தினமலர் 18.07.2013
குறைந்த வருவாய் பிரிவினருக்கு 900 வீடுகள் ஒதுக்கீடு வீட்டுவசதி வாரியம் முடிவு
சென்னை சோழிங்கல்லுாரில், பிரிபேப் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, 1,500 வீடுகள் கட்டும் திட்டத்தில், 900 வீடுகளை, குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஒதுக்க, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது.
ஆட்சேபம் சோழிங்கல்லுாரில், பிரி பேப்எனப்படும், முன் தயாரிப்பு கட்டுமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 1,500 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார்.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட நிலங்கள், தனியார் வீட்டு மனைகளாக இருந்தவை. இதை புதிய திட்டத்துக்கு பயன்படுத்த ஆட்சேபம் தெரிவித்து, நிலத்தை இழந்தோர் இழப்பீட்டுத் தொகை பெறாமல் உள்ளனர்.
இருப்பினும், இந்த திட்டத்துக்கான நிர்வாக ஒப்புதல், கடந்த மாதம் நடந்த வாரிய நிர்வாக குழு கூட்டத்தில்
வழங்கப்பட்டது.
இதை அடுத்து, ‘பிரி பேப்’ முறையில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு உள்ளன.
900 வீடுகள்
இதுகுறித்து வீட்டுவசதி வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
குறிப்பிட்ட சில மாற்றங்களுடன், 379 கோடி ரூபாயில், 10 மாடிகளுடன், 1,500 வீடுகள் கொண்ட இத்திட்டத்தில், ஒவ்வொன்றும், 1,076 சதுர அடி பரப்பளவில் மூன்று படுக்கையறை கொண்ட, 160 வீடுகள், உயர் வருவாய் பிரிவினருக்கு ஒதுக்கப்படும்.
இரண்டு படுக்கை அறையுடன், 700 சதுர அடி பரப்பளவில், 440 வீடுகள் நடுத்தர வருவாய் பிரிவினருக்கு ஒதுக்கப்படும்.
இதற்கு அடுத்தபடியாக, ஒற்றை படுக்கையறையுடன், ஒவ்வொன்றும், 484 சதுர அடி பரப்பளவில், 900 வீடுகள், குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஒதுக்கப்படும். மற்ற திட்டங்களை காட்டிலும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு அதிக வீடுகள் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
வசதிகள்
குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகளில் ஒவ்வொரு படுக்கை அறையும் ‘பால்கனி’ வசதியுடன் வடிவமைக்கப்படுவது, இதன் இன்னொரு சிறப்பு அம்சம். மேலும், தரைதளத்துடன் முதல் தளம் கொண்டதாக, 2,000 சதுர மீட்டரில் பொது பயன்பாட்டு வளாகம் இக்குடியிருப்பில் அமைக்கப்படும்.
இத்திட்டத்துக்கான வடிவமைப்புகளை உருவாக்குவது மற்றும் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அடுத்த ஒரு மாதத்துக்குள், ஒப்பந்ததாரரை தேர்வு செய்யும் பணிகள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.