Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Transportation

தேனி புதிய பஸ் நிலையத்துக்கு வழித்தடங்கள் அறிவிப்பு

Print PDF

தினமணி              30.12.2013

தேனி புதிய பஸ் நிலையத்துக்கு வழித்தடங்கள் அறிவிப்பு

தேனியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக திறக்கப்பட உள்ள கர்னல். பென்னிகுயிக் நினைவு பஸ் நிலையத்தில் இருந்து நகர் பகுதி வழியாக பஸ்கள் இயக்கப்பட உள்ள புதிய வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கூறியது:

தேனியில் இருந்து மதுரை, ராமநாதபுரம், ராஜபாளையம், நெல்லை, திண்டுக்கல், பழனி, திருச்சி, திருப்பூர், கோவை ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் புறநகர் மற்றும் விரைவு பஸ்கள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த பஸ்கள் அன்னஞ்சி விலக்கு மற்றும் மதுரை சாலையில் இருந்து, தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை வழியாக திரும்பவும் புதிய பஸ் நிலையத்தை வந்தடையும்.

மதுரை பகுதியில் இருந்து தேனி வழியாக போடி, கம்பம், குமுளி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள், மதுரை சாலையில் இருந்து தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை வழியாக தேனி புதிய பஸ் நிலையத்துக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து மதுரை சாலை, பங்களாமேடு, தேனி பஸ் நிலையம் வழியாக அந்தந்த ஊர்களுக்குச் செல்லும்.

திண்டுக்கல் பகுதியில் இருந்து தேனி வழியாக போடி, கம்பம், குமுளி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள், அன்னஞ்சி விலக்கில் இருந்து தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை வழியாக தேனி புதிய பஸ் நிலையத்துக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து மதுரை சாலை, பங்களாமேடு, தேனி பஸ் நிலையம் வழியாக அந்தந்த ஊர்களுக்குச் செல்லும். போடி, கம்பம், குமுளி பகுதிகளில் இருந்து தேனி வழியாக மதுரை, திண்டுக்கல் பகுதிகளுக்குச் செல்லும் புறநகர் பஸ்கள், தேனி நகர் பகுதியில் இதே வழித் தடத்தில் இயக்கப்படும்.

மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில், பெரியகுளத்தில் இருந்து தேனி மற்றும் தேனி வழியாக பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம், தேனி பழைய பஸ் நிலையம், பங்களாமேடு, தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை வழியாக புதிய பஸ் நிலையத்துக்குச் செல்லும். குமுளி, கம்பம், போடி ஆகிய பகுதிகளில் இருந்து தேனி மற்றும் தேனி வழியாக இயக்கப்படும் பஸ்கள் பழனிசெட்டிபட்டி, தேனி பழைய பஸ் நிலையம், பங்களாமேடு, தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை வழியாக புதிய பஸ் நிலையத்துக்குச் செல்லும். ஆண்டிபட்டி, வருஷநாடு ஆகிய பகுதிகளில் இருந்து தேனிக்கு இயக்கப்படும் பஸ்கள், மதுரை சாலை, பங்களாமேடு, பழைய பஸ் நிலையம் சென்று விட்டு, அங்கிருந்து மீண்டும் பங்களாமேடு வழியாக தேனி- பெரியகுளம் புறவழிச் சாலையில் புதிய பஸ் நிலையத்துக்குச் செல்லும். தேனி புதிய பஸ் நிலையத்தில் இருந்து இதே பகுதிகளுக்குச் செல்லும் பஸ்கள் நகர் பகுதியில் இதே வழித் தடத்தில் இயக்கப்படும்.

