தினகரன் 08.10.2010
பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை அதிகரிப்பு
மும்பை,அக்.8:மும்பை மாநகராட்சியில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறையை 180 நாட்களாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சியில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு தற்போது மகப்பேறு விடுமுறையாக 90 நாட்கள் வழங்கப்படுகிறது. இதனை 180 நாட்களாக அதிகரிக்கும் படி ஏற்கனவே மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அதனை இன்னும் அமல்படுத்தவில்லை. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு நேற்று விசாரணைக்கு வந்த போது மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவில், மாநகராட்சி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை நாட்களை 180 நாட்களாக அதிகரிக்கும் சட்டதிருத்தத்திற்கு ஏற்கனவே மாநகராட்சியின் சட்டக்கமிட்டி மற்றும் நிலைக்குழு ஒப்புதல் அளித்து விட்டது. 14ம் தேதி மாநகராட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்த பிறகு, இத்திட்டம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, மாநில அரசு இத்திட்டத்தை 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதியே நிறைவேற்றும் படி கேட்டுக்கொண்டும் ஏன் அதனை நிறைவேற்ற இவ்வளவு கால தாமதம் ஏற்பட்டது என்பதை தெரிவிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாநகராட்சியின் இந்த முடிவால் இனி மாநகராட்சியில் பணியாற்றும் பெண்களுக்கு 180 மகப்பேறு விடுமுறை நாட்கள் கிடைக்கும். இதனால் அவர்களால் குழந்தையை நல்ல முறையில் கவனித்துக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.