தினமணி 25.07.2009
அனைவருக்கும் வீடு' சட்ட மசோதா: மத்திய அரசு ஆலோசனை
புது தில்லி, ஜூலை 24: ""கட்டுப்படியாகும் விலையில் அனைவருக்கும் வீடு'' குறித்து அரசு இயற்றவுள்ள சட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அனைவருடனும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக மக்களவையில் வெள்ளிக்கிழமை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் செல்ஜா தெரிவித்தார்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் செல்ஜா கூறியதாவது:
நிலம் மற்றும் குடியிருப்புகளை உருவாக்குவது மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.
இதற்கு வசதியாக ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கான சட்டங்களை இயற்றுவதும் மாநில அரசுகளின் அடிப்படை பொறுப்பாகும்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ந்தேதி நடைபெற்ற வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாக அமைச்சர்களின் தேசிய மாநாட்டில் கட்டுப்படியாகும் விலையில் அனைவருக்கும் வீடு குறித்து மத்திய அரசு நில மதிப்பீடு பிரச்னைகள், நகர்ப்புற வளர்ச்சிக்கு மாநில அரசுகள் கொண்டு வர வேண்டிய கட்டுப்பாட்டு முறைகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய மாதிரி ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மசோதா ஒன்றை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்தச் சட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அனைவருடனும் தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்