Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு மின் கட்டணம் செலுத்தப்பட்டது

Print PDF

தினமணி                30.01.2014

திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு மின் கட்டணம் செலுத்தப்பட்டது

சேலம் செட்டிச்சாவடியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளைச் செய்து வரும் நிறுவனத்துக்கு, மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை இரவு மின் கட்டணத்தை செலுத்தியது. இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் வியாழக்கிழமை (ஜன.30) முதல் செயல்படத் தொடங்கும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சேலம் செட்டிச்சாவடி பகுதியில் இயங்கி வரும் குஜராத்தைச் சேர்ந்த ஹன்ஜர் என்ற தனியார் திடக்கழிவு மேலாண்மை நிறுவனம், மின் கட்டணம் செலுத்தாதது உள்ளிட்ட சில நிர்வாக பிரச்னைகள் காரணமாக கடந்த சில வாரங்களாக தனது பணியை நிறுத்தியது.

நிறுவனம் பூட்டப்பட்டதால் சேலம் மாநகரப் பகுதியில் சேகரமாகும் குப்பைகளை நிறுவனத்துக்கு வெளியே உள்ள இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் கொட்டி வந்தது.

இதற்கு செட்டிச்சாவடி, அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

கடந்த 3 நாள்களாக மாநகராட்சியின் குப்பை லாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து, சேலம் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில் பிரச்னை தீவிரமடைந்ததை அடுத்து, தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியர் சதீஷ் தலைமையில் புதன்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

செயற்பொறியாளர் அசோகன், ஆலை நிர்வாகி நிதீம் பர்னிச்சர் வாலா, வட்டாட்சியர் சுரேஷ், காவல் உதவி ஆணையர் உதயகுமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

தனியார் நிறுவனப் பிரதிநிதி நிதீம் பேசும்போது, ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அதற்கு பணம் செலுத்த 15 நாள்கள் அவகாசமும், வெளியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற 45 நாள் அவகாசமும் வழங்கும்படி கேட்டார்.

ஆனால் மாநகராட்சியும், பொதுமக்களும் இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்ததை அடுத்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

பின்னர் பிற்பகலிலும், இரவிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

இதில், தனியார் நிறுவனத்துக்கான மின்சாரக் கட்டணம் ரூ.5.70 லட்சத்தை செலுத்த மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

இதற்காக கேட்பு வரைவோலையை இரவோடு இரவாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தனர்.

மின் இணைப்பு கிடைத்ததும் வியாழக்கிழமை காலை முதல் ஆலை செயல்படத் தொடங்கும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தனியார் ஆலைக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.20 லட்சம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், அந்தத் தொகையில்தான் ரூ.5.70 லட்சம் கழித்துக் கொள்ளப்படும் என்றும், இதனால் மாநகராட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 

பிப்ரவரி 2 முதல் குப்பை அள்ளும் பணி தனியார் வசம்

Print PDF

தினமணி                30.01.2014  

பிப்ரவரி 2 முதல் குப்பை அள்ளும் பணி தனியார் வசம்

திருப்பூர் மாநகரில் 30 வார்டுகளில் குப்பை சேகரிக்கும் பணியை வரும் பிப்ரவரி 2-ஆம் தேதிமுதல் தனியார் வசம் ஒப்படைக்கப்பட இருக்கும் நிலையில், அதுகுறித்த ஆய்வுக் கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

 திருப்பூர் மாநகரில் தினமும் 500 டன்னுக்கும் கூடுதலான குப்பை வீதிகளில் கொட்டப்படுகிறது. இக் குப்பையை அகற்றும் பணி மாநகராட்சி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்து வருகிறது. இந் நிலையில், மொத்தமுள்ள 60 வார்டுகளில் 2 மற்றும் 3-ஆவது மண்டலங்களில் உள்ள தலா 15 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

  இந் நிலையில், வரும் பிப்ரவரி 2-ஆம் தேதியில் இருந்து இந்த 30 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பாக, அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியும் ஆய்வுக் கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. துணை மேயர் சு.குணசேகரன், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜான், கிருத்திகா சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இதில், வீதிகளில் குப்பையை அள்ளுவது தொடர்பாக அந்த தனியார் நிறுவனம் செயல்படும் விதம் குறித்து அந் நிறுவனப் பிரதிநிதிகள் விளக்கினர். வீடுகள்தோறும் குப்பை சேகரிப்பதைக் கண்டறிவது குறித்து மேயர் அ.விசாலாட்சி கேட்டறிந்தார்.

  குப்பை அள்ளும் வாகனங்களில் ஜி.பி.ஆர். கருவி பொருத்தப்பட்டு, ஆன்லைன் மூலமாக வீதிகளில் குப்பை நிரம்பியுள்ள கண்டெய்னர் கண்டறியப்படும் என்பது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் விளக்கம் அளித்தனர்.

 இதுகுறித்து, மேயர் அ.விசாலாட்சி கூறியது:  குப்பை சேகரிக்கும் பணி தனியார் வசம் வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் ஒப்படைக்கப்படும். இதுதொடர்பாக அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. வியாழக்கிழமை (ஜனவரி 30), மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்களுக்கு இது தொடர்பான விளக்கக் காட்சிகளுடன் தனியார் நிறுவனம் விளக்கம் அளிக்க உள்ளது என்றார்.

 

வைகையில் குப்பைகள் அகற்றும் பணி: சமூக ஆர்வலர்கள் பங்கேற்க அழைப்பு

Print PDF

தினமணி            20.01.2014

வைகையில் குப்பைகள் அகற்றும் பணி: சமூக ஆர்வலர்கள் பங்கேற்க அழைப்பு

 மதுரை மாநகராட்சி பகுதிக்கு உள்பட்ட வைகை ஆற்றுப் பகுதியில், ஜனவரி 20 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் 2 நாள்களுக்கு குப்பைகள் அகற்றும் பணி நடைபெறவுள்ளது.

 இப்பணியில், சமூக ஆர்வலர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், மாணவ, மாணவியர் மற்றும் சமூக அமைப்புகள் பங்கேற்கலாம் என, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

 இது தொடர்பாக, அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பது:

 மதுரை மாநகராட்சிக்குள்பட்ட வைகை ஆற்றில் தொடர்ந்து கழிவுநீரை வெளியேற்றுவதும், குப்பைகளைக் கொட்டுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதனால், வைகை ஆறு மாசுபடும் சூழல் உருவாகியுள்ளது. இதைத் தடுப்பதற்காக, மாநகராட்சி நிரந்தரத் திட்டத்தை வகுத்து, முனைப்புடன் செயலாற்ற உள்ளது.

 இது தொடர்பாக, விரைவில் பல்வேறு துறை அலுவலர்கள், பொறியாளர்களின் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வுகாண சமூக ஆர்வலர்கள், பொதுமக்களின் கருத்துகளை அறிய, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 எனவே, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாநகராட்சிக்குள்பட்ட வைகை கரையோரமான விளாங்குடி முதல் தெப்பக்குளம் பாலம் வரை குப்பைகளை அகற்றும் பணிகளை, அழகிய மதுரை மாநகர் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களைக் கொண்டு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

 இதன்படி, திங்கள்கிழமை முதல் 2 நாள்களுக்கு வைகையில் குப்பைகள் அகற்றும் பணி நடைபெறும், இதில் விருப்பமுள்ளவர்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

 


Page 6 of 66