தினகரன் 07.09.2010
பெங்களூர் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்தப்படும்
பெங்களூர், செப். 7: மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்று மேயர் எஸ்.கே.நடராஜ் தெரிவித்தார்.
மாநில துப்புரவு தொழிலாளர் வார விழா நேற்று தொடங்கி வரும் 13ம் தேதிவரை கொண்டாடப்படுகிறது. இதன் துவக்க விழா பெங்களூரில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மேயர் எஸ்.கே.நடராஜ், சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். இதை தொடர்ந்து அவர் பேசியதாவது:
பல இன்னங்களை தாங்கி மக்களின் சுகாதாரத்தை பேணி காக்கும் புனித தொழில் செய்யும் நீங்கள், வாழ்க்கையில் எந்த பலனும் அனுபவிக்காமல் அனுபவிக்கிறீர்கள். உங்களின் உண்மையான உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்க வேண்டும்.
மக்களின் உடல் ஆரோக்கியத்தை காக்கும் நீங்கள், உங்கள் உடல் நலத்தை கெடுத்து கொள்கிறீர்கள். உங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இது மாநகராட்சியின் கடமை என்பதில் மாற்று கருத்தில்லை.
மாநகராட்சியில் துப்புரவு பணி மேற்கொள்வது தொடர்பாக அடுத்த மாதம் முதல் புதிய டெண்டர் வழிமுறை பின்பற்றப்படும். சிங்கிள் டெண்டர் முறையில் வார்டுக்கு ஒரு ஒப்பந்ததாரர் நியமனம் செய்யப்படும்.
இவர்கள் துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தேவையான சம்பளம், கை குளோஸ், புட், மாஸ்க் உள்பட தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் பொருட்கள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல நிபந்தனைகள் வைக்கப்படும். இதை ஒப்புக்கொண்டு டெண்டர் எடுக்க முன் வருவோருக்கு மட்டுமே பணி ஒப்படைக்கப்படும். இவ்வாறு மேயர் பேசினார்.