Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகள் சாதனை

Print PDF
தினகரன்                 10.05.2013

மாநகராட்சி பள்ளிகளில் மாணவிகள் சாதனை

மதுரை, :  மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ்2 தேர்வில் முதல் மூன்று இடங்களையும் மாணவிகள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியின் பொறுப்பில் 14 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் சார்பில் இந்த ஆண்டு 2 ஆயிரத்து 537 பேர் பிளஸ்2 தேர்வு எழுதினர். 2 ஆயிரத்து 363 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 1,837 பேர் மாணவிகள். 526 பேர் மாணவர்கள். மதிப்பெண்களில் முதல் மூன்று இடங்களை மாணவிகள் பிடித்து சாதனை படைத்தனர். அவர்கள் விபரம்:

முதலிடம்: மீனலோசினி, மதிப்பெண்& 1,158 அவ்வை மேல்நிலைப்பள்ளி. பொன்னகரம் 1&வது தெருவை சேர்ந்தவர். இவரது தந்தை துரைப்பாண்டி கூலி தொழிலாளி. மீனலோசினி டாக்டராக ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

2&வது இடம்: ஜோதி, மதிப்பெண்& 1,147, வெள்ளி வீதியார் பள்ளி. ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டை சேர்ந்தவர். தந்தை ராமராஜ், டிரைவர். மாணவி ஜோதி இன்ஜினியராக ஆசை என்றார்.

3&வது இடம்: ஜெயலட்சுமி, மதிப்பெண்& 1,122 வெள்ளி வீதியார் பள்ளி. புட்டுத் தோப்பை சேர்ந்தவர். இவரது தந்தை சூரியநாராயணன், மருத்துவ பிரதிநிதி. ஜெயலட்சுமி பிகாம் படிக்க விரும்புவதாக தெரிவித்தார்.

இந்த 3 மாணவிகளுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் வீதமும், பாடவாரியாக 200க்கு 200 மதிப்பெண் பெற்ற ஐஸ்வரியா, நந்தினி (இருவரும் வெள்ளி வீதியார் பள்ளி), பாண்டியராஜன் (திரு.வி.க. பள்ளி) ஆகியோருக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதமும் மேயர் ராஜன்செல்லப்பா பரிசு வழங்கினார்.

ஆணையர் நந்தகோபால், துணை ஆணையர் சாம்பவி, உதவி ஆணையர் தேவதாஸ், கல்வி அதிகாரி மதியழகர்ராஜ், கவுன்சிலர் சீனிவாசன் பங்கேற்றனர்.

முதல் முறையாக 100 சதவீதம் தேர்ச்சி

பிளஸ்2 தேர்வில் மதுரை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 93.14 சதவீதமாகும். 2012ல் தேர்ச்சி 92.12 சதவீதமாக இருந்தது. ஒரு சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது. மதுரை மாநகராட்சி பள்ளிகளின் வரலாற்றில் முதன் முறையாக கரிமேட்டிலுள்ள சேதுபதி பாண்டித்துரை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர் ஆலிவ், 99.19 சதவீதம் தேர்ச்சி பெற்ற திரு.வி.க. பள்ளி தலைமை ஆசிரியர் ஆதிலட்சுமி, 98.44 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாசாத்தியார் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணம்மாள் ஆகியோருக்கு மேயர் ராஜன் செல்லப்பா பாராட்டு தெரிவித்தார்.
 

பிளஸ்-2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 85.53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி மாணவிகளுக்கு மேயர் பாராட்டு

Print PDF
தினத்தந்தி   10.05.2013            

பிளஸ்-2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 85.53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி மாணவிகளுக்கு மேயர் பாராட்டு


நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவுகளில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 85.53 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளை மேயர் சைதை துரைசாமி பாராட்டினார்.

