தினகரன் 29.07.2010
குடிநீராகும் கடல்நீர் 10 கோடி லிட்டர் தினமும் வினியோகம்
சென்னை, ஜூலை 29: கடல் நீரை குடிநீராக்கி சென்னை நகருக்கு சப்ளை செய்வதற்கான திட்டத்தை, முதல்வர் கருணாநிதி நாளை மறுநாள் (31ம் தேதி) மீஞ்சூரில் தொடங்கி வைக்கிறார்.
சென்னை நகரின் குடிநீர் பஞ்சத்தைப் போக்க, மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதைத்தொடர்ந்து, ணீ 400 கோடி செலவில் ஐவிசிஆர்எஸ் நிறுவனம், ஜெர்மன் நாட்டின் பெப்சோ நிறுவனம் இணைந்து இந்த ஆலையை தொடங்கியுள்ளன.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டத்தை 2007ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இப்போது இந்த நிறுவனம் அனைத்து பணிகளையும் முடித்து விட்டது. இதனால், வரும் 31ம் தேதி முதல்வர் கருணாநிதி கடல் நீரை குடிநீராக்கும் பணிகளை தொடங்கி வைக்கிறார். தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீரை இந்த நிறுவனம் வழங்கும். மீஞ்சூரில் குடிநீர் தயாரிக்கப்பட்டு 35 கி.மீ. தூரம் ராட்சத குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு, மாதவரம் மற்றும் செங்குன்றம் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நீர்தேக்கத் தொட்டிகளில் விடப்படும். அங்கிருந்து சென்னைக்கு வினியோகம் செய்யப்படும்.