Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய பணிகளுக்கு தமிழக அரசு ரூ.879.78 கோடி நிதி ஒதுக்கீடு சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

Print PDF

தினத்தந்தி               21.06.2013

மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய பணிகளுக்கு தமிழக அரசு ரூ.879.78 கோடி நிதி ஒதுக்கீடு சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

சென்னை பெருநகர் கழிவுநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை பெருநகர் வளர்ச்சித்திட்டம் 2012–2013–ன் கீழ் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்த வேண்டிய பணிகளுக்கு தமிழக அரசு ரூ.879.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அண்மையில் சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்ட நொளம்பூர், காரம்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், ராமாபுரம், நந்தம்பாக்கம், ஒக்கியம்–துரைப்பாக்கம் மற்றும் மணப்பாக்கம், ஆகிய 9 இடங்களில் முழுமையான குடிநீர் திட்டம் மற்றும் கத்திவாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், ராமாபுரம் ஆகிய 4 இடங்களில் கழிவுநீர் அகற்றும் திட்டங்களுக்காக ரூ452.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. திட்டப் பணிகள் 24 மாதங்களில் செய்து முடிக்கப்படும். இத்திட்டங்களின் வாயிலாக மொத்தமாக 7 ஆயிரத்து 527 குடிநீர் வீட்டு இணைப்புகள் வழங்கப்படும். குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவதன் மூலம் 49 ஆயிரத்து 230 மக்கள் பயன் பெறுவார்கள்.

இவ்வாறு டாக்டர் பி.சந்திரமோகன் கூறியுள்ளார்.      
 

சூரியசக்தி விளக்கு அமைக்க ரூ.2 லட்சம் நிதி

Print PDF

தினமணி               18.06.2013 

சூரியசக்தி விளக்கு அமைக்க ரூ.2 லட்சம் நிதி

பள்ளிகொண்டா பேரூராட்சியில் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்தில் சூரிய சக்தி தெருமின்விளக்குகள் அமைக்க பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.2 லட்சத்துக்கான வங்கி வரைவோலை ஆட்சியர் பொ.சங்கரிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

வரைவோலையை பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் பா.பாஸ்கரன் வழங்கினார். இத்திட்டத்தில் 20 தெருவிளக்குகள் பள்ளிகொண்டா பேரூராட்சியில் அமைக்கப்படவுள்ளன.

பேரூராட்சிகளில் மின்கட்டணச் சுமையைக் குறைக்க அலுவலகக் கட்டடங்களிலும், தெருக்களிலும் சூரிய சக்தியில் எரியும் மின்விளக்குகளை அமைத்திட ஏற்கெனவே பேரூராட்சி இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்பு நிதி வழங்கப்பட்டதாக பேரூராட்சிகள் உதவி இயக்குநர் எஸ்.எம்.மலையமான் திருமுடிக்காரி தெரிவித்தார்.

 

'நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு, நிதி ஒதுக்கியவர் முதல்வர்'

Print PDF
தினமணி           01.03.2013

'நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு, நிதி ஒதுக்கியவர் முதல்வர்'


காங்கயம் நகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கியவர் முதல்வர் ஜெயலலிதா என நகர்மன்றத் தலைவர் ஜி.மணிமாறன் கூறினார்.

முதல்வர் ஜெயலலிதாவின் 65-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காங்கயத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வி முருகேசன் தலைமை வகித்தார். 8-ஆவது வார்டு கழகச் செயலர் ஆர்.சசிகுமார் வரவேற்றார்.

விழாவில் கலந்துகொண்டு நகர்மன்றத் தலைவர் ஜி.மணிமாறன் பேசியது:

காங்கயம் நகராட்சியின் வளர்ச்சிக்காக 2 ஆண்டுகளில் ரூ.5 கோடி நிதியை முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். சென்ற நிதி ஆண்டில் மட்டும் புதிய சாலைகள் அமைக்கவும், மின் மயானம் அமைக்கவும், நவீன ஆடுவதைக் கூடம் கட்டுவதற்காகவும், குப்பைகளை அகற்றுவதற்காக ஹைட்ராலிக் லாரிகள் மற்றும் நவீன குப்பைத் தொட்டிகள் வாங்கவும், குடிநீர், ஆழ்குழாய், தொட்டிகள் அமைக்கவும் ரூ.3 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கியிருந்தார். இப்பணிகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளன.

நடப்பு நிதி ஆண்டில் சாலை மேம்பாடு, சாக்கடை கால்வாய்கள் அமைத்தல், ஜேசிபி வண்டி மற்றும் குப்பைத் தொட்டிகள் வாங்குவதற்காகவும், குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் ரூ.2 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

காங்கயம் பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் திட்டத்துக்கு, சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.50 லட்சம் ஒதுக்க வேண்டும் என்றார்.

காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், தலைமைக் கழகப் பேச்சாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.வி.மார்க்கண்டேயன், ஜெயலலிதா பேரவைச் செயலர் என்.எம்.எஸ்.பழனிசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் சி.கந்தசாமி, உறுப்பினர்கள் ஏ.பி.துரைசாமி, சரஸ்வதி, பா.கோமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Last Updated on Friday, 01 March 2013 09:57
 


Page 4 of 37