Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - General

உலக எண்கள் தமிழ் எண்களே!

Print PDF

தினமணி 02.08.2010

கட்டுரைகள்

உலக எண்கள் தமிழ் எண்களே!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து மக்களிடம் தமிழ்பற்றிய விழிப்புணர்வு உருவாகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை மாநகராட்சி, வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்க வேண்டும் என முனைந்திருப்பதும் சரியான திசைவழியில் ஒரு நல்ல நடவடிக்கையே. அத்துடன் தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்ற முதல்வரின் அறிவிப்பும் பல்லாண்டு கால தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கையின் வெற்றியே.

ஆங்கிலத்தில் எழுதும்போதும், பேசும்போதும் பிழை ஏற்பட்டுவிடக் கூடாது என அஞ்சும் படித்தவர்கள் தமிழில் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், பேசலாம் என எண்ணுகின்றனர். அதனால்தான் தமிழ் எண்களை ஆங்கில எண்கள் என்றும், அரபு எண்கள் என்றும், உலக எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் ஆளுக்கு ஆள் பிழைபடப் பேசியும், எழுதியும் வருகின்றனர்.

இப்போது உலகமெல்லாம் வழக்கில் இருக்கும் எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 தமிழ் எண்களே என்பதைத் தமிழ் மக்களும், சில தமிழ் அமைப்புகளும் அறியாமல் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. இதையறிந்த தமிழறிஞர்கள் மக்களிடம் பரப்பவில்லை; அதனால்தான் இதனை ஆங்கில எண்கள் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இந்த அறியாமையைப் போக்காதது அறிந்தவர்களின் குற்றம்தானே!

மாநில மொழிகளில் வாகன எண் பலகையை எழுதலாம் என்று இந்திய வாகனச் சட்டம் 1989 கூறுகிறது. அதுபோலவே 1998-ம் ஆண்டு தமிழ்நாட்டிலும் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. வாகன உரிமையாளர்கள் விரும்பினால் ஊர்திகளில் தமிழிலும் பதிவு எண்களை எழுதிப் பொருத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.

தமிழக அரசு தமது ஆணையில் எண்களைப் பொறுத்தவரை உலக எண்களையே (அரபிக் நம்பர்ஸ்) பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. இதன் மூலம் இந்த உலக எண்கள் அராபிய எண்கள் என்றே அரசும் கருதுகிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது.

"எண்ணும் எழுத்தும் கண்னெனத் தகும்' என்றும் "எண்னென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்னென்ப வாழும் உயிர்க்கு' என்றும் தமிழிலக்கியம் கூறுகிறது. ""உயிர்களுக்கு எண்ணும் எழுத்தும் இரண்டு கண்களாகும். இதில் ஒரு கண்ணாகிய தமிழ் எழுத்தை எடுத்துக் கொண்டோம். ஆனால், மற்றொரு கண்ணாகிய தமிழ் எண்களை விட்டுவிட்டோம். அவற்றைப் பயன்படுத்த அரசு ஆவன செய்யுமா...? '' என்று சட்டப்பேரவையிலேயே கேட்கப்பட்டது; கேட்டவர் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் குமரி அனந்தன். "தமிழ் எண்கள் மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வரப்படுமா?' என்று அப்போது தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகனிடம் கேட்கப்பட்டது.

""இதுகுறித்து முதல்வர், கல்வியமைச்சர் ஆகியோருடன் பேசினேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைகூட மைல் கற்களில் தமிழ் இருந்துள்ளது. படிப்படியாகக் கவனிக்கலாம் என்று இருக்கிறோம்...'' என்று அவர் ஒரு நேர்முகத்தில் விடை கூறியுள்ளார் (ராணி: 4-8-1996).

மறுக்க வேண்டிய சில தமிழ் அமைப்புகளும், "இப்போது வழக்கில் இருக்கும் எண்கள் தமிழ் எண்கள் இல்லை' என்ற எண்ணத்தில், "தமிழ் எண்களைப் பயன்படுத்த வேண்டும்' என்றே தீர்மானங்கள் இயற்றின. இதனை மறுக்காமல் தமிழறிஞர்கள் ஏன் அமைதி காத்தனர் என்றே தெரியவில்லை.

