தினமணி 19.10.2010
நகர்ப்புறங்களில் வீடு கட்ட கடனுதவி
உதகை, அக். 18: நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் வீடு கட்டுவதற்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கடனுதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வீடு கட்ட மற்றும் வீடு வாங்க குறைந்த வட்டியில்
கடனுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் கடன் பெற, நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற ஏழை மக்கள் விண்ணப்பிக்கலாம். நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரின் மாத வருமானம் ரூ. 5 ஆயிரத்துக்குள்ளும், குறைந்த வருவாய் பிரிவினரின் மாத வருமானம் ரூ. 10 ஆயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
நலிவுற்ற பிரிவினருக்கு ரூ. 1 லட்சமும், குறைந்த வருவாய் பிரிவினருக்கு ரூ. 1.6 லட்சமும் கடனாக வழங்கப்படும். இக்கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் தொகை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுத் தரப்படும். கடனுக்கு உரிய வட்டித் தொகையில், 5 சதம் மானியமாக வழங்கப்படும்.
கூடுதலாக கடன் தொகை தேவைப்படுவோருக்கு, கூடுதல் தொகைக்கேற்ப வழக்கமான வட்டி வசூலிக்கப்படும். நலிவுற்ற பிரிவினர் கட்டும் வீடு குறைந்தபட்சம் 25 ச.மீ. பரப்பலும், குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடு 40 ச.மீ. பரப்பிலும் இருக்க வேண்டும். சொந்த வீடு இல்லாதோர் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.
சொந்தமாக நிலம் வைத்திருப்போர், அதற்கான பட்டா உரிமை பெற்றிருக்க வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, கோûவை டாடாபாத் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய செயற் பொறியாளரைத் தொடர்பு கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்திற்கு உள்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில், உரிய அலுவலரை நேரில் அணுகி, கடன் விண்ணப்பம் அளித்துப் பயனடையலாம்.