தினமலர் 04.09.2013
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மன கட்டுப்பாடு ‘கவுன்சிலிங்’
சென்னை:மாநகராட்சி பள்ளி மாணவர்களின் மனநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த, கவுன்சிலிங் வழங்கும் பணிகள், இம்மாதம் துவங்கப்பட உள்ளன.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 9 முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு பொது கவுன்சிலிங் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்த ஆண்டு, மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள, 70 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், இந்த கவுன்சிலிங் வகுப்புகள், இம்மாத இறுதிக்குள் துவங்கப்பட உள்ளன.
கவுன்சிலிங் செய்ய தகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கு பி.எஸ்சி., மனோதத்துவம் படித்தவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். முதல்கட்டமாக, 80 விண்ணப்பங்கள் மாநகராட்சிக்கு வந்தன.
இதில், எட்டு பேர் மட்டுமே தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இரண்டாம் கட்ட நேர்முக தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது.
அதில், ஆறு பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களை கொண்டு மண்டலத்திற்கு இருவர் வீதம், ஏழு மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் கவுன்சிலிங் வகுப்புகள் நடைபெறும்.
மதிய நேரத்தில் வகுப்புகள் நடைபெறும் என்றும், இதில், மாணவர்களின் தனிப்பட்ட பிரச்னைகள் கண்டறியப்பட்டு, அதில் இருந்து அவர்கள் மீள கவுன்சிலிங் வழங்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.