தினமலர் 29.01.2014
புதிய குடிநீர் திட்டம் விரைவில் அமலாக்கம்
ஈரோடு: ஊராட்சிகோட்டை கூட்டு குடிநீர் திட்டத்துக்கான அனுமதி விரைவில் கிடைக்கும், என துணை மேயர் பழனிசாமி தெரிவித்தார். ஈரோடு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், 60 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது குடிநீர் தேவைக்கு, காவிரியில் இருந்து தினமும், 90 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த நீரை சுத்திகரிப்பு செய்து, பொது மக்களுக்கு, மாநகராட்சி வழங்கி வருகிறது. காவிரியில் சாயக்கழிவு, தோல் தொழிற்சாலை மற்றும் சாக்கடை கழிவுகள் பெரும் அளவில் கலப்பதால், குடிநீர் கடுமையாக மாசுபட்டுள்ளது. இவற்றை தடுக்க மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு மாற்று ஏற்பாடு செய்யும் நோக்கத்தில், ஊராட்சிகோட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து வர, 425 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு, மத்திய அரசின் அனுமதிக்கு சென்றுள்ளது. இதுகுறித்து துணை மேயர் பழனிசாமி கூறியதாவது: ஊராட்சிகோட்டை கூட்டு குடிநீர் திட்டத்துக்கு மத்திய அரசு, 50 சதவீதம், மாநில அரசு அரசு, 40 சதவீதம், மாநகராட்சி, 10 சதவீதம் பங்களிப்போடு, பணிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு மிக விரைவில் அனுமதி கிடைக்கும், என எதிர்பார்த்திருக்கிறோம். அனுமதி கிடைத்ததும், பணிகள் துவங்கும், என்றார்.