தினகரன் 14.09.2010
ஏழைகளுக்கு வீட்டு வசதி பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தும்
ஷிமோகா, செப். 14: ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு வீட்டு வசதியை ஏற்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி உள்ளது என்று மாநில பா.ஜ.தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறினார்.
ஷிமோகா அருகே உள்ள கும்பாரகுண்டியில் கர்நாடக குடிசை மாற்றுவாரியம் மற்றும் நகரசபை சார்பில் வீட்டுமனைபட்டா வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில பா.ஜ.தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறியதாவது:
ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு வாஜ்பாய் வீட்டுவசதி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு தந்துள்ளது. இதனை தகுதியானவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வாஜ்பாய் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பயனாளிகள் ரூ30 ஆயிரம் வழங்க வேண்டும். அவர்களுக்கு ரூ50 ஆயிரம் வங்கியில் கடனாக கிடைக்கும். ரூ50 ஆயிரம் மானியமாக கிடைக்கும்.
கும்பாரகுண்டி மக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமலேயே பல வருடங்களாக இங்கு வசித்து வருகின்றனர். நாங்கள் அவர்களுக்கு கொடுத்தவாக்குறுதியின்படி பட்டா வழங்கியுள்ளோம். மேலும் இங்குள்ள ஏழைகளுக்கு ஆஷ்ரயா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தரப்படும். அது போல நகரில் உள்ள பிற குடிசைபகுதிகளுக்கும் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பட்டு வருகிறது. இதற்கு குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.