தினமணி 19.12.2009
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முத்திரைத் தீர்வையில் விலக்கு: ஸ்டாலின்
சென்னை, டிச.18: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முத்திரைத் தீர்வையில் இருந்து விலக்கு அளித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
தமிழகத்தில் சுய உதவிக் குழுக்களின் மேம்பாட்டுக்கு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நகர்ப்புறத்தில் அமைந்துள்ள சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்பட்டு வருகிறது. 2008}09}ம் நிதியாண்டில் 1.5 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.150 கோடி வழங்கப்பட்டது.
சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை சந்தைப்படுத்த, சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே வணிக வளாகம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளிடம் இருந்து கடன் பெறும் போது சமர்ப்பிக்கும் ஆவணங்களுக்கான முத்திரை தீர்வை செலவினை தள்ளுபடி செய்ய வேண்டும் என பெரும்பாலான சுய உதவிக் குழுக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனிடையே, கூட்டமைப்புகள் மற்றும் தொழில் கூட்டமைப்புகளுக்கு முத்திரை தீர்வைக்கு முழு விலக்கு அளிக்கப்படும் என பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் தொழில் கூட்டமைப்பின் மேம்பாட்டுக்காக வங்கிகளிடம் இருந்து கடன் பெறும் போது சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களுக்கான முத்திரை தீர்வைக்கான செலவினை மேற்கொள்வதில் இருந்து முழுவிலக்கு அளிக்கப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.