Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Water Supply

உள்ளாட்சி: தமிழகத்தின் அவசரத் தேவை... நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்கள்!

Print PDF

தி இந்து      04.04.2017

உள்ளாட்சி: தமிழகத்தின் அவசரத் தேவை... நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்கள்!

டி.எல்.சஞ்சீவிகுமார்

தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை தொடங்கிவிட்டது. நீலகிரியைத் தமிழ கத்தின் தண்ணீர்த் தொட்டி என்பார்கள். அங்கேயே நிலத்தடி நீர் கடுமையாக கீழே இறங்கிவிட்டது. சென்னையின் குடிநீர் தேவைக்காக விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பதை அதிகாரிகள் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

ஒரு நாளைக்கு சுமார் 100 மில்லியன் லிட்டர்கள் வரை விவசாய கிணறுகளில் இருந்து சென்னையின் குடி நீருக்காக உறிஞ்சுகிறார்கள். சென்னையில் மட்டும் தண்ணீர் லாரிகள் ஒரு நாளைக்கு 6,500 நடை வரை அடிக்கின்றன.

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் தண்ணீர் இருப்பு கவலைக்கிடமாக இருக்கிறது. கல்குவாரிகள், ஏரிகள், நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களில் இருந்தெல்லாம் தண்ணீரைக் குடிக்க முடியுமா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அமைச்சர்.

ஆனாலும் குடிநீர் பிரச்சினை தீரவில்லை. ஆனால், கடந்த 2012-13 தொடங்கி 2015-16 நிதியாண்டு வரை, கடந்த ஐந்து ஆண்டுகளில் குடிநீர் விநியோகத்துக்கு மட்டும் தமிழக அரசு செய்துள்ள செலவுகளைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு மட்டும் ஐந்து ஆண்டுகளில் செய்த செலவு ரூ. 9,148 கோடி. சென்னையில் குடிநீர் விநியோகம் செய்ய மட்டும் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் செய்துள்ள செலவு ரூ.1,979 கோடி. கடல் நீரைக் குடி நீராக்க பேரூரில் ரூ.4,070 கோடிகளைக் கொட்டியிருக்கிறார்கள். நெம்மேலியில் ரூ.1,371 கோடிகளைக் கொட்டியிருக்கிறார்கள். ராமநாதபுரத்திலும் தூத்துக்குடியிலும் தலா ரூ.1,500 கோடிகளைக் கொட்டியிருக்கிறார்கள்.

ஊரக வளர்ச்சித் துறை மூலம் செய் யப்பட்ட செலவு மட்டும் ரூ.5,498 கோடி யாகும். இந்த 2016-17 நிதியாண்டில் மட்டும் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.65 கோடியிலும் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.46 கோடியிலும், ஊரகப் பகுதிகளில் ரூ.703 கோடியிலும் என உள்ளாட்சிகளில் மட்டும் ரூ. 814 கோடியில் குடிநீர் பணிகள் நடக்கின்றன. ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.18,841 கோடி குடிநீர் விநியோகத்துக்காக மட்டும் செலவிடப்பட்டிருக்கிறது.

இது மாநில அரசு செய்துள்ள செலவு மட்டுமே. மாநகராட்சி கள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் தங்களது சொந்த நிதியில் குடிநீருக்காக செய்துவரும் செலவுகள் தனி. இவை தவிர மத்திய, மாநில அரசு களின் நிதிக்குழு மானியத் திட்டங்கள், ஒருங் கிணைத்து ஒப்படைக்கப்பட்ட வருவாய்த் திட்டம், உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டம், தாய் திட்டம், பேரிடர் நிவாரண நிதி ஆகிய திட்டங்களில் இருந்தும் குடிநீர் விநியோகச் செலவுகளுக்காக ரூ.1,478 கோடியை முன்பதிவு செய்து வைத்திருக்கிறது தமிழக அரசு. ஆனாலும், குடிக்க தண்ணீர் இல்லை!

குடிநீர் பிரச்சினையைத் தமிழக அரசு ‘விநியோகம்’ என்கிற ஒற்றைப் பக்கத்தில் இருந்து மட்டுமே அணுகுவதுதான் பிரச் சினைகளுக்குக் காரணம். ‘நீர் ஆதாரம்’ என்கிற இன்னொரு பக்கத்தை அரசு கண்டுகொள்வது இல்லை. அதற்காக செலவு செய்யப்படும் மொத்த பணமும் ஊழலில் கரைந்துவிடுகிறது. உதாரணத்துக்கு, குடிநீர் பிரச்சினை வரும் போதெல்லாம் நதியின் படுகைகளிலும் நிலத்தடி நீர் கணிசமாக இருக்கும் கிராமங்களிலும் கூடுதலாக ராட்சஷ ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுகிறார்கள். ஏற்கெனவே தோண்டிய ஆழ்துளைக் கிணறுகளை மேலும் ஆழப் படுத்துகிறார்கள். புவியியல்ரீதியாக மிகவும் ஆபத்தானது இது.

