Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Treatment

கூட்டுக் குடிநீர் திட்டம்: சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வாழ்வச்சகோஷ்டம் பகுதியில் ஆய்வு

Print PDF

தினமணி 12.04.2010

கூட்டுக் குடிநீர் திட்டம்: சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வாழ்வச்சகோஷ்டம் பகுதியில் ஆய்வு

தக்கலை, ஏப். 11: பத்மநாபபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வாழ்வச்சகோஷ்டம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றி பத்மநாபபுரம் நகராட்சி, திருவிதாங்கோடு, முளகுமூடு, வாழ்வச்சகோஷ்டம், காட்டாத்துறை, ஏற்றக்கோடு பேரூராட்சிகள், மருதூர்குறிச்சி, சடையமங்கலம், முள்ளங்கனாவிளை, நட்டாலம், முத்தலக்குறிச்சி, ஊராட்சிகள் உள்ளிட்ட 20 வழியோரக் கிராமங்கள் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறது.

பத்மநாபபுரம் நகராட்சி சார்பில் மருந்துக்கோட்டையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இப் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் அரசுக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்து.

இதையடுத்து, மருதூர்குறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட வாழ்வச்ச கோஷ்டம் கிராமப் பகுதியில் உள்ள நான்கரை ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் சவரிமுத்து தலைமையில், நகர்மன்றத் தலைவர் ரேவன்கில் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.

இப் பகுதியில் உள்ள நான்கரை ஏக்கர் நிலத்தில் 2.5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தைத் தேர்ந்தெடுத்து ஆட்சியரின் ஒப்புதலைப் பெற்று பின்பு திட்டப் பணிகளை மேற்கொள்ள ஆய்வு மேற்கொண்டு, மதிப்பீடு தயாரித்து முழுவடிவில் அரசுக்கு அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது, குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் சந்திரசேகர் மற்றும் உதவியாளர் மில்டன், அலுவலர்கள் ஆகியோர் உடன் சென்றனர்

 

வீணாகும் தண்ணீரை மறுசுழற்சி மூலம் பயன்படுத்துவதில் விழிப்புணர்வு தேவை

Print PDF

தினமணி 07.04.2010

வீணாகும் தண்ணீரை மறுசுழற்சி மூலம் பயன்படுத்துவதில் விழிப்புணர்வு தேவை

மதுரை, ஏப். 6: வீணாகும் தண்ணீரை மறுசுழற்சி செய்து அதைப் பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் நடைபெற்ற "தண்ணீர் மேலாண்மை' குறித்த சிறப்புக் கருத்தரங்கில் தியாகராஜர் கல்லூரிப் பேராசிரியர் சந்திரன் பேசியது:

தமிழகத்தின் மழையளவு ஆண்டுக்கு சராசரியாக 820 மில்லி மீட்டராக உள்ளது. மதுரை மாவட்டத்தில் இது 850 மில்லி மீட்டராக உள்ளது. மாநிலத்தை ஒப்பிடும்போது மதுரையில் மழையளவு குறிப்பிடும்படியாகவே உள்ளது.

தமிழகத்தில் 1980}ம் ஆண்டில் 39 ஆயிரம் கண்மாய்கள் இருந்தன. மாசுபடும் திறன் குறைவாக இருந்ததால் அப்போது தண்ணீரின் தரமும் நன்றாகவே இருந்தது. ஆனால், தற்போது நிலத்தடி நீர் மிகவும் வேகமாகக் குறைந்து வருகிறது.

மதுரையைப் பொறுத்தவரை வைகை மற்றும் மழையை நம்பியே நிலத்தடி நீர் உள்ளது. மதுரையில் 24 பிரதானக் கண்மாய்கள் இருந்த நிலையில், தற்போது 18 கண்மாய்கள் மட்டுமே உள்ளன.

இதில் மாடக்குளம், தென்கால், வண்டியூர், நிலையூர், குன்னத்தூர் ஆகிய கண்மாய்கள் மட்டுமே வலுவான நிலையில் உள்ளன. கண்மாய்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டால்தான், நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும்.

அதேபோல், வீணாகும் தண்ணீரை மறுசுழற்சி மூலம் பயன்படுத்துவது தொடர்பாகவும், அதிக விழிப்புணர்வு வேண்டும். தற்போது சென்னை போன்ற நகரங்களில் வீடுகள் கட்டும்போது வீணாகும் தண்ணீரை தேக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்புப் பொறியாளர் அகிலன் பேசுகையில், தண்ணீர் மாசுபடுவது தற்போது அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் மேலூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீரில் புளோரைடு அளவு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களைப் பல்வேறு நோய்கள் தாக்கக்கூடும். மதுரையின் நிலத்தடி நீரின் தரமும் மிகவும் குறைவாக உள்ளது. இருக்கும் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

Last Updated on Wednesday, 07 April 2010 09:34
 

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணி: நகர்மன்றத் தலைவர் ஆய்வு

Print PDF

தினமணி 17.03.2010

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையப் பணி: நகர்மன்றத் தலைவர் ஆய்வு

விழுப்புரம், மார்ச் 16: விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடைப் பணி ரூ.35 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை அடிக்கடி ஆய்வு செய்து விரைவில் முடிய நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜனகராஜ் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

பாதாள சாக்கடைப் பணிகளால் தெருக்களிலும், சாலைகளிலும் தோண்டப்படும் பள்ளங்கள் நீண்ட நாள்களாக பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் உடனுக்குடன் பள்ளங்களை மூடிவிட உத்தரவுகள் பிறப்பித்து வருகிறார்.

இந்நிலையில் பாதாள சாக்கடைத் திட்டத்தின் மூலம் வெளியாகும் கழிவுநீரை சுத்திகரிக்க கா.குப்பத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் 90 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம் கட்டும் பணியையும், எருமணந்தாங்கலில் 3.50 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணிகளையும் நகர்மன்றத் தலைவர் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியது: கா.குப்பம் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் பணி 10 மாதங்களில் நிறைவுபெற திட்டமிடப்பட்டது. இதனை 9 மாதங்களிலேயே முடிக்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்மீது அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. பின்னர் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மக்களுக்கு எந்த சிரமும் இல்லாமல் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன், ஓவர்சீயர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் கனகராஜ், சென்னை சுப்பையா கட்டுமான நிறுவன மேலாளர்கள் மதன், கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்

Last Updated on Wednesday, 17 March 2010 10:44
 


Page 21 of 28