Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Encroachment

வாரத்துக்கு ஒரு சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றத் திட்டம்

Print PDF
தினமணி                 11.04.2013

வாரத்துக்கு ஒரு சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றத் திட்டம்


பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்கு காரணமாக உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

1. மாவட்டத்தில் போக்குவரத்து சீரமைப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமையில் அண்மையில் நடந்தது.

2. எஸ்.பி. ராதிகா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளர் பொன்செல்வன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

3. கூட்டத்தில், மாவட்டத்தின் பிரதான நகர்களில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் கூறினார்.

4. அப்போது, போலீஸ் தரப்பில் நகரப் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் பெருகியுள்ள ஆக்கிரமிப்பு காரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, இதனால் பல்வேறு சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படுவதாக கூறினர்.

5. அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை, வருவாய் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இணைந்து எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் அகற்ற உத்தரவிட்டார்.

6. முதல் கட்டமாக கடலூர் நகரின் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அதைத் தொடர்ந்து பிற நகரங்களில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

7. அதன்படி கோட்டாட்சியர் ரா.லலிதா தலைமையில் நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி கடலூர் நகரின் பிரதான சாலைகளை ஆய்வு செய்தனர். ÷அதில், முதல் கட்டமாக வரும் 13-ம் தேதி கடலூர் - திருவந்திபுரம் சாலை மற்றும் வண்டிப்பாளையம் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்துள்ளனர்.

8. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாரம் ஒரு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதேப்போன்று மாவட்டத்தின் பிற நகரங்களிலும் அந்தந்தப் பகுதி வருவாய், நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அல்லது பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு

Print PDF
தினமணி        11.04.2013

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு


சாலையோரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, அவற்றை உடனடியாக அகற்றுமாறு ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

சட்டம், ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கோடை வெயிலின் அதீத தாக்கத்தின் காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. இதனால், மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் வறண்டு விட்டது. இதன் காரணமாக, தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இப் பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்படும் குப்பைகளை வலைகளால் மூடி, தெருக்களில் சிதறாமல் எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.

மாநகராட்சி குப்பை கொட்டும் இடத்தில், குப்பைகள் தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழல் சீர்கேட்டை தடுக்கும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கையில் மாநகராட்சியினர் ஈடுபடுமாறும், மேற்படி முறைகேட்டில் ஈடுபடும் நபர்களை, காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறும் ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மாவட்டம் முழுவதும் சாலை ஓரங்களிலும், பிற இடங்களிலும் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அவற்றை உடனுக்குடன் அகற்றவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பெ. ரவீந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.சாந்தி, வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.ஆறுமுகம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் துரைப்பாண்டியன் மற்றும் வருவாய் காவல்துறை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

குடந்தை பேருந்து நிலையத்தில் 24 கடைகள் அகற்றம்

Print PDF
தினமணி        09.04.2013

குடந்தை பேருந்து நிலையத்தில் 24 கடைகள் அகற்றம்


கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த 24 பூ, பழக்கடைகளை நகராட்சியினர் திங்கள்கிழமை மாலை அகற்றினர்.

திமுக ஆட்சியில் இங்கு சுற்றுலா மேம்பாட்டு கழக வளர்ச்சி நிதியைக் கொண்டு 24 கடைகள் கட்டப்பட்டு, பழம், பூ வியாபாரம் நடைபெற்றது. இந்நிலையில் ஆட்சி மாறிய பின் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாகக் கூறி 24 கடைகளையும் அகற்ற வேண்டும் என நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 31.3.2012 வரை கடைகளுக்கான டெண்டர் முடிந்து, அதிலிருந்து தினசரி வசூல் தொகையாக ஒரு கடைக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 50 மட்டும் நகராட்சியால் வசூலிக்கப்பட்டது.

இந்த கடைகளை டெண்டர் எடுத்து நடத்தும் திமுகவினர் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த நவ. 20-ம் தேதி நகராட்சி அதிகாரிகள் கடைகளை இடிக்க வந்தபோது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் கடைகளை இடிக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்ததால் அப்போது இடிக்கவில்லை.

பின்னர் உயர் நீதிமன்றத்தில் வியாபாரிகள் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டபோது, அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, இது தொடர்பாக கீழ் நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

அதன்படி வியாபாரிகள் கும்பகோணம் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர். வியாபாரிகளும், நகராட்சி நிர்வாகமும் கலந்து பேசி சுமூக முடிவை எடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளும், ஆணையர் உள்ளிட்டோரும் பேசினர்.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை  நகராட்சி அதிகாரிகள் 2 பொக்லீன் இயந்திரங்கள், புல்டோசர் இயந்திரத்துடன் வந்தனர். கால அவகாசம் வேண்டும் என்ற வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்காமல் கடைகளை இடிக்கத் தொடங்கினர். தர்னா செய்த முயன்றவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
 


Page 19 of 204