இந்த எண்களைப் பற்றிய குழப்பம் இப்போதுதான் இப்படி எழுந்துள்ளது என்று எண்ண வேண்டாம். 1960-ம் ஆண்டு "மத்திய கல்வி ஆலோசனைக் குழு'க் கூட்டத்திலும் இந்தப் பிரச்னை எழுந்துள்ளது.

இந்தியாவில் கல்வி சம்பந்தமாக உலகத்தில் வழங்கி வரும் எண்களையே பயன்படுத்துவது என்று மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று "கல்விக்கு அராபிய எண்களே - ஆலோசனைக் குழு முடிவு' என்ற தலைப்பில் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இதுபற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், ""அவை அரபிய எண்கள் அல்ல தமிழ் எண்களே'' என்று தம் இதழாகிய "குயில்' ஏட்டில் 24-1-1960 அன்று எழுதினார்.

""அன்றைய தமிழகக் கல்வியமைச்சர் சி. சுப்பிரமணியம் அந்தக் குழுவில் இந்த எண்கள் தமிழ் எண்களே என ஏன் சொல்லவில்லை?' என கண்டனம் தெரிவித்தார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரிவடிவம் எப்படியிருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித்துறையின் சுவடியில் கண்டால் இன்றைய 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 ஆகியவை தமிழ் எழுத்துகளே என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர்; அவர்களிடமிருந்து மேல்நாட்டினர் கற்றுக்கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர்; அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம்; ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்துக்கு உள்ளாயிற்று...!'' என்று பாரதிதாசன் எழுதினார்.

டாக்டர் மு. வரதராசனார் தம் "மொழி வரலாறு' என்னும் நூலில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என்ற எண்கள் தமிழ் எண்களே என்பதை கல்வெட்டுத் துணை கொண்டு நிறுவியுள்ளார். அந்தக் கல்வெட்டுச் சான்று (படம்).

அவர் எழுதுகிறார்: ""1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால், அராபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கு இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை.

தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங்களைப் பற்றி இவர்கள் அறியாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் இந்த எண்கள் (1, 2, 3 முதலியவை) பழைய தமிழ் எண்களே என்பது முன்பக்கத்தில் உள்ள பழந்தமிழ் எண் வடிவங்களை நோக்கின் உணரப்படும்.

இவற்றை நோக்கி எண்ண வல்லார்க்கு 1, 2, 3 முதலிய எண்களின் எழுத்து வடிவம் தமிழகம் உலகத்துக்கு அளித்த கலையே என்னும் உண்மை புலப்படும்...''- இவ்வாறு எழுதிய டாக்டர் மு.., கல்வெட்டு ஆதாரத்தையும் படமாக்கி வெளியிட்டுள்ளார் (ஆதாரம்: "மொழி வரலாறு' - பக்கம் 358).

இந்த எண்களைத் "தமிழ் எண்கள்' என்று உலகம் ஏற்றுக் கொண்டாலும், உள்ளூர் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன் என்பதுதான் தெரியவில்லை. தமிழில் ஏதேனும் நல்லவை தென்பட்டால் அவை பிறமொழியிலிருந்து வந்ததென்று கூறுவதும், ஆங்கிலத்திலிருந்து கிடைத்ததென்று கருதுவதும் நம்முடைய மரபாகிப் போனது. இந்தத் தாழ்வு மனப்பான்மை அகல வேண்டும்.

இவை தமிழ் என அறிந்த பிறகும், இதன் மாற்று வடிவங்களையே தமிழ் எனக்கூறி புழக்கத்துக்குக் கொண்டுவர முயல்வது சரியன்று; உலகம் ஏற்றுக் கொண்டதை நாமும் உவப்புடன் ஏற்போம்.

செம்மொழித் தமிழின் சிறப்புகளுள் தலையாய மணிமகுடம் இதுவென ஓங்கி ஒலிப்போம். தன் பிள்ளையை உலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை எந்தத் தாயும் கண்ணீர் மல்க வரவேற்கவே செய்வாள்.

தமிழகம் உலகத்துக்கு அளித்திருக்கும் மாபெரும் கொடை இது. இதற்கு உலகமே தமிழ்மொழிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. இதற்காக தமிழ்மக்கள் பெருமைப்பட வேண்டும்; பெருமைப்படுவதற்கு அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்திருக்க வேண்டுமே! இனிமேலும் ஐயம் வேண்டாம்; உலக எண்கள் தமிழ் எண்களே!

