Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - E-Governance

அனுமதியற்ற இணைப்புக்கு அபராதம் குடிநீர் திருட்டுக்கு கடிவாளம்! கணக்கெடுக்க மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர்              01.08.2013

அனுமதியற்ற இணைப்புக்கு அபராதம் குடிநீர் திருட்டுக்கு கடிவாளம்! கணக்கெடுக்க மாநகராட்சி முடிவு

கோவை:கோவை மாநகராட்சி விரிவாக்கப்பகுதியில் அனுமதியில்லாமல் முறைகேடாக உள்ள குடிநீர் இணைப்புகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகளுக்கு, ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியின் 72 வார்டுகளுக்காக சிறுவாணி, பில்லூர் 1, 2 மற்றும் ஆழியாறு திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டம் மூலம், மாநகராட்சி பகுதிகளுக்கு தினமும் குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவை மாநகராட்சியுடன் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் நகராட்சிகளும், காளப்பட்டி, சரவணம்பட்டி, துடியலூர், சின்னவேடம்பட்டி, வெள்ளக்கிணறு, வடவள்ளி, வீரகேரளம் பேரூராட்சிகளும், விளாங்குறிச்சி ஊராட்சியும் இணைக்கப்பட்டன.

பழைய மாநகராட்சி பகுதிகள் 60 வார்டுகளாவும், புதிதாக இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகள் 40 வார்டுகளாகவும் மாற்றியமைக்கப்பட்டன. மாநகராட்சி விரிவாக்கப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமுள்ளது. மேலும், குடிநீர் பகிர்மான குழாய்களும், மேல்நிலைத்தொட்டிகளும் போதுமான அளவுக்கு இல்லாததால் மக்களுக்கு திரும்பிகரமாக குடிநீர் வழங்க முடிவதில்லை.

இதனால், விரிவாக்கப்பகுதிகளில் மாதம் இருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மாநகராட்சி விரிவாக்கப்பகுதியில், முந்தைய உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகத்தில் இருந்தபோது, குடிநீர் இணைப்புகள் அனுமதியின்றியும், முறைகேடாகவும் கொடுக்கப்பட்டுள்ளது, ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், முந்தைய உள்ளாட்சி அமைப்பு நிர்வாகத்தில், குடிநீர் இணைப்புக்கான பதிவுகள் "மேனுவலாக' பதிவு செய்யப்பட்டுள்ளன. முறையற்ற, அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்திக் கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மாநகராட்சி கமிஷனர் லதா கூறியதாவது:

கிழக்கு மண்டலத்தில் 58,601; மேற்கு மண்டலத்தில் 52,821; தெற்கு மண்டலத்தில் 49,943; வடக்கு மண்டலத்தில் 54,452; மத்திய மண்டலத்தில் 36,504 என, மொத்தம் 2,52,321 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில், விரிவாக்கப்பகுதிகளில் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. பெரும்பாலான குடிநீர் இணைப்புகள் அனுமதி பெறாமல், முறைகேடாக பெறப்பட்டுள்ளன.

முறையற்ற குடிநீர் இணைப்புகளை கணக்கெடுக்க ஐந்து உதவி பொறியாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆய்வுப்பணிகள் முடிந்ததும், முறையற்ற குடிநீர் இணைப்புகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும். குடிநீர் இணைப்பை துண்டித்தால் பாதிப்படைவர் என்பதால், வரன்முறைப்படுத்திக்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்
படுகிறது.

குடிநீர் இணைப்பு டெபாசிட் கட்டணத்துடன், அதே அளவுக்கான தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கையால், அனைத்து குடிநீர் இணைப்புகளையும் கண்காணிக்க முடியும். மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். இவ்வாறு, கமிஷனர் லதா தெரி வித்தார்.

நவீன தொழில்நுட்பம்!