அளவுக்கு அதிகமாக தோண்டப்படும் ஆழ்துளைக் கிணறுகளால் ஆற்றின் இயல்பான நீரோட்டம் தடைபடும். ஆறுகள் காலம் காலமாக மரபு வழியில் பயணிக்கும் தன்மை கொண்டவை. நிலத்தடி நீரின் தன்மையைப் பொறுத்தே அந்த மரபு வழிப் பயணம் அமையும். இப்போது ஓடிக்கொண்டிருக்கும் காவிரி ஒருகாலத்தில் சென்னைக்கு மிக அருகில் ஓடிய ஆறுகளில் ஒன்று என்றால் நம்ப முடிகிறதா? செயற்கைக் கோள் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளில் ஒன்று இது. காவிரியை நாம் எங்கு துரத்தியிருக்கிறோம் பாருங்கள்.

தவிர, அதிக எண்ணிக்கையில் மற்றும் அதிக ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு களைத் தோண்டுவதால் மண்வளமும் பாதிக்கப்படுகிறது. அதிகளவு ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டும்போது கோடையில் நிலத்தடி நீர் மிக அதிகமான ஆழத்துக்கு கீழே இறங்கிவிடும். சிறிது காலத்தில் மீண்டும் நிலத்தடி நீர் உயரும்போது அந்தத் தண்ணீர் பூமியின் அடியாழத்தில் இருக்கின்ற, பல்வேறு கடினமான கனிமங்களையும் சேர்த்தே வெளியே கொண்டுவரும். இந்தத் தண்ணீரைப் பாசனத்துக்கு பயன்படுத்தும்போது விவசாய நிலம் களர் நிலமாகிவிடும்.

குடிநீராகப் பயன் படுத்தும்போது பல்வேறு நோய்கள் ஏற்படும். இந்தப் பிரச்சினை காரணமாக கங்கையின் சில இடங்களில் நீரோட்டம் பாதிக்கப்பட்டதுடன், கங்கை டெல்டாவின் வண்டல் மண்வளமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப்பில் இருந்து ராஜஸ்தானின் தார் பாலைவனத்துக்கு தண்ணீர் கொண்டுச் செல்லும் இந்திரா காந்தி கால்வாய் பகுதிகளிலும் இதுபோன்ற பாதிப்புகள் அதிகம்.

உலகில் எதை வேண்டுமானாலும் உற்பத்தி செய்துகொள்ளலாம். ஆனால், எவ்வளவு கோடிகளைக் கொட்டினாலும் தண்ணீரை மட்டும் உற்பத்தி செய்ய முடியாது. தண்ணீரை நாம் சேமிக்க மட்டுமே இயலும். எனவே, இன்றைய நமது அவசரத் தேவை நீர்நிலைகளைப் புனரமைத்தல் மற்றும் பாதுகாப்பது மட்டுமே.

ஏரிகளையும் கண்மாய்களையும் குடிமராமத்து செய்வது மட்டுமே தண்ணீர் சேமிப்பு என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் சேமிப்பு நிறைய பரிமாணங்களைக் கொண்டது. எல்லையற்றது. வீடுகளில் தொடங்கி வயல்கள், சாலைகள், திறந்தவெளிகள், ஆறுகள், குளங்கள் என தண்ணீர் சேமிப்பு முறைகள் பல உள்ளன.

எங்கெல்லாம் நிலத்தடி நீரை செறிவூட்டும் வாய்ப்புகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்கள் மேற் கொள்ளலாம். உதாரணத்துக்கு, மழை பெய்தால் சென்னையில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கும் என்கிற விரிவான விவரங்கள் அடங்கிய அறிவியல்பூர்வமான வரைப்படம் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர் மையம் தயாரித்துள்ளது. அங்கெல்லாம் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டங்களை செயல்படுத்தலாம்.

ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் பயன்பாட்டில் இல்லாத கிணறுகள், நிலத்தடி நீர் வற்றிவிட்ட ஆழ்துளைக் கிணறுகள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றன. இவற்றை நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, ராஜஸ்தானில் நடை முறையில் இருக்கும் ஒரு திட்டத்தை சொல்கிறேன். அங்கு விவசாயக் கிணறுகளில் நீர் சேமிக்கும் திட்டம் பிரபலம். வயல்களில் பெய்யும் மழை நீரை மொத்தமாக அறுவடை செய்யும் திட்டம் இது. வயல்களில் பெய்கின்ற மழை நீர் அனைத்தும் விவசாயக் கிணற்றுப் பக்கம் வரும்படியாக கால்வாய் அமைப்பார்கள். இந்தக் கால்வாய் மூலம் தண்ணீர் நேரடியாக கிணற்றுக்குள் பாயாது. அவ்வாறு பாய்ந்தால் கிணற்றில் அதிகளவு மண் சேர்ந்து கிணறு விரைவில் தூர்ந்துவிடும்.

கிணற்றின் முகப்பில் நிலத்தடியில் ஒரு திறந்தவெளி தொட்டி கட்டுவார்கள். தொட்டியின் அடிப்பாகத்தில் கூழாங்கற்கள், கரித்துண்டுகள், மணல் கொட்டப்பட்டு, வலை வைத்து இறுக்கி மூடப்படும். கால்வாயில் இருந்து இந்தத் தொட்டியில் விழும் மழை நீர் வடிக்கட்டப்பட்டு கிணற்றுக்குள் விழும். தமிழகம் முழுவதும் உள்ள வயல்களில் விவசாயிகள் இதனைப் பயன்படுத்தலாம்.

திறந்தவெளி கிணற்றில் மட்டும் அல்ல, ஆழ்துளைக் கிணறுகளிலும் மழை நீர் சேகரிக் கலாம். ஆழ்துளைக் கிணற்றை சுற்றிலும் ஒரு தொட்டி கட்ட வேண்டும். ஆழ்துளைக் கிணற்றின் உட்பகுதியில் இருக்கும் குழாயில் ஒரு மீட்டர் ஆழத்துக்கு குழாயைச் சுற்றிலும் துளைகள் இட வேண்டும். இதைச் சுற்றி இறுக்கமாக வலை கட்ட வேண்டும்.

குழாயைச் சுற்றி கூழாங்கற்கள், கரித்துண்டுகள், மணல் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். இப்போது தூய்மையாக வடிகட்டப்பட்ட தண்ணீர் ஆழ்துளைக் கிணற்றில் செறிவூட்டப்படும். தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் கிராமப் பஞ்சாயத்துகளில் இதனை செயல்படுத்தி இருக்கிறார்கள். இவை மட்டும் அல்ல, இன்னும் நிறைய இருக்கிறது.

Last Updated on Wednesday, 05 April 2017 05:26
 

வறட்சி காலங்களில் சென்னையின் தாகம் தீர்க்க கடல்நீர் மூலம் கிடைக்கும் குடிநீரே கைகொடுக்கும்: பொதுப்பணித் துறை மூத்த அதிகாரிகள், நிபுணர்கள் கருத்து

Print PDF

தி இந்து      31.03.2017

வறட்சி காலங்களில் சென்னையின் தாகம் தீர்க்க கடல்நீர் மூலம் கிடைக்கும் குடிநீரே கைகொடுக்கும்: பொதுப்பணித் துறை மூத்த அதிகாரிகள், நிபுணர்கள் கருத்து

சென்னை மீஞ்சூரில் செயல்படுத்தப்படும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். (கோப்புப் படம்)
சென்னை மீஞ்சூரில் செயல்படுத்தப்படும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். (கோப்புப் படம்)

தமிழகத்தில் 1993-ம் ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டபோது காவிரி, பாலாறு, கிருஷ்ணா நதிநீர்தான் சென்னை மக்களின் தாகம் தீர்த்தது. அதுபோல இந்த ஆண்டு கடல்நீரில் இருந்து கிடைக்கும் குடிநீர் நிலைமையைச் சமாளிக்க உதவுகிறது. எதிர்காலத்திலும் கடல்நீரில் இருந்து கிடைக்கும் குடிநீர் சென்னை மக்கள் குடிநீர் தேவையில் பெரும் பகுதியைப் பூர்த்தி செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

1993-ம் ஆண்டு தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். அதனால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நீராதாரங் கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் இல்லை. கிருஷ்ணா நதிநீரும் வரவில்லை.

அதனால் ஈரோடு, நெய்வேலி யில் இருந்து ரயிலில் காவிரி நீர் எடுத்து வரப்பட்டது. தினமும் 2 ரேக்குகளில் (சுமார் 80 டேங்கர் கள்) தண்ணீர் வந்தது. அதுபோல விஜயவாடாவில் இருந்து தனி ரயிலில் கிருஷ்ணா நதிநீர் கொண்டு வரப்பட்டது. பழைய மாமல்ல புரம் சாலையில் உள்ள ஒக்கியம் துரைப்பாக்கம் ஏரி நீர் சுத்திகரிக் கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. ஓச்சூர் என்ற இடத்தில் பாலாறு நிலத்தடி நீர் லாரிகளில் எடுத்து வரப்பட்டது.

தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் என்பதால் முதன்முறையாக சென்னையில் குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டது. அதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக சென்னை முழுவதும் லாரிகள் மூலம் வீடு, வீடாக 2 குடங்கள் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. இந்நிலை மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதம் வரை நீடித்தது.

பின்னர் பருவமழை பெய்து ஏரிகளுக்கு நீர் வந்த பிறகே, குடிநீர் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. 1993-ம் ஆண்டுபோல இந்த ஆண்டும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கடல்நீரில் இருந்து கிடைக்கும் குடிநீர் நிலைமை ஓரளவுக்கு சமாளிக்க உதவுகிறது.

இது தொடர்பாக பொதுப்பணித் துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:

தற்போதைய நிலையை கருத் தில் கொண்டால், எதிர்காலத்தில் கடல்நீரில் இருந்து கிடைக்கும் குடிநீரைத்தான் சென்னை மக்கள் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.

அண்டை மாநிலங்களிலும் வறட்சி நிலவுவதால் காவிரி நீர், கிருஷ்ணா நீர் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களின் போட்டியால் சென்னைக்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நீர் அளவு முழுமையாக கிடைக்கும் என்று சொல்ல முடியாது. நெய்வேலி மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் இருந்து தொடர்ந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் எடுப்பதை விவசாயிகள் அனுமதிக்க மாட்டார்கள். பாலாறும் வறண்டு போய்விட்டது.

இப்படி பல வழிகளிலும் பிரச் சினை இருப்பதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளைத் தூர்வாரி ஆழப்படுத்துவதுடன், புதிதாக கட்டப்படும் தேர்வாய் கண்டிகை ஏரியையும் விரைவில் கட்டி முடிக்க வேண்டும். கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத் துக்கு ஏராளமாக செலவிட வேண்டி யிருப்பதால் பாலாறு, காவிரி ஆறு களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது உபரிநீரைச் சேமித்து வைக்க தடுப்பணைகள் கட்டுவதற்கு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

சென்னை மக்களின் தினசரி குடிநீர் தேவை 85 கோடி லிட்டர். தற்போது 55 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இதில், கடல்நீரில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு மட்டும் 20 கோடி லிட்டர் ஆகும். இதுதவிர நெய்வேலியில் இருந்து 2 கோடி லிட்டரும், விவசாயக் கிணறுகளில் இருந்து 4 முதல் 6 கோடி லிட்டரும் பெறப்படுகிறது. மீதமுள்ள குடிநீர் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து பெறப்படுகிறது.

ஆந்திராவிலிருந்து பூண்டி வந்து சேரும் கிருஷ்ணா நீர் அங் கிருந்து புழல் ஏரிக்கு அனுப்பப் பட்டு சென்னைக்கு விநியோகிக் கப்படுகிறது. தற்போது பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 410 கன அடியும், புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 75 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 74 கன அடியும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

“சென்னையின் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு தினசரி 10 கோடி லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட மற்றொரு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஓராண் டுக்குள் தொடங்கப்படும். மேலும், தினசரி 40 கோடி லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் மெகா திட்டம் இரு ஆண்டுகளில் தொடங்கப்படும். இந்த இரு திட்டங்களும் செயல் படுத்தப்படும்போது சென்னை மக்களின் குடிநீர் தேவையில் பெரும் பகுதி கடல்நீரில் இருந்து கிடைக்கும் குடிநீர் மூலம் பூர்த்தி செய்யப்படும்” என்று சென்னைக் குடிநீர் வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

வீணாக கடலில் கசியும் நீர்

எதிர்காலத்தில் தமிழகத்தில் 1993-ம் ஆண்டுபோல கடும் வறட்சி ஏற்பட்டால் நிலைமையை சமாளிக்க என்ன செய்ய வேண்டும் என்று உலக வங்கி உதவியை தமிழக அரசு நாடியது. அதையடுத்து ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழகம் வந்த வெளிநாட்டு நிபுணர்கள் பாலாறு கடலில் கலக்கும் இடமான சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பாலாறு நிலத்தடி நீர் கசிந்து வீணாக கடலுக்கு போய்க் கொண்டிருப்பதை கண்டறிந்தனர். எனவே, சதுரங்கப்பட்டினத்தில் பாலாறு படுகைக்கு கீழே 50 அடி ஆழம் தோண்டி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நீரைச் சேமித்து வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிக்கை அளித்தனர். இது நடந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தடுப்பணை கட்டுவதற்கான முயற்சி நடைபெற்றதாக தெரியவில்லை.

