Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Finance

வளர்ச்சி பணிக்கு மாநகராட்சிக்கு நிதி கொடுத்தும் பலனில்லை

Print PDF
தின மலர்                26.02.2013

வளர்ச்சி பணிக்கு மாநகராட்சிக்கு நிதி கொடுத்தும் பலனில்லை

தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ. 25 லட்சம் வழங்கியும், திட்டப்பணியை துவக்காமல் இழுத்தடிக்கும் மாநகராட்சி நிர்வாகம் மீது எம்.பி., நடராஜன், பொதுமக்களுடன் வந்து கலெக்டரிடம் புகார் தெரிவித்தார். பணியை 15 நாட்களில் துவக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, பகிரங்கமாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.கோவை உக்கடம் வாளாங்குளம் அருகே, வின்சென்ட் ரோடு பகுதி உள்ளது. இங்கு 140 குடும்பங்கள், குளக்கரையை ஒட்டி வசித்து வருகின்றன; இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.

இங்குள்ள குடியிருப்புகளில், அடிக்கடி பாம்புகள் படையெடுத்து வருகின்றன. இது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மழைக்காலங்களிலும், வறட்சி காலங்களிலும் விஷ ஜந்துக்கள் தொல்லையால் அவதிப்பட்டு வந்த மக்கள், குளக்கரையில் குடியிருப்பு பகுதியை ஒட்டி, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என, பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர்.ஆனால், இந்த கோரிக்கைக்கு, நீண்ட காலமாக மாநகராட்சி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. போதிய நிதி இல்லை என்ற காரணத்தை கூறி, பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனினும், மாநகராட்சி அதிகாரிகள், கலெக்டர், எம்.எல்.ஏ., எம்.பி., என, பலரையும் சந்தித்து, பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, கோவை எம்.பி., நடராஜன், "தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் தருகிறேன்; மீதித் தொகையை மாநகராட்சி ஏற்றுக்கொண்டு, தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும்' என, பரிந்துரைத்தார். அதன்படி, ரூ. 16 லட்சம் கூடுதல் நிதியுடன் மொத்தம் ரூ. 41 லட்சம் செலவில், தடுப்புச்சுவர் கட்டித்தர மாநகராட்சி நிர்வாகம் ஒப்புக் கொண்டது. எம்.பி., நடராஜன் தனது தொகுதி வளர்ச்சி நிதியாக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வழியாக,ரூ. 25 லட்சம் வழங்கியும், மாநகராட்சி பணியை துவக்கவில்லை. வெவ்வேறு காரணங்களை கூறி, பணியை துவக்காமல் இழுத்தடித்து வந்தது.

மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை விசாரித்தும், பொறுப்பான பதில் கிடைக்காததால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், மீண்டும் எம்.பி.,யிடம் முறையிட்டனர். எம்.பி.,யிடமும், மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பான பதிலை தரவில்லை. நிதி அளித்தும் பணியை துவக்காமல், மெத்தனம் காட்டிய மாநகராட்சியை கண்டித்து, வின்சென்ட் நகர் பொதுமக்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ., அமைப்பு நிர்வாகிகளுடன் நேற்று கலெக்டர் கருணாகரனை சந்தித்து எம்.பி., நேரில் புகார் அளித்தார்.கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த எம்.பி., நடராஜன், "விரைவில் பணியை துவக்காவிட்டால், பொதுமக்களை திரட்டி மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவேன்' என, எச்சரிக்கை விடுத்தார்.

கலெக்டரை சந்தித்த பின், எம்.பி., நடராஜன் கூறியதாவது:

கோவை மாநகராட்சி 82வது வார்டு, வின்சென்ட் ரோடு பகுதியில் விஷ ஜந்துக்கள் தொல்லையால் மக்கள் பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர். குளத்தை ஒட்டி தடுப்புச்சுவர் கட்ட லோக்சாபா தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ. 25 லட்சம் வழங்கி, ஆறு மாதங்களாகிவிட்டன. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் இன்னும் பணியை துவக்காமல், மிகவும் மெத்தனமாக உள்ளது. பல முறை வலியுறுத்தியும், பணியை இன்னும் துவங்கவே இல்லை.பொதுமக்கள் போராட்ட நடவடிக்கையில் இறங்குவதாக தெரிவித்துள்ளனர். இதனால், கலெக்டரை சந்தித்து, மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளேன். புதிய கமிஷனர் பொறுப்பேற்பது வரை, மாநகராட்சி கால அவகாசம் கோரியுள்ளது. அதிகபட்சமாக, 10 முதல் 15 நாட்கள் கால அவகாசம் தருகிறோம். அதற்கு மேல், பணியை துவக்காமல் இழுத்தடித்தால், மாநகராட்சி அலுவலகம் முன், பொதுமக்களுடன் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்.இவ்வாறு, எம்.பி., நடராஜன் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 26 February 2013 11:27
 

பனமரத்துப்பட்டி ஏரி மரங்கள் `5.11 லட்சத்துக்கு ஏலம் மாமன்ற கூட்ட முடிவுக்கு காத்திருப்பு

Print PDF
தினகரன்           31.08.2012

பனமரத்துப்பட்டி ஏரி மரங்கள் `5.11 லட்சத்துக்கு ஏலம் மாமன்ற கூட்ட முடிவுக்கு காத்திருப்பு

சேலம்,: சேலம் பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள பலன் தரும் மரங்கள் `5.11 லட்சத்திற்கு ஏலம் போனது.

சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமாக சுமார் 2300 ஏக்கரில் பனமரத்துப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்து நின்று போனதையடுத்து, ஏரி முழுவதும் வேலிகருவை மரங்கள் முளைத்தன. மேலும் ஏரியில் 1772 தென்னை, 132 பனை, 20 புளியமரங்கள், 8 மாமரங்கள், 2 கொய்யா, 7 நெல்லிமரம், ஒரு பாக்குமரம் என மொத்தம் 1942 மரங்கள் உள்ளன. இந்த மரங்களை ஏலம் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி தென்னை, பனை உள்ளிட்ட 1942 மரங்களையும் ஓராண்டுக்கு பராமரித்து அனுபவித்துக்கொள்ள 2 முறை ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஆனால் வியாபாரிகள் யாரும் வரவில்லை. இந்நிலையில் கடந்த 14ம் தேதி மாநகராட்சி மைய அலுவலகத்தில் 3வது முறையாக நடந்த ஏலத்தில், 3 வியாபாரிகள் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக `2 லட்சத்து 2 ஆயிரத்துக்கு முருகன் என்பவர் ஏலம் எடுத்தார். இதுகுறித்து ஆலோசித்த மாநகராட்சி கமிஷனர் அசோகன், மறு ஏலம் நடத்த உத்தரவிட்டார்.

இதன்படி சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று மறு ஏலம் நடந்தது. உதவி கமிஷனர் கணேசன் தலைமையில் நடந்த இந்த ஏலத்தில் 3 வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் `5.11 லட்சத்துக்கு மணிகண்டன் என்ற வியாபாரி 1942 மரங்களையும் ஏலம் எடுத்தார். இதுகுறித்து கமிஷனர் அசோகனிடம் கேட்டபோது, ‘பனமரத்துப்பட்டி ஏரியில் உள்ள 1942 மரங்களும் உச்ச தொகையாக `5.11 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மரங்களை ஓராண்டுக்கு பராமரித்து பலனை அனுபவிக்க அனுமதி வழங்கலாமா என மாமன்ற கூட்டத்தின் முடிவுக்கு விட உள்ளோம். அதில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து, இறுதி முடிவு எடுக்கப்படும்,‘ என்றார்.
 

புதை சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற அழைப்பு

Print PDF

தினமணி                     30.08.2012

புதை சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற அழைப்பு

பெரம்பலூர், ஆக. 29: பெரம்பலூர் நகரில் புதை சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் போ. குருசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூர் நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்தத் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடுவதற்காக நகராட்சி நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

பெரம்பலூரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கட்டடத்தின் பரப்பளவுக்கு உரிய வைப்புத் தொகையை நகராட்சிக்கு செலுத்துவதுடன், தங்களது கட்டடங்களில் உள்ள கழிவுநீரை குழாய்கள் மூலம் ஒருங்கிணைத்து, வீட்டில் ஆய்வுத் தொட்டியும், வணிக நிறுவனம், தொழில்சாலை உள்ளிட்ட இதர இணைப்புகளுக்கு தடுப்புச்சுவர் தொட்டியும் தங்களது சொந்த செலவில் அமைத்த பிறகு தெரிவித்தால், முன்னுரிமை அடிப்படையில் புதை சாக்கடை இணைப்பு வழங்கப்படும்.

 500 சதுர அடிக்கு வீட்டு உபயோகத்துக்கு முன்தொகையாக ரூ. 3 ஆயிரமும், மாதம் ரூ. 75-ம், வணிக உபயோகத்துக்கு ரூ. 6 ஆயிரமும், மாதம் ரூ. 150-ம், 501-1200 சதுர அடிக்கு வீட்டு உபயோகத்துக்கு ரூ. 4 ஆயிரமும், மாதம் ரூ. 85-ம், வணிக உபயோகத்துக்கு ரூ. 12 ஆயிரமும், மாதம் ரூ. 255-ம், 1201- 2400 சதுர அடிக்கு வீட்டு உபயோகத்துக்கு ரூ. 5 ஆயிரமும், மாதம் ரூ. 100-ம், வணிக நிறுவனங்களுக்கு ரூ. 15 ஆயிரமும், மாதம் ரூ. 300-ம், 2401 சதுர அடிக்கு மேல் வீட்டு உபயோகத்துக்கு ரூ. 6 ஆயிரமும், மாதம் ரூ. 120-ம், வணிக இணைப்புக்கு ரூ. 15 ஆயிரமும், மாதம் ரூ. 600-ம் செலுத்த வேண்டும்.
சிறப்பு இனத்தில் முன்தொகை இல்லை.

வீட்டு உபயோகத்துக்கு ரூ. 140-ம், வணிக உபயோகத்துக்கு ரூ. 1400-ம் வசூலிக்கப்படும். மேலும், அனைத்து இணைப்புகளுக்கும் இணைப்பு கட்டணம் ரூ. 100 செலுத்த வேண்டும்.

பெரம்பலூர் நகரப் பொதுமக்கள் இணைப்பு கட்டணங்களை உடனே செலுத்தி, புதை சாக்கடை திட்டம் செயல்பட நகராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Last Updated on Thursday, 30 August 2012 11:12
 


Page 5 of 37