Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Education

24,000 பள்ளி மாணவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸில் சீருடை: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

 தி இந்து        24.05.2018

24,000 பள்ளி மாணவர்களுக்கு கோ-ஆப்டெக்ஸில் சீருடை: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 24,000 பேருக்கு இலவசமாக 2 செட் சீருடைகளை வழங்குவதற்காக ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் துணிகளை கொள்முதல் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அவர்களின் சொந்த செலவிலேயே சீருடைகளை வாங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2 செட் சீருடைகளை இலவசமாக வழங்கி வருகிறது.

2018-19 நிதியாண்டில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 24,195 என மாநகராட்சி நிர்வாகம் கணக்கிட்டுள்ளது. இம்மாணவர்களுக்கு 2 செட் சீருடைகளை இலவசமாக வழங்க உள்ளது. அதற்கான துணிகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் வாங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளிகள் திறக்கப்படும்போது, அவர்களுக்கு சீருடைகளை வழங்கும் விதமாக பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

 

போட்டி தேர்வுக்கு வழிகாட்டும் மதுரை மாநகராட்சி வளாகம்: 4,000 பேர் அரசு பணியில் சேர உதவியது

Print PDF

தி இந்து           02.06.2017

போட்டி தேர்வுக்கு வழிகாட்டும் மதுரை மாநகராட்சி வளாகம்: 4,000 பேர் அரசு பணியில் சேர உதவியது

மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மர நிழல்களில் குழுக்களாக படித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் இளைஞர்கள். படங்கள்: ஆர்.அசோக்.
மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மர நிழல்களில் குழுக்களாக படித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் இளைஞர்கள். படங்கள்: ஆர்.அசோக்.

மதுரை மாநகராட்சி, காந்தி மியூசியம் வளாகம் 4 ஆயிரம் பேரை மத்திய, மாநில அரசு பணிகளுக்கு அனுப்பியதோடு, போட்டித் தேர்வர்களுக்கும் வழிகாட்டியாக உள்ளது.

வேலைவாய்ப்பு அலு வலகங்களில் பதிவு செய்தால் மட்டுமே, அரசு பணி என்ற நிலை குறைந்து, அரசின் 90 சதவீத துறைகளில் பணியில் சேர போட்டித் தேர்வில் தேர்வானால் மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.

டிஎன்பிஎஸ்சி, வங்கி போட்டித் தேர்வுகளுக்கான ஆர்வம் அதிகரிப்பால் அதற்கான தனியார் பயிற்சி மையங்களும் பெருகிவிட்டன. தனியார் பயிற்சி மையங்கள் சிலருக்கு பயனுள்ளதாக இருந்தாலும், கட்டணம் செலுத்த இயலாத ஏழை இளைஞர்களுக்கு திறந்தவெளி ‘ஸ்டடி சர்க்கிள்’ வளாகமே உதவுகிறது. சமீபகாலமாக தென் மாவட்ட இளைஞர்களுக்கு மதுரை மாநகராட்சி அலுவலகம், காந்தி மியூசியம் மற்றும் பழநி ஆயக்குடி திறந்தவெளி பயிற்சி வளாகங்கள் பெரிதும் நம்பிக்கையை அளித்துள் ளன.

1994-ம் ஆண்டு காலகட்டத்தில் மதுரை சட்டக்கல்லூரி உட்பட சில கல்லூரி மாணவர்கள் மதுரை காந்தி மியூசியம், மாநகராட்சி வளாகத்தை தேர்ந்தெடுத்து போட்டித் தேர்வுகளுக்கு படிக்கத் தொடங்கினர். படிப்படியாக அரசு பணிக்கு பலர் சென்றதால் தற்போது, அங்கு படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரு வளாகத்திலும் டிஎன்பிஎஸ்சி, வங்கி, ஆசிரியர் வாரிய தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகளுக்கு தயாராகின்றனர்.

தினமும் 800-க்கும் மேற்பட்டோர் குழுக்களாக கூடி, நண்பர்களாக பழகி படிக்கின்றனர். பெண்களும் அதிகமாக படிக்க வருகின்றனர். குறிப்பிட்ட ஒரு பாடத்தை படிக்கும்போது, மற்றவர்கள் கவனிக்கின்றனர். சந்தேகங்களை நிவர்த்தி செய்கின்றனர்.

நிசப்தமான சூழலில் ஒருங்கிணைந்த பயிற்சி வெற்றிக்கு வழிகாட்டுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.


மணிவண்ணன் - மலைச்சாமி

மணிவண்ணன் (கூடல்நகர்):

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே படித்ததால் சில வாய்ப்புகள் நழுவின. தற்போது முழுநேரமாக படிக்கிறேன். 1990-களில் இங்கு படித்து அரசு பணியில் இருப்பவர்கள் இங்கு வந்து அனுபவங்களை சொல்வது பயன் தருகிறது. விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், சங்கரன்கோவில், நெல்லை, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், ராமநாதபுரம் உட்பட தென் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் மதுரையில் அறை எடுத்து தங்கி படிக்கின்றனர். இங்கு வந்தால் போட்டித் தேர்வு ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. இவ்வளாகத்தில் படிக்க முடிந்த உதவியை மாநகராட்சி நிர்வாகம் செய்கிறது என்றார்.

