தினகரன் 16.08.2010
பொருளாதார வளர்ச்சி ஏழைகளுக்கும் வேண்டும்
ஜாம்ஷெட்பூர், ஆக. 16: இந்திய பொருளாதார வளர்ச்சியின் வாய்ப்புகள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 25 சதவீதம் பேருக்கு கிடைக்க வேண்டும் என்று டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குனர் எச்.எம்.நெரூர்கர் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் 64வது சுதந்திர தின விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நெரூர்கர் ஊழியர்கள் முன்னிலையில் பேசியதாவது:
நாட்டில் 4ல் ஒருவர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிறார். அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் 25 கோடி பேர் தவிப்பது உண்மையிலேயே அவமானம் ஆகும்.
சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் இந்த மக்கள் பங்கு கொள்ளாதது, வரும் காலத்தில் நாட்டில் அபாயகரமான சூழலை உருவாக்கும்.
எனவே இவர்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நிறுவனங்கள் செயல்பட வேண்டும். டா டா மோட்டார்ஸ், டாடா கெமிக்கல்ஸ் மற்றும் கோத்ரெஜ் நிறுவனங்கள் கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முயற்சிகள் எடுத்து வருகின்றன.
ஏழை மக்களும் காரில் செல்ல வேண்டும் என்ற நோக்கில் குறைந்த விலையில் டாடா மோட்டார், நானோ கார் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து கோத்ரெஜ், மினி ரெப்ரிஜிரேட்டர் (குளிர்சாதன பெட்டி) தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. நாம் சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளை கடந்து விட்டோம்.
ஆனால் உலகமயமாக்கல் மூலம் 20 ஆண்டுகளாகத்தான் பொருளாதார சுதந்திரத்தை அனுபவிக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.