தினமணி 21.09.2010
அதங்கோடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை 2011-க்குள் முடிக்க நடவடிக்கை
நாகர்கோவில், செப்.20: கன்னியாகுமரி மாவட்டம், அதங்கோடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் 2011-க்குள் முடிக்கப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
முடங்கி கிடங்கும் அதங்கோடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் என்ற தலைப்பில் தினமணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.19) செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பாக அவ் வாரியத்தின் நகர திட்ட கோட்ட அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பயனில் உள்ள களியக்காவிளை பேரூராட்சி மெதுகும்மல் ஊராட்சி, 22 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர்த் திட்டம் மற்றும் கொல்லங்கோடு பேரூராட்சி, ஏழுதேசம் பேரூராட்சி, 27 வழியோர குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர்த் திட்டம் ஆகியவற்றுக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல்.
மேல்புறம் ஒன்றியத்திலுள்ள 79 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர்த் திட்டம் ஆகியவற்றுக்கு அரசு ஆணை எண் 211-ன் படி நகராட்சி நிர்வாகத்தால் 5.11.09-ல் ரூ. 16.70 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டு ஒப்பந்தப் புள்ளிகள் முடிவு செய்யப்பட்டு தென்மண்டல தலைமைப் பொறியாளரால் 17.9.2010-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.