ஏ.மலைச்சாமி (மதுரை):

நான் விருதுநகரில் கூட்டுறவுத் துறையில் உயர் அலுவலராக பணிபுரிகிறேன். 1994-ல் இங்கு படிக்கத் தொடங்கி 2000-ம் ஆண்டில் பணியில் சேர்ந்தேன். இங்கு வருவோர் நம்பிக்கை இழக்கக் கூடாது. ஒவ்வொரு தேர்விலும் சக நண்பர்கள் பணியில் சேரும்போது நம்பிக்கை பிறக்கும். நாங்கள் படிக்கும்போது, போட்டித் தேர்வு மிக குறைவு. தற்போது அதிக தேர்வுகள் வருகின்றன. மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை அதிகமாக எழுதலாம். விடுமுறையில் வருகிறோம். தேவையான உதவியை செய்ய தயாராக உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இங்கு வந்தால் வழிகாட்டப்படும் என்றார்.

கோபிநாத் - பூமிநாதன்

மனம் தளரக் கூடாது

எஸ்.கோபிநாத் (மதுரை):

1994-ல் இவ்வளாகத்தில் 30 பேர் குழுவாக படிக்கத் தொடங்கினோம். நாங்களே முதல் குழு. எஸ்எஸ்சி தேர்வு மூலம் ரயில்வே துறையில் சேர்ந்தேன். நிதித்துறையில் மூத்த அதிகாரியாக பணிபுரிகிறேன். என்னுடன் படித்த 30 பேரும் பல்வேறு பணிகளில் உள்ளனர். முதலில் போட்டித் தேர்வர்களுக்கு நம்பிக்கை வேண்டும். நேர்காணல் போன்ற தேர்வில் தோல்வியைத் தழுவினாலும், மனம் தளரக் கூடாது.

இங்கு படிப்பவர்கள் ஒவ்வொரு தேர்விலும் 30 - 40 பேர் பணிக்குச் செல்கின்றனர். கடந்த 23 ஆண்டுகளில் சுமார் 4000 பேர் மத்திய, மாநில அரசு துறை பணிகளில் சேர்ந்துள்ளனர். இவ்வளாகம் வந்தாலே ஏதாவது ஒரு தேர்வில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை வருகிறது.

இங்கு தேர்வுக்கு வழிகாட்டுதலும் கிடைக்கும். டிஎன்பிஎஸ்சி தவிர, பிற தேர்வுகளையும் எழுதவேண்டும். என்னை போன்ற சிலர் விடுமுறையில் வந்து முடிந்த ஆலோசனையைத் தருகிறோம் என்றார்.

தேர்வுக்கு தயாராகும் பூமிநாதன் (கோ. புதூர்):

தனியார் பயிற்சி மையம் ஒன்றில் படித்தேன். அடிப்படையை மட்டுமே தெரிந்து கொள்ளலாம். இங்கு வந்தபின் குழுவாகச் சேர்ந்து படிப்பது பயனுள்ளதாக உள்ளது. அடுத்த தேர்வில் வெற்றிபெற்று விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

 

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கைகொடுத்த ‘ஸ்பார்க்’ திட்டம்: 10, 12 ம் வகுப்பு தேர்வில் உயர் மதிப்பெண் பெறுவது அதிகரிப்பு

Print PDF

தி இந்து       22.05.2017

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கைகொடுத்த ‘ஸ்பார்க்’ திட்டம்: 10, 12 ம் வகுப்பு தேர்வில் உயர் மதிப்பெண் பெறுவது அதிகரிப்பு

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட ‘ஸ்பார்க்’ திட்டத்தால், இந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி கட்டுப் பாட்டில் மொத்தம் உள்ள 281 பள்ளிகளில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 70 உயர்நிலைப் பள்ளிகள் ஆகும். இப்பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் மற்றும் உயர் மதிப்பெண்கள் பெறுவது குறைவாக இருந்தது.

இந்நிலையில், 10, 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும், உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், மாணவர்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் ‘தீப்பொறி’ என பொருள்படும் ‘ஸ்பார்க்’ என்ற புதிய திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் சோதனை அடிப்படையில் கடந்த ஜனவரியில் தொடங்கியது. இத்திட்டத்தால் தற்போது மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், உயர்மதிப்பெண் பெறுவதும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ‘ஸ்பார்க்’ திட்டத்தை சோதனை அடிப்படையில் தொடங்கி இருக்கிறோம். அதில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்து, பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் என வகை பிரித்து, அவர்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அதற்காக, 5 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமித்து, காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தினோம். மேலும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டது. கூடுதல் பயிற்சி ஏடுகள் மூலமும் பயிற்சி அளிக்கப்பட்டது. காலை உணவும் அளிக்கப்பட்டது.

இதனால், கடந்த ஆண்டு 86.21 சதவீதமாக இருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 88.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் 1100-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 136 ஆக (கடந்த ஆண்டு 61 மாணவர்கள்) உயர்ந்துள்ளது. 1000-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 524 ஆக (கடந்த ஆண்டு 326 மாணவர்கள்) உயர்ந்துள்ளது. பல்வேறு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 119 ஆக (கடந்த ஆண்டு 51 மாணவர்கள்) உயர்ந்துள்ளது.

மேலும் 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி அளித்த பள்ளிகளின் எண்ணிக்கை 18 ஆக (கடந்த ஆண்டு 16 பள்ளிகள்) உயர்ந்துள்ளது.

10-ம் வகுப்பு தேர்வில் 1.8 சதவீதம் தேர்ச்சி குறைந்தாலும், 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு பாடங்களில் 100 சதவீதம் மதிப் பெண்கள் வாங்கிய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 78 ஆக இருந்தது. இந்த ஆண்டு 189 ஆக உயர்ந்துள்ளது. 450-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 312 (கடந்த ஆண்டு 249) ஆக உயர்ந்துள்ளது. அதற்கு ‘ஸ்பார்க்’ திட்டம் செயல்படுத்தப்பட்டதுதான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »


Page 1 of 111