 

ஆண்டுக்கு 2 மில்லியன் மக்கள் இறப்பு : சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை; ஐ,நா., பிரகடனம்

Print PDF

தினமலர் 29.07.2010

ஆண்டுக்கு 2 மில்லியன் மக்கள் இறப்பு : சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை; ,நா., பிரகடனம்

.நா., : தனிமனிதன் ஒருவனுக்கு சுத்தமான குடிநீர் என்பது மனிதனின் அடப்படை உரிமையாக ஐக்கிய நாட்டு சபை பிரகடனப்படுத்தியிருக்கிறது. சுத்தமான குடி நீர் கிடைக்காமல் அல்லல் படும் மக்களின் நிலை பெரும் கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

நாட்டில் வாழும் மனிதனின் சுகாதாரத்திற்கும் உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. உலக அளாவிய தண்ணீர் பிரச்னை குறித்து ஐ.நா., விவாதித்தது. ஏற்கனவே 190 நாடுகள் ஒப்புதல் வழங்கிய சுத்தமான குடிநீர் வலியுறுத்தும் அடிப்படை உரிமை தீர்மானத்தை பொலிவியா முன்மொழிந்தது. இதில் 121 நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவாக ஓட்டளித்துள்ளன. 41 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டன.

இந்த தீர்மானம் மூலம் ஐ.நா.,வில் உள்ள உறுப்பினர் நாடுகள் இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இத்தோடு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு போதிய நிதி , தொழில்நுட்பம் ஆகியபயன்பாட்டை பெருக்கி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளது. பிற நாடுகள் தங்களது மக்களுக்கு சுத்தமான குடி நீர் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு போதிய வழிகாட்டுதலையும் தெரிவிக்க ஐ.நா., பணி செய்யும் .

எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். இது குறித்து ஜெர்மன் அம்பாசிட்டர் விட்டிங் கூறுகையில் ; ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை பெறும் நிலையில் இருக்கின்றனர். 2. 6 பில்லியன் மக்கள் சுகாதாரகேடுகளால் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர் என்றார்.

 

ஊழல் செய்யும் ஊழியர்களுக்கு "டிஸ்மிஸ்' என்பதே மிகவும் சரி

Print PDF

தினமலர் 28.05.2010

ஊழல் செய்யும் ஊழியர்களுக்கு "டிஸ்மிஸ்' என்பதே மிகவும் சரி

புதுடில்லி:ஊழல் செய்யும் அரசு ஊழியர்களை வேலையிலிருந்து "டிஸ்மிஸ்' செய்வது தான் சரியான தண்டனை என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.உத்தரகண்ட் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்தவர் சுரேஷ் சந்த் சர்மா. ஹரித்துவார் - ரிஷிகேஷ் தடத்தில் செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய சுரேஷ், பயணிகளிடம் கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொண்டு டிக்கெட் தராமல் முறைகேடு செய்து வந்தார். இது குறித்து பல முறை போக்குவரத்துக் கழகத்துக்கு புகார் சென்றது.கடந்த 87ல், இந்த புகார் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பப்பட்டார். மீண்டும் 88ம் ஆண்டு மே மாதம் திடீர் சோதனையின் போது, அவர் பல பயணிகளுக்கு டிக்கெட் தராமல் கட்டணத்தை வசூலித்து, தன் சொந்த செலவில் வைத்துக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து சுரேஷ், பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து அவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட் சுரேஷின் டிஸ்மிசை நியாயப்படுத்தியது. இதை எதிர்த்து அவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். "ஒரு சிறு தொகையை கையாடல் செய்ததற்காக பணியிலிருந்து நீக்குவது மிகப்பெரிய தண்டனை' என சுரேஷ் தெரிவித்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் சுதந்திரகுமார் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், "நம்பி ஒப்படைத்த பணத்தை கையாடல் செய்தது தவறு. அந்த தொகை சிறியதாகவும் இருக்கலாம்; பெரியதாகவும் இருக்கலாம். அரசு ஊழியர்கள் செய்யும் ஊழலுக்கு, அவர்களை பணியிலிருந்து நீக்குவது ஒன்று தான் சரியான தண்டனை' என கூறி தீர்ப்பளித்தனர். ஐகோர்ட்டின் தீர்ப்பையும் அவர்கள் உறுதிபடுத்தினர்.

 


Page 10 of 42