குடிநீர் சப்ளையில் அதிகாரிகள் துணையுடன் குளறுபடி நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதனால், "மாநகராட்சியின் குடிநீர் மேல்நிலைத்தொட்டிக்கு தினமும் எத்தனை லிட்டர் குடிநீர் வருகிறது; ஒவ்வொரு வால்வு மூலமும் எவ்வளவு லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது' என்பதை கண்காணிக்க, "ஜி.பி.ஆர்.எஸ்' தகவல் தொழில்நுட்பம் பொருத்தி, முறைகேடாக குடிநீர் வழங்குவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

 

குடிநீர் திருட்டைத் தடுக்க நீரேற்று நிலையங்களில் தானியங்கி முறை

Print PDF

தினமணி                31.07.2013 

குடிநீர் திருட்டைத் தடுக்க நீரேற்று நிலையங்களில் தானியங்கி முறை

கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள கம்ப்யூட்டர் பில்லிங் முறை. (வலது) தானியங்கி முறையில் நீர் நிரப்பப்படும் லாரி. (உள்படங்கள்) எலெக்ட்ரோ மேக்னடிக் ஃப்ளோ மீட்டர் மற்றும் காற்று அழுத்த வால்வு .
கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள கம்ப்யூட்டர் பில்லிங் முறை. (வலது) தானியங்கி முறையில் நீர் நிரப்பப்படும் லாரி. (உள்படங்கள்) எலெக்ட்ரோ மேக்னடிக் ஃப்ளோ மீட்டர் மற்றும் காற்று அழுத்த வால்வு .

லாரி குடிநீர் திருட்டைத் தடுக்க, சென்னை குடிநீர் வாரிய நீரேற்று நிலையங்கள் கணினிமயமாக்கப்பட்டு தானியங்கி முறையில் செயல்பட உள்ளன.

முதல் கட்டமாக கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்தில் தானியங்கி முறை அமல்படுத்தப்பட்டு, சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முறை, அனைத்து நீரேற்று நிலையங்களிலும் அமல்படுத்தப்படும் பட்சத்தில் குடிநீர் சேதாரம் மற்றும் திருட்டு பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என குடிநீர் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3.3 கோடி லிட்டர் விநியோகம்: சென்னை குடிநீர் வாரியத்தின் கீழ் 30 நீரேற்று நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த நீரேற்று நிலையங்களில் 398 லாரி மூலமாக நாளொன்றுக்கு 3.3 கோடி லிட்டர் குடிநீர் நிரப்பப்படுகிறது. நாள்தோறும் சுமார் 3,800 நடைகளில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நகரில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையைப் பயன்படுத்தி, சில லாரி டிரைவர்கள் குடிநீரை அதிக விலைக்கு விற்பதாக புகார்கள் எழுந்தன.

இது தவிர, நீரேற்று நிலையங்களில் லாரிகளில் நீர் நிரப்பும் போது அதிக அளவில் குடிநீர் சேதாரம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. இவற்றைக் கருத்தில் கொண்டு அரசின் ஒப்புதலுடன் குடிநீர் வாரியம், தானியங்கி நீரேற்று நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

கீழ்ப்பாக்கத்தில் தானியங்கி நீரேற்று நிலையம்: இந்த திட்டத்தின் முதல் முயற்சியாக கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்தில் தானியங்கி முறை அமல்படுத்தப்பட்டு முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குடிநீர் வாரிய உயர் அதிகாரி கூறியதாவது:-

சென்னையின் பழமையான நீரேற்று நிலையங்களில் ஒன்றான கீழ்ப்பாக்கத்தில் நாளொன்றுக்கு 42 லாரிகளில் 250 முறை குடிநீர் நிரப்பப்படுகிறது. மொத்தம் 7 நீர் நிரப்பும் குழாய்கள் இங்கு உள்ளன.

ஒவ்வொரு நீர் நிரப்பும் குழாயிலும் எலெக்ட்ரோ மேக்னடிக் ஃப்ளோ மீட்டர் கருவி மற்றும் காற்று அழுத்தத்தில் செயல்படும் வால்வு பொருத்தப்பட்டுள்ளன. எலெக்ட்ரோ மேக்னடிக் ஃப்ளோ மீட்டர் கருவி மூலம் குழாய் வழியே எத்தனை லிட்டர் தண்ணீர் செல்கிறது என்பதைக் கண்காணிக்க முடியும்.

