யா' திட்டத்தில், ஆர்.எஸ்.புரத்தில் 23வது வார்டில் வீடுவீடாக பாலித்தீன் குப்பை தனியாக சேரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. துப்புரவு தொழிலாளர்களுக்கு தினமும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. வடக்கு மண்டலத்தில் 20 வார்டுகளில் பாலித்தீன் கழிவுகளை தனியாக சேகரித்து, அப்பநாயக்கன் பாளையத்தில் துவங்கப்பட்டுள்ள மறுசுழற்சி மையத்தில், பிளாஸ்டிக் கட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் துப்புரவு தொழிலாளர்களுக்கும், மகளிர் குழுவுக்கும் வருவாய் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெற்றியடையும் போது, ஐந்து மண்டலத்திலும், வெள்ளலூர் குப்பைக் கிடங்கிலும், பாலித்தீன் மறுசுழற்சி மையம் துவங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தடைவிதித்தும் கட்டுப்படுத்த முடியாத சக்தியாக பாலித்தீன் பரவிக்கிடக்கிறது.

வீடுகளில் பாலித்தீன் கவர்களை தனியாக சேகரிப்பதுடன், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தினமும் சேகரமாகும் பாலித்தீனை மறுசுழற்சி செய்து விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம் துப்புரவு தொழிலாளர்களுக்கு வருவாய் கிடைத்தாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால், பாலித்தீன் மறுசுழற்சி திட்டம் வெற்றி அடைவது கேள்விக்குறியாக உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 மற்றும் பாலித்தீன் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் - 2011ன்படி 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவாக உள்ள பாலித்தீன் பொருட்கள் தயாரிப்பு, விற்பனை மற்றும் உபயோகப்படுத்துதலுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதையும் மீறி பாலித்தீன் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால், நகர் முழுவதும் பரவி கிடைக்கிறது. பாலித்தீன் கவர்களை தனியாக சேகரித்து கொடுப்பதன் மூலம், துப்புரவு தொழிலாளர்களுக்கும், மகளிர் குழுவுக்கும் வருவாய் கிடைத்தால், பாலித்தீன் மறுசுழற்சி திட்டம் வெற்றியடையும்' என்றனர்.

 


Page 11 of 66