தினகரன் 15.11.2010
ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு 10 ஆண்டுகளில் மாநகராட்சிக்கு ரூ11,866 கோடி கூடுதல் நிதிச்சுமை
மும்பை, நவ. 15: ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிக்க வகை செய்யும் 6வது சம்பள குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் மாநகராட்சிக்கு கூடுதலாக ரூ11,866 கோடி நிதிச்சுமை ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.
மத்திய அரசின் 6வது ஊதிய குழு பரிந்துரைகள் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பாக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மும்பை மாநகராட்சி ஊழியர் சங்கங்கள் நிராகரித்து விட்டன. ஊதிய உயர்வு விகிதம் குறைவாக உள்ளது என்று ஊழியர்கள் சங்கங்கள் கூறின.
இதையடுத்து ஊதிய உயர்வு தொடர்பாக வரைவு ஒன்றை தயாரிக்க கடந்த ஜூலை மாதம் ஹக்கிம் குழுவை மாநகராட்சி நிர்வாகம் அமைத்தது. 6வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்தும் வழிமுறைகள் குறித்த அம்சங்கள் இந்த திட்ட வரைவில் இடம்பெற்றுள்ளது. ஹக்கிம் குழுவின் இந்த வரைவு நேற்று முன்தினம் மாநகராட்சியிடம் சமர்பிக்கப்பட்டது.
இது பற்றி கமிஷனர் ஸ்வாதீன் ஷத்திரியா கூறியதாவது:
முன்பு கொண்டு வரப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஊழியர்கள் சங்கங்கள் இடையே ஆதரவு இல்லை. அந்த ஒப்பந்தப்படி ஊதிய விகிதங்களை மாற்றி அமைத்தால் மாநகராட்சிக்கு 10 ஆண்டுகளில் ரூ8,527 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். ஆனால் தற்போதுள்ள ஹக்கிம் குழு வரைவுபடி 10 ஆண்டுகளில் ரூ11,866 கோடி நிதிச்சுமை ஏற்படும்.
இந்த குழுவின் வரைவு ஊழியர் சங்கங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கருத்துகள் வரவேற்கப்பட்டு அதில் உள்ள அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும். திருத்தி அமைக்கப்பட்ட சம்பள விகிதம் வரும் 20ம் தேதி முதல் அமலுக்கு வரும். இவ்வாறு ஷத்திரியா கூறினார். மாநகராட்சியில் 4ம் நிலை ஊழியர்களின் ஊதியம் 18 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. மாநகராட்சியின் மொத்த ஊழியர்களான 1.27 லட்சம் பேரில் சுமார் 70 சதவீதம் பேர் 4ம் நிலை ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.