தினமலர் 21.07.2010
மீஞ்சூரில் 31ம் தேதி தொடக்கம் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
சென்னை, ஜூலை 21: மீஞ்சூர் அருகே கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை நேற்று பார்வையிட்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இதை வரும் 31ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைப்பார் என்று தெரிவித்தார்.
ஐவிஆர்சிஎல் நிறுவனம், பெப்பிஷா நிறுவனம் இணைந்து சுமார் ^600 கோடி மதிப்பீட்டில், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணியை, கடந்த 2007 பிப்ரவரியில் தொடங்கியது. தற்போது, பணி முடிவடைந்துள்ளது. இதை, நேற்று காலை 9.30 மணிக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை வரும் 31ம் தேதி முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் சென்னை மாநகரின் குடிநீர் பிரச்னை தீரும்" என்றார்.
பின்னர், விழா நடக்கும் இடத்தை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, எல் அண்ட் 1397904493 நிறுவனத்தின்
ஆயிரம் கோடி மதிப்பிலான கப்பல் கட்டும் தளம், ராணுவ தளம், பெட்ரோல் எரிவாயு உபகரண மேடை ஆகியவற்றின் முதற்கட்ட பணிகளையும் ஸ்டாலின் பார்வையிட்டார்.
அவருடன் ஐஏஎஸ் அதிகாரிகள் சிவ்தாஸ் மீனா, அசோக் வர்தன் ஷெட்டி, சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஞான இளங்கோவன், கணேசன், யோகேஸ்வரன், அலாவுதீன், திருவள்ளூர் கலெக்டர் ராஜேஷ், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பாஸ்கர்சுந்தரம், மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ் ராஜ், பொன்னேரி நகர திமுக செயலாளர் சங்கர் ஆகியோர் இருந்தனர்.