 

போர்க்கால அடிப்படையில் வறட்சி நிவாரணப் பணிகள்: குடிநீர் பற்றாக்குறையை அரசு திறமையாக கையாள்கிறது- உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

Print PDF

 தி இந்து        23.03.2017

போர்க்கால அடிப்படையில் வறட்சி நிவாரணப் பணிகள்: குடிநீர் பற்றாக்குறையை அரசு திறமையாக கையாள்கிறது- உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்


அமைச்சர் வேலுமணி | கோப்புப் படம்.
அமைச்சர் வேலுமணி | கோப்புப் படம்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமை யான குடிநீர் பற்றாக்குறையைப் போக்க போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கைகளை எடுத்து அரசு திறமையாக கையாண்டு வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் ரூ.100 கோடி யில் வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வும் அவர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் கு.பிச்சாண்டி (கீழ்பெண்ணாத்தூர்) கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:

தமிழகத்தில் பருவமழை 62 சதவீதம் குறைவாக பெய்ததால் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முதல்வர் தலைமையிலும், எனது தலைமையிலும் பல்வேறு ஆய் வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நகரங்கள், ஊரகப் பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.976 கோடியே 76 லட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், பழைய ஆழ்துளை கிணறுகளை புனரமைத்தல், சிறு மின்விசை, கைப்பம்புகள் அமைத்தல், லாரிகள் மூலம் குடிநீர் வழங்குதல், பிளாஸ்டிக் தொட்டிகள் நிறுவுதல், பழுதடைந்த மோட்டார்களை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீர் இருப்பு மோசம்

சென்னை மாநகராட்சிப் பகுதி களில் நாள்தோறும் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. பருவமழை பொய்த்தது, கிருஷ்ணா நதிநீர் வரத்து குறைவு ஆகியவற்றால் நீராதாரங்களில் இருப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

ஏரிகள், கிருஷ்ணா நதிநீர், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள், வீரா ணம் திட்டம், புதிதாக இணைக் கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீராதாரங்கள், பூண்டி, தாமரைப் பாக்கம் கிணற்றுத்தளங்கள் மூல மாக நாளொன்றுக்கு சராசரியாக 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வரும் மே மாதத்தில் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர் வற்றிப் போகும் சூழ்நிலையை எதிர் பார்த்து ரூ.100 கோடியில் வறட்சி நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை தவிர மற்ற பகுதி களில் 553 குடிநீர்த் திட்டங்கள் மூலம் 4 கோடியே 21 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் நாள்தோறும் 1,565 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.98 கோடியே 57 லட்சத்தில் புதிய ஆழ் துளை கிணறுகள், புதிய நீர்உறிஞ்சு கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட 1,898 நீராதார புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. 10 மாநகராட்சிகள், 68 நகராட்சிகளில் 189 நகராட்சி லாரிகள், 167 தனியார் வாடகை லாரி கள் மூலம் தினமும் 15 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மாநகராட்சிகள், நகராட்சிகளில் ரூ.65 கோடியே 35 லட்சத்தில் 1,337 புதிய ஆழ்துளை கிணறுகள் உள்ளிட்ட வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.46.41 கோடி, ஊரகப் பகுதி களில் ரூ.703.43 கோடியில் குடிநீர் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குடிநீர் திட்டப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து 14-வது நிதிக்குழு செயலாக்க மானியம் ரூ.818.25 கோடி, ஊராட்சிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் ரூ.114.58 கோடி, மார்ச்சில் ரூ.131.26 கோடி நிதிக் குழு மானியமாக விடுவிக்கப் பட்டுள்ளது. இத்தொகையை குடிநீர் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.15 கோடி, தாய்த் திட்டம் 2-ன் கீழ் ரூ.300 கோடியில் குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய பொது நிதி, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிகளை முன்னுரிமை அடிப்படையில் குடிநீ்ர் பணிகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை தமிழக அரசு திறமையாக கையாண்டு வருகிறது. குடிமராமத்து திட்டத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று (மார்ச் 22) உலக தண்ணீர் நாள். இந்நாளில் தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்த வேண்டியது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எம்எல்ஏக்கள் ஏற்படுத்த வேண் டும்.

இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Last Updated on Friday, 24 March 2017 15:48
 


Page 3 of 390