குறிப்பிட்ட அளவு தண்ணீர் லாரிகளில் நிரப்பப்பட்ட பிறகு காற்று அழுத்த வால்வுக் கருவியின் மூலம் தானாகவே நீர்வரத்து நின்று விடும். பெட்ரோல் பங்க்-குகளில் உள்ள முறையைப் போல செயல்படும் இந்த திட்டத்தின் மூலம் மிகச் சரியான அளவு தண்ணீர் லாரிகளில் நிரப்பப்படும்.

லாரிகளில் எவ்வளவு நீர் நிரப்பப்பட்டுள்ளது, எங்கு விநியோகிக்கப்பட உள்ளது உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் கணிணியில் பதிவு செய்யப்படும். அந்தத் தகவல்கள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால் குடிநீர் வாரிய அதிகாரிகள் அவற்றை எந்த இடத்தில் இருந்தும் கண்காணிக்க முடியும்.

4 நிமிடத்தில் நீர் நிரப்பப்படும்: தானியங்கி நீரேற்று நிலையத்தில் 9 ஆயிரம் கொள்ளளவுக் கொண்ட லாரியில் நீர் நிரப்ப 4 நிமிஷங்கள் மட்டுமே ஆகும். இதன் மூலம் விரைவாக குடிநீர் விநியோகம் செய்ய முடியும்.

இந்தத் திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் அனைத்து நீரேற்று நிலையங்களிலும் தானியங்கி முறை செயல்படுத்தப்படும்.

விரைவில் ஜி.பி.எஸ். திட்டம்: குடிநீர் திருட்டைத் தடுக்க, லாரிகள் செல்லும் வழித்தடங்களைக் கண்காணிக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டன. இன்னும் ஒரு வாரத்தில் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது என்றார் அவர்.

 

சென்னையில் 200 அம்மா உணவகங்களில் கண்காண்ப்பு கேமிரா

Print PDF

தினபூமி                24.07.2013

சென்னையில் 200 அம்மா உணவகங்களில் கண்காண்ப்பு கேமிரா

http://www.thinaboomi.com/sites/default/files/imagecache/story_thumbnail/Amma-Mess(C).jpg

சென்னை, ஜூலை 24 - சென்னையில் மாநகராட்சி உருவாக்கிய 200 அம்மா உணவங்கள் கண்காணிப்பு பகேமிரா பொருத்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் 200 இடங்களில் அம்மா உணவகங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஏழை, எளியவர்கள், கூலி வேலை செய்பவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவர்கள் குறைந்த செலவில் வயிறாற சாப்பிட வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அனைத்து மாநகராட்சி பகுதிகளுக்கும் அம்மா உணவகம் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

ஒரு ரூபாய்க்கு இட்லி, மதியம் சாம்பார் சாதம், தயிர்சாதம், கருவேப்பிலை சாதம் போன்றவை வழங்கப்படுகிறது. காலை மற்றும் மதியம் இரண்டு வேளைக்காக செலவிடப்படும் சாப்பாட்டு செலவு இதனால் குறைவதால் அம்மா உணவகங்களில் கூட்டம் அலை மோதுகிறது.

இதைத் தொடர்ந்து சென்னையில் 7 அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகத்தை திறக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதலில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் திறப்பதற்காக அனைத்து ஏற்பாடும் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கான கட்டிடம் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. அரசு பொது ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், உறவினர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் அங்கு மற்ற இடங்களை விட சமையல் அறை, சாப்பிடும் இடம் போன்றவை மிகப் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. புதிய உணவகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. அங்கு தினமும் 10 ஆயிரம் இட்லி 5 ஆயிரம் சாதம் வகைகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைகள், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு ஆஸ்பத்திரி, வண்ணாரப்பேட்டை ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைகளிலும் அம்மா உணவகம் திறக்க இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளன.

தற்போது நடந்து வரும் 200 அம்மா உணவகங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க கேமரா பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உணவு தயாரித்தல், பரிமாறுதல், ஊழியர்கள், பொது மக்களிடம் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை மாநகராட்சியில் இருந்தவாறு கண்காணிக்க இருக்கிறார்கள்.

இதற்காக 200 நவீன கேமிராக்கள் வாங்க மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அம்மா உணவகங்களிலும் கேமராக்கள் பொறுத்தும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 


Page 9 of 41