தினகரன் 06.01.2014
நகராட்சி பகுதியில் ஒரு கோடி மதிப்பில் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணி
கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி நகராட்சியில் sஒரு கோடி மதிப்பில் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் தொடங்கியது.
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் வீடுகள் மற்றும் கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வெளியேற கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கால்வாய்கள் அமைக்கப்பட்டு நீண்ட காலம் ஆனதாலும், மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாயில் தேங்கியதாலும் கழிவுநீர் மற்றும் மழைநீர் எளிதில் வெளியேற முடியாமல் அடைப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நகரின் முக்கிய பகுதிகளான ரவுண்டானா, காந்திரோடு, பெங்களூர் ரோடு, சேலம் ரோடு, சென்னை சாலை போன்ற பகுதிகளில் மழை காலம் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் கழிவுநீர் வெளியேற முடியாமல் அடைப்பு ஏற்பட்டு வந்தது. இது குறித்து பொதுமக்களும், வணிகர்களும் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து புனரமைக்க ஒரு கோடி ஒருங்கிணைந்த நிதி, வருவாய் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு காந்தி ரோடு உள்பட முக்கிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது ரவுண்டானா 5 ரோடு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை நகர்மன்ற தலைவர் தங்கமுத்து நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாக செய்து முடிக்கவும், கால்வாய் பகுதியில் செல்லும் டெலிபோன் உள்பட தொலைதொடர்பு கேபிள்களுக்கு எவ்வித பாதிப்பு இல்லாமல் செய்யும்படியும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நகர்மன்ற உறுப்பினர் பழனி மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.