தினகரன் 09.08.2010
வள்ளுவர் கோட்டம் அருகில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு பிரமாண்ட வணிக வளாகம்
சென்னை, ஆக. 9: மகளிர் சுயஉதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்காக, ரூ15 கோடி செலவில் வள்ளுவர் கோட்டம் அருகில் பிரமாண்டமான வணிக வளாகம் கட்டப்படுகிறது. இந்த பணி விரைவில் முடியவுள்ளது.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், சுய உதவிக் குழு இயக்கத்தை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் சிறப்பு அமைப்பான, ‘தமிழ்நாடு மகளிர் சுய உதவிக் குழு நலச் சங்கம்’ கொண்டு வரப்பட்டுள்ளது.
அவர்கள் உற்பத்தி செய்யும் ஊறுகாய், வற்றல், உடனடி சமையலுக்கு தேவையான மசாலா பொடிகள், பொம்மைகள், கண்கவர் பிளாஸ்டிக் மணிகள், புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை, ஒரே வளாகத்தில் சந்தைப்படுத்தி, விற்பனைக்கான வாய்ப்பை ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் சுனாமி அவசர கால உதவி திட்டத்தின், சிறப்பு திட்டமாக உள்கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் ரூ15.32 கோடி செலவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வளாகம், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் கட்டப்பட்டு வருவதாக, சட்டப் பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்த போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி, வள்ளுவர் கோட்டம் அருகில் மகளிர் சுய உதவி குழுக்களுக்காக கட்டப்படும் வணிக வளாக கட்டிடப் பணியை, சுனாமி திட்ட செயலாக்க அலகு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்து ராஜ் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த கட்டிடம் தரை தளம் மற்றும் 4 தளங்களுடன் 65 ஆயிரம் சதுர அடியில் உருவாகிறது. இந்த பணி, கடந்த ஆண்டு ஜன வரியில் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் மாதமே முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இப் போதுதான் பணி முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. தீபாவளிக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று சுனாமி திட்ட செயலாக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வளாகத்தில் பொங்கல், தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனை கண்காட்சி நடத்தப்படும் என்றும், சுய உதவிக் குழுவினருக்கு குழுவை வழி நடத்திச் செல்லும் தலைமைப் பண்பு, குழுவாக செயல்படும் திறன், பல்வேறு வகையான கைவினைப் பொருட்கள் தயாரிப்பது உள்ளிட்ட பயிற்சி அளிக்கும் பணிகளும், இந்த வளாகத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரூ15 கோடியில் உருவாகிறது