தினமணி 31.07.2009
அரக்கோணம் நகராட்சி: வறட்சிப் பணிகளுக்கு ரூ.30 லட்சம்
அரக்கோணம், ஜூலை 30: அரக்கோணம் நகராட்சிக்கு வறட்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு துறையும், சென்னை பத்திரிகை தகவல் அலுவலகமும் இணைந்து அரக்கோணத்தில் பாரத் நிர்மாண் கருத்தொளி கண்காட்சியை கடந்த 26ந் தேதி முதல் நடத்தி வருகின்றன. இதன் நிறைவு நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்ற வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் பேசியது:
அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 கோடி நிதியில் 180 பணிகள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரக்கோணம் நகராட்சி மற்றும் திருத்தணி நகராட்சி இணைந்து கூட்டுக் குடிநீர் திட்டம் 8.75 கோடியில் பணி நடைபெறுகிறது. 15 அல்லது 20 நாட்களில் இது நிறைவேற்றப்படும்.
அரக்கோணம் நகராட்சிக்கு வறட்சி பணிகளுக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. நகரமன்றத் தலைவர் விஜயராணிகன்னையன் கேட்டுக்கொண்ட குடிநீர் பிரச்னைக்காக மேலும் நிதி ஒதுக்கப்படும் என்றார் ஆட்சியர் ராஜேந்திரன்.
வேலூர் மண்டல வனப்பாதுகாவலர் அ.வ.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். வேலூர் களவிளம்பர அலுவலர் சிவக்குமார் வரவேற்றார். பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் க.ரவீந்திரன், அரக்கோணம் நகரமன்றத் தலைவர் விஜயராணிகன்னையன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மோகன், முன்னாள் நகரமன்ற தலைவர் கன்னையன், வேலூர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் ஆர்.முகுந்தநாயுடு, கால்நடைதுறை துணை இயக்குநர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.