மாணவிகளுக்கு வாழ்த்து

பிளஸ்-2 தேர்வில், சென்னை மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதல் இடம் பெற்ற மாணவி வி.வீரச்செல்வி, 2-ம் இடம் பெற்ற மாணவிகள் பி.நித்யா மற்றும் சி.பிரியா, 3-ம் இடம் பெற்ற ஆயிஷா சித்திக் மற்றும் மாநில அளவில் புவியியல் பாடத்தில் முதல் இடம் பெற்ற திருவான்மியூர் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவி ஜோதி ஆகியோர் மேயர் சைதை துரைசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சியின் 32 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 510 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 5 ஆயிரத்து 568 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

85.53 சதவீதம் தேர்ச்சி

இதில் மாணவர்கள் 78.65 சதவீதமும், மாணவிகள் 89.6 சதவீதமும் என மொத்தம் 85.53 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாநகராட்சியின் புல்லா அவென்யூ பள்ளி மாணவி வி.வீரச்செல்வி 1,145 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

சைதாப்பேட்டை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.நித்யா, வேளச்சேரி மேல்நிலைப்பள்ளி மாணவி சி.பிரியா ஆகிய 2 பேரும், 1,142 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், புத்தா தெரு, பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆயிஷா சித்திக் 1,138 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மாநில அளவில் முதல் இடம்

மேலும், திருவான்மியூர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி செல்வ ஜோதி புவியியல் பாடத்தில் 198 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். 2012-2013-ம் ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சுப்புராயன் மற்றும் நெசப்பாக்கத்தை சேர்ந்த சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் இரண்டு பள்ளிகளுக்கும் சென்னை மாநகராட்சியின் சார்பில் தலா ரூ.1 லட்சம் பள்ளியின் மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதிய 32 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 25 பள்ளிகள் 80 சதவிகிதத்திற்கு மேற்பட்ட தேர்ச்சியை பெற்றுள்ளன.

மேல்படிப்பு செலவுகளை மேயர் ஏற்றார்

சென்னை மாநகராட்சி கல்வி துறையின் சார்பில் மாணவ-மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுத்ததன் அடிப்படையில் இந்த அளவிற்கு மாணவ-மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி இன்றைய தினம் பரிசுகள் பெற்ற 5 மாணவிகளின் மேல் படிப்பு செலவுகள் யாவும் எனது சொந்த செலவில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு சைதை துரைசாமி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர், துணை மேயர் பா.பெஞ்சமின், இணை கமிஷனர்(கல்வி) தி.ந.வெங்கடேஷ், கல்வி அதிகாரி கே.ரவிச்சந்திரன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

ஒரு சதவீதம் அதிகரித்தது மாநகராட்சி தேர்ச்சி விகிதம்

Print PDF
தினமலர்            10.05.2013

ஒரு சதவீதம் அதிகரித்தது மாநகராட்சி தேர்ச்சி விகிதம்

மதுரை:மதுரை மாநகராட்சி பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம், கடந்த ஆண்டை விட ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது.மாநகராட்சியின் 14 பள்ளிகளில், 575 மாணவர்களில் 358 பேரும், 1,954 மாணவிகளில் 1,909 பேரும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம், கடந்த ஆண்டு 92.16 ஆக இருந்த தேர்ச்சி விகிதம், இம்முறை 93.11 ஆக அதிகரித்துள்ளது.

சேதுபதி பாண்டித்துரைப் பள்ளி மட்டும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. திரு.வி.க., பள்ளி 99.19, பொன்முடியார் பெண்கள் பள்ளி 98.58 சதவீதம் தேர்ச்சி பெற்றன. அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் டி.மீனலோசினி 1158 மதிப்பெண் பெற்று, மாநகராட்சி பள்ளிகளில் முதலிடம் பிடித்தார். வெள்ளிவீதியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆர்.ஜோதி 1147, எஸ்.ஜெயலட்சுமி 1122 மதிப்பெண் பெற்று அடுத்த இரண்டு இடங்களை பிடித்தனர். மாணவிகளுக்கு மேயர் ராஜன் செல்லப்பா, கமிஷனர் நந்தகோபால் பரிசுகள் வழங்கினர். கல்வி அதிகாரி மதியழகுராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 


Page 17 of 111