 நகர ப் பேருந்துகள்: தேனி நகர் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்குச் செல்வதற்கு அன்னஞ்சி விலக்கு பகுதியில் இருந்து பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம், பங்களாமேடு, மதுரை சாலை, தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை, புதிய பஸ் நிலையம், மீண்டும் அன்னஞ்சி விலக்கு வழித் தடத்தில் 4 நகர பேருந்துகளும், பழனிசெட்டிபட்டியில் இருந்து கம்பம் சாலை, பழைய பஸ் நிலையம், பங்களாமேடு, மதுரை சாலை, தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை, புதிய பஸ் நிலையம் ஆகிய வழித் தடங்களில் 3 நகர பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

போக்குவரத்து சிக்னல்: புதிய பஸ் நிலைய சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை முறைப்படுத்த மதுரை சாலை, தேனி- பெரியகுளம் புறவழிச் சாலை மும்முனை சந்திப்பில் போக்குவரத்து சிக்கனல் மற்றும் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை ஆகியவை செயல்பட உள்ளன. இதே போல, புதிய பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் உள்ள மும்முனை சந்திப்பு, அன்னஞ்சி விலக்கு மும்முனை சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்து சிக்கனல் மற்றும் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறை ஆகியவை செயல்பட உள்ளன.

புதிய பஸ் நிலையத்துக்கு பஸ்கள் இயக்கப்படுவதில் நடைமுறையில் ஏற்படும் இடர்பாடுகளை ஆய்வு செய்து தேவைக்கேற்ப ஒருவழிப்பாதை மற்றும் புதிய போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்றனர்.

 

தடையற்ற பேருந்து போக்குவரத்து சென்னையில் முன் உதாரணமாக அசத்துகிறது ஆமதாபாத் மாநகராட்சி

Print PDF

தினமலர்             28.11.2013

தடையற்ற பேருந்து போக்குவரத்து சென்னையில் முன் உதாரணமாக அசத்துகிறது ஆமதாபாத் மாநகராட்சி

பி.ஆர்.டி.எஸ்., எனப்படும், தடையற்ற பேருந்து போக்குவரத்து, சேவையை செயல்படுத்தி, குஜராத்தின் ஆமதாபாத் மாநகராட்சி, மக்களை அசத்தி வருகிறது.சாலைகளில், மற்ற வாகனங்களுடன், பேருந்துகளும் செல்வதால், நெரிசல் மிகுந்த நேரங்களில், சேர வேண்டிய இடங்களுக்கு, பயணிகள் விரைந்து செல்ல முடிவதில்லை.இந்த சிக்கலுக்கு தீர்வாக, கொலம்பியா நாட்டின், போகோடா நகரில், 2000ம் ஆண்டில், பி.ஆர்.டி.எஸ்., எனப்படும், 'பேருந்துகளுக்கான தனிப்பாதை ஒதுக்கும் திட்டம்' துவக்கப்பட்டது.

தற்போது, பல்வேறு நாடுகளில், 166 நகரங்களில், 4,336 கி.மீ., தொலைவுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தினசரி, 2.7 கோடி பேர் இந்த திட்டத்தால், பயன் அடைந்து வருகின்றனர்.இந்தியாவில்...இந்தியாவில், ஆமதாபாத், டில்லி, ராஜ்கோட், ஜெய்ப்பூர், புனே ஆகிய நகரங்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்ட நிதி மூலம், சர்வதேச தன்னார்வ அமைப்பான, 'போக்குவரத்து மேம்பாட்டுக்கான கொள்கை ஆய்வு நிறுவனம்' (ஐ.டி. டி.பி.,) ஆலோசனையின் அடிப்படையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக, ஆமதாபாத் மாநகராட்சி அதிகாரிகள், தெரிவித்து உள்ளனர்.

ஆமதாபாத்தில்...

இந்த திட்டத்துக்காக, ஆமதாபாத் மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட, ஏ.ஜே.எல்., நிறுவன, துணை பொதுமேலாளர் அகில் பஹம்பட் கூறியதாவது:

தற்போதைய நிலவரப்படி, ஆமதாபாத்தில், ஏழு வழித்தடங்களில், 75 கி.மீ., துாரத்துக்கு, பி.ஆர்.டி.எஸ்., திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதில், தினமும், 1.30 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இந்த சேவையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அளிப்பது, கண்காணிப்பது, செயல்படுத்துவது போன்ற பணிகள் மட்டும், ஏ.ஜே.எல்., மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பேருந்துகளை, இயக்கும் பொறுப்பு, தனியார் நிறுவனத்திடம், அளிக்கப்பட்டு உள்ளது.

அந்த நிறுவனம், முறையான சேவையை, வழங்குவதை, உறுதிப்படுத்த பல்வேறு கண்காணிப்பு முறைகள், கடைபிடிக்கப்படுகின்றன. கி.மீ., அடிப்படையில், அந்த நிறுவனத்துக்கு, தொகை வழங்கப்படும்.

கட்டணம்

அனைத்து நிறுத்தங்கள், பேருந்துகள், ஜி.பி.எஸ்., கருவி மூலம், கட்டுப்பாட்டு அறையுடன், இணைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன. மேலும், இந்த நிறுத்தங்கள், மாற்றுத்திறனாளிகளும், எளிதில் பயன்படுத்தும் வகையில், வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பயன்படுத்துவோர், மற்ற பேருந்துகள், போன்று, படி ஏறாமல், தரை மட்டத்திலேயே, பேருந்தில் ஏற, உரிய வசதி செய்யப்பட்டு உள்ளது.நான்கு ரூபாயில் இருந்து, 30 ரூபாய் வரை பல்வேறு விதங்களில், கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.குறைந்த வருவாய் பிரிவினர், மாணவர்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், 'தரமான, தடையற்ற போக்குவரத்தை, உறுதி செய்தாலும், பேருந்து பயணத்துக்கான செலவு முன்பைவிட, 50 சதவீதம் வரை அதிகரித்து உள்ளது' என்றனர். 

 

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆட்டோ–கார் முன்பதிவு மையம் மேயர் ராஜன்செல்லப்பா திறந்து வைத்தார்

Print PDF

தினத்தந்தி           21.11.2013

மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் ஆட்டோ–கார் முன்பதிவு மையம் மேயர் ராஜன்செல்லப்பா திறந்து வைத்தார்

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் போக்குவரத்தை சீரமைக்கும் பொருட்டு ஆட்டோ மற்றும் வாடகை கார்களுக்கான முன்பதிவு மையத்தை நேற்று மேயர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்.

வாகன நெரிசல்

மதுரை மாட்டுதாவனி பஸ் நிலையத்தில் ஆட்டோ மற்றும் கார்களை ஒழுங்குபடுத்தி பஸ் நிலையத்தில் போக்குவரத்தை சீராக்குவதற்காக மதுரை மாநகராட்சி சார்பில் ஆட்டோ–கார்களின் முன்பதிவு மையம் அமைக்கப்பட்டது.

அதை மேயர் ராஜன்செல்லப்பா நேற்று திறந்து வைத்து பேசினார்.

முன்பதிவு மையம்

அப்போது ராஜன்செல்லப்பா கூறியதாவது:–

மாட்டுதாவனியில் பொதுமக்களுக்கு பயன் பெறும் வகையில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் ஆட்டோ–கார் முன்பதிவு மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது முதற்கட்டமாக 90 ஆட்டோக்களும் 25 கார்களும் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து இருக்கின்றனர்.

அரசு கட்டணத்தை முறைபடுத்ததால் அவர்களே குறிப்பிட்ட கட்டணங்களை வசூலிக்கின்றனர். பொதுமக்கள் இந்த ஆட்டோ–கார் முன்பதிவில் பயணிக்கும்போது அந்த குறிப்பிட்ட கார் அல்லது ஆட்டோ நம்பர், டிரைவரின் பெயர் போன்ற முழுத்தகவல்களும் அச்சிட்டுத்தரப்படுகிறது.

இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கமிஷனர் கிரண்குராலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